கோயிலில் திருமணம் செய்வது நல்லதா?
கோயிலில் வைத்து திருமணம் செய்தால் நல்ல பலன் கிடைக்குமா? இல்லையென்றால் வீட்டிலோ, திருமண மண்டபத்தில் வைத்தோ திருமணம் செய்தால் நல்ல பலன் கிடைக்குமா? என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம். நம் முன்னோர்கள் வாழ்ந்த காலங்களில் எல்லாம் திருமணத்தை வீட்டில் வைத்து தான் நடத்தியிருக்கிறார்கள். பல கிராமங்களில் வீடுகளில் வைத்து தான் திருமணம் நடத்தி வருகிறார்கள். வீட்டில் போதுமான இடவசதி இல்லாதவர்கள் தான் கோயிலில் வைத்து திருமணத்தை நடத்தினார்கள்.
அப்படி கோயிலில் வைத்து திருமணம் நடக்கும் போது இறைவனின் சந்நதி முன்பு, அதாவது, இறைசக்தி நிறைந்திருக்கும் இடத்தில் தம்பதியினர் தங்களது வாழ்வில் இணையும் போது தவறு ஏதேனும் நடந்து விடக் கூடாது என்று நம்பினார்கள். மக்களின் பொருளாதார வளர்ச்சி உயர்வடையவே, மண்டபங்களில் திருமணம் செய்யும் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. திருமண மண்டபத்தில் வைத்து திருமணங்களை நடத்துவதில் தவறு இல்லை. ஆனால் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் சரிவரச் செய்கிறோமா என்பது தான் முக்கியம்.
மணவறைக்கு மணமக்களை வாழ்த்த வருபவர்கள் காலணிகளை அணிந்துகொண்டே மேடையேறி வருகிறார்கள். புகைப் படம் மற்றும் வீடியோவிற்காக செயற்கையாக சிரிக்கிறோம், நடிக்கிறோம். மாறாக சம்பிரதாயங்களில் நம் மனம் ஈடுபட மறுக்கிறது. ஹோமகுண்டத்தில் இருந்து எழும் புகையினால் புகைப்படம் தெளிவாக இருப்பதில்லை என்ற காரணத்திற்காக மணவறையில் இருந்து ஹோமகுண்டத்தை தனியாக எடுத்துச் சென்று ஒரு ஓரமாக வைக்கும் நிலை வருகிறது. இந்து மதத்தில் நடக்கின்ற எல்லா சடங்குகளுக்கும் அக்னியே பிரதானம். இவ்வாறு அக்னி சாட்சியாக நடக்கின்ற திருமணத்தில் அக்னியையே ஓரம்கட்டி அணைத்துவிடுகிறார்கள்.
கோயிலில் வைத்து திருமணம் நடத்தினால், மணமக்களின் ஜாதகங்களில் ஏதோ தோஷம் இருக்கிறது, தோஷ நிவர்த்திக்காகத்தான் கோயிலில் வைத்து திருமணத்தை எளிமையாக முடித்துவிட்டார்கள் என்று வாய் கூசாமல் பேசுவார்கள். நிறைய பேர் இது போன்று பேச கேள்விப்பட்டிருப்போம். கோயில் கல்யாணங்களில் ஆடம்பரம் என்று பார்த்தால் எதுவும் இடம் பெறுவதில்லை. கோயிலில் இறைவனின் இருப்பிடம் என்பதால் பயபக்தியுடன் சம்பிரதாயங்களில் நம் கவனத்தை செலுத்துகிறோம். கோயிலுக்குள் காலணி அணிந்து வந்து மணமக்களை வாழ்த்துவதில்லை. ஆதலால், கோயிலில் வைத்து திருமணம் நடத்துவதே சிறந்தது. திருமண மண்டபத்தில் வைத்து திருமணத்தை நடத்துவது தவறு அல்ல. எங்கே, எப்படி நடத்துகிறோம் என்பது தான் முக்கியம்.