Saturday, October 14, 2023
HomeArthamulla Aanmeegamபிதுர் பக்தியின் பயன்

பிதுர் பக்தியின் பயன்

ஸனத்குமார முனிவர், பீஷ்மரை நோக்கி, ‘இராஜ சிரேஷ்டரே! பிதுர்த் தேவர்கள் எழுவர்! கவ்வியவாஹன் அனலன் சோமன், யாமன், அரியமான், அக்நிஷ்வாத்தன். பர்ஹிஷிதன் என்ற அவர்கள் சுவர்க்கத்தில் இருக்கிறார்கள். அவர்களில் நால்வர் தேகத்தோடும் மூவர் தேகம் இல்லாமலும் விளங்குவார்கள் இவர்களில் மூவரைத் தேவர்களும் ஏனைய நால்வரை அந்தணர் முதலான நாற்குலத்தாரும் வழிபடுகிறார்கள். பிதுர்க்களுக்குச் சிரார்த்த காலத்தில் வெள்ளிப்பாத்திரத்தினால் சிரார்த்தஞ் செய்யவேண்டும் மனைவியோடு கூடிய அக்நிமானாயின் சுதா என்னும் சப்தத்தினால் ஹோமம் செய்ய வேண்டும் அல்லது ஜலத்திலோ அல்லது பிராமணனின் கையாலோ ஹோமஞ் செய்ய வேண்டும் அவ்வாறு செய்பவர்கள் இகலோக சவுக்கியத்தையும் பரலோகத்தில் சுவர்க்க லோகத்தையும் அடைவார்கள். தேவகாரியத்தைக் காட்டிலும் பிதுர்க் காரியஞ் சிறந்தது. அதை அதிக பக்தியுடன் செய்யவேண்டும். பிதுர்க் காரியத்தினால் அடையுங்கதியை யோக பலத்தினாலும் அடைய முடியாது!’ என்று கூறி திவ்வியமான ஞானத்தை உபதேசித்து விண்வழியே சென்றார். பீஷ்மரே இனி முன்பு நடந்த ஒரு சரிதத்தைச் சொல்லுகிறேன்.

பரத்வாஜ முனிவரின் மைந்தர்கள் யோக தர்மத்தை அடைந்தும் தம் துர்நடத்தையால் பிரஷ்டர்களானார்கள். வாக்துஷ்டன் குலோதனன், ஹிம்சிரன், பிசுனன் (கோனன்), கபி (குரங்கு) பிதுர்வர்த்தி, என அவர்கள் நடத்தை காரணமாக அப்பெயர்களை பெற்றார்கள். ஸ்வஸ்ரூபன் (தங்கையைரட் சித்தவன்) என்று ஓர் புத்திரனும் இருந்தான். இவர்கள் எழுவரும் பிரஷ்டர்களாகவே இருந்து அப்பிறவிகளை ஒழித்து கவுசிக முனிவருக்கு புதல்வர்களாகத் தோன்றி கர்க்க முனிவரின் சீடர்களாகி குருக்ஷேத்திரத்தில் தங்கள் ஆசிரியருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தார்கள்.

