இந்த நாட்களில் பணப்பரிவர்த்தனை செய்யக் கூடாது!
ஜோதிட ரீதியாக பார்க்கும் போது ஜாதகத்தில் சனி வலிமை பெற்றவர்கள் உழைப்பாளிகளாக இருப்பார்கள். அவர்கள் சொந்த தொழில் செய்பவர்களாகவும், பணப்புழக்கம் அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவ்வளவு ஏன், சனி வலிமை பெற்றவர்கள் பரம்பரை பரம்பரையாக செய்யும் தொழிலை கூட செய்பவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தார்களோ அந்த உழைப்பைத் தான் புதன் வலிமை பெற்றவர்கள் ஏமாற்றி பறிப்பார்கள். ஆனால், தொழிலின் ஆழம் அவர்களுக்கு தெரியாது. புதனின் வலிமை குறைவால் சரியாக திட்டமிடத் தெரியாது. தவறான முதலீடு (குறிப்பாக பங்கு சந்தை) செய்வதுடன், தவறான வாடிக்கையாளரை தேர்வு செய்து பெரும் முதலீட்டை இழப்பார்கள். அத்துடன் ஜாமீன் கையெழுத்து போட்டு அதற்கு பொறுப்பேற்று ஏமாறுவார்கள்.
சனி மற்றும் புதன் கூட்டு சேர்க்கையுடன் கேது தொடர்பு பெறுபவர்கள் தவறான தொழில் கூட்டாளிகளை தேர்வு செய்து அவர்களோடு தொடர்பு கொண்டு கோர்ட் வழக்குகளை சந்திப்பார்கள். இவர்கள் ஜாதகத்தில் புதன், சனி சம்பந்தம் பெற்று மறைவு ஸ்தானமான 6, 8, 12-ல் இருக்கும். இவர்கள் தொழிலை மிக கவனமாக நடத்த வேண்டும். கோச்சார புதன், சனியுடன் சம்பந்தம் பெறும் போது இழப்பு அதிகமாகவும் மற்ற நேரங்களில் குறைவாகவும் இருக்கிறது. அத்துடன் புதன், சனி தசை நடைபெறும் போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
மிகச் சுருக்கமாக புதன், சனி சம்பந்தம் பெற்றவர்கள் முடிவெடுக்கும் திறமை இல்லாமல் ஏமாறுபவர்களாகவோ, ஏமாற்றுபவர்களாகவோ, ஏமாறப்போகிறவர்களாகவோ இருக்கிறார்கள்.
பணப்பரிவர்த்தனை செய்யக் கூடாத நாட்கள்:
ஒருவருக்கு ஏற்படும் நன்மையோ, தீமையோ, யோகமோ, யோகமின்மையோ அதை அனுபவிப்பதன் மூலம் பிறவிப் பயனை அனுபவிக்கிறோம். ஒருவருடன் ருண பந்தம் இருந்தால் மட்டுமே நட்பு, பகை, கொடுக்கல், வாங்கல் போன்ற நிகழ்வுகள் உண்டாகும். ருண பந்தம் இல்லாத பண பரிவர்த்தனைக்கு வாய்ப்பு குறைவு.
பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய இந்த பண்ணிரெண்டு நட்சத்திரங்களில் யாருக்காவது பணம் கொடுத்தால் திரும்பி வராது. நகை அடமானம் வைக்க கூடாது. ஜாமீன் போடக்கூடாது. இந்த 12 நட்சத்திரங்களின் அதிதேவதைகள் உக்கிர சுபாவம் உடையவர்களாக இருப்பதால் இந்த நாட்களில் பணப் பரிவர்த்தனையை தவிர்க்கவும்.
பரிகாரம்: ஒருவருக்கு துன்பம் ஏற்படும் போது காலச்சக்கரத்தினால் பக்தர்களை காப்பாற்றக் கூடியவர் பைரவர் என்பதால் ஆபதுத்தாரண பைரவர் என்று அழைக்கப்படுகிறார். ஆபதுத் தாரணர் – என்றால் பக்தர்களின் துன்பத்தை அடியோடு அழிப்பவர் என்று பொருள்படும்.
வளமும், நலமும் பெற்று வாழ சீர்காழி அருள்மிகு ஸ்ரீ சட்டை நாதரை மானசீகமாக ஆத்மார்த்தமாக வழிபட்டால் இழந்த பணம் எந்த வடிவிலாவது திரும்பி வரும். ஜாமீன் கையெழுத்தால் ஏற்பட்ட பண பிரச்சினை தீரும். கொடுத்த பணம் வசூல் ஆகும். உழைப்பு ஏற்ற வருமானமும் திறமைக்கு உரிய அங்கீகாரமும் கிடைக்கும். மேலும் கர்ம வினை நீங்கி காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