அப்போது கர்க்க முனிவர் அவர்களை நோக்கி வேறோர் ஆசிரமத்திலிருந்து பசுவுங்கன்றும் ஓட்டிக்கொண்டு வரும்படிச் சொன்னார். அவர்கள் எழுவரும் அவ்வாறே சென்று பசுவைக் கன்றுடன் பிடித்துக் கொண்டு வரும் போது அவர்களில் சிலருக்குப் பசியினாலும் அறியாமையானாலும் பாவத்தினாலும் அந்தப் பசுவைக் கொன்று புசிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அவர்கள் அதைக்கூறவே அப்போது கபி ஸ்வஸ்ரூபன் என்பவர்கள் அது பாபம் அவ்வாறு செய்யக் கூடாது! என்று தடுத்தார்கள். பிதுர்வர்த்தி என்பவர் பிதுர்பக்தியுடையவனாக இருந்ததனால் நீங்கள் இதைக் கொல்வதானால் பிதுர்ப் பிரீதி செய்து இதைக்கொன்று புசிக்கலாம் என்றான். அதையே யாவரும் ஆமோதித்து அந்தப் பசுவைக் கொன்று சிரார்த்தத்துக்கு உபயோகித்து எழுவருமாக அதைச் சாப்பிட்டு விட்டார்கள், பிறகு அவர்கள் கன்றை மட்டும் குருவிடம் கொண்டு சேர்த்து சுவாமீ! பசுவைப் புலியொன்று கொன்றுவிட்டது! என்று பொய் கூறினார்கள். முனிவர் கபடமின்றி அதை ஒப்புக் கொண்டார். அவர்கள் எழுவரும் குலாசார தர்மத்தை கைவிட்டு கோவதை செய்து அதைச் சாப்பிட்ட பாவத்தாலும் குருவினிடம் பொய் சொன்ன பாவத்தாலும் தசார்ணம் என்னும் இடத்தில் வேடுவகுலத்தில் சகோதரர்களாகப் பிறந்தார்கள். கீழ் குலத்தில் பிறந்தும் அந்தக் குலத்து ஆசாரப்படி நடந்தும் பிதுர் பக்தியுடையவர்களாக இருந்ததாலும் அவர்களுக்கு முற்பிறவியின் ஞானம் உண்டாக்கிச் சிலகாலம் மனவருத்தத்துடன் காலம் கழித்தார்கள்.

காலஞ்சரம் என்னும் மலையில் மிருகங்களாகப் பிறந்தார்கள் அப்பொழுது பூர்வஜன்ம நினைவுடன் இந்தப் பிறவியை ஒழித்துவிட வேண்டும் என்று நினைத்து சரத்தீபத்தில் சக்ரவாகப் பறவைகளாகப் பிறந்தார்கள். அப்போது ஜன்மாந்தர ஞானத்துடன் குருவிடம் பொய் கூறினும் பணிவிடையை முறைப்படி செய்ததால் கோவதை செய்த பாவத்தை ஒழிக்க வேண்டும் என்னும் கருத்துடையவர்களாக இருந்தார்கள். சுமனஸ் சுவாக் சுத்தன் பஞ்சாலன் சித்திரத்ரிசகன் சுநேத்திரன் சுதந்த்ரன் என்னும் பெயர் பெற்று அவர்கள் சக்கரவாகப் பறவைகளாகச் சஞ்சரித்துக் கொண்டிருக்கும்போது நீபதேசத்தரசன் வேட்டையாட வந்தான். சுதந்திரன் என்னும் பறவை அவனுடைய செல்வத்தைக் கண்டு பொறாமை கொண்டு நான் இவனைப் போல ராஜாவாகப் பிறக்கும்படிப் பூர்வஜனன புண்ணியம் ஏதேனும் இருக்குமோ? என்று ஆசையுற்றுக் கூறியது அதைக் கேட்டுக் கொண்டு அருகிலிருந்த உடன் பிறப்பான இரண்டு பறவைகள் நீ அரசனாகப் பிறந்தால் நாங்கள் அமைச்சர்களாகிறோம் என்றன. அப்போது சுவாக் என்னும் பறவை நீங்கள் ஞானத்தையடைய விரும்பாமல் இராஜ்ய செல்வத்தை விரும்பினீர்கள் ஆகையால் அவன் அரசனாகவும் நீங்கள் மந்திரிகளாகவும் சிவகாலத்தில் காம்பிலிய தேசத்தை அடைவீர்கள் என்று கூறியது அப்போது அம்மூன்று பறவைகளும் சுவாக் என்னும் சகோதரனை நோக்கி நாங்கள் போகத்தை அடைந்தால் எப்போது எங்களுக்கு ஞானம் தோன்றும்! அது எப்படி வரும்? என்று கேட்டான் அதற்கு சவாக், பிதுர் பக்தியுடையவர்களாகையால் மற்றொரு பிறவியில் நாம் எல்லோரும் ஒன்று கூடி மானிடப்பிறவியை அடைந்து ஞானவான்களாவோம் என்று கூறியது.’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × one =

Most Popular