Saturday, November 4, 2023
HomeArthamulla Aanmeegamஎதற்காக இராமன் கானகம் போக வேண்டும் ?

எதற்காக இராமன் கானகம் போக வேண்டும் ?

எதற்காக இராமன் கானகம் போக வேண்டும் ? பேசாமல் பரதன் மற்றும் குல குரு வசிட்டர் பேச்சை கேட்டுக் கொண்டு அயோத்தியிலேயே இருந்திருக்கலாமே. அங்கிருந்து கொண்டே இராவணன் மேல் போர் தொடுத்து இருக்கலாமே என்றெல்லாம் பல கேள்விகள் வரும்.

இதற்கு இரண்டு விடைகள் தரலாம்.

ஒன்று சாதாரணமான விடை. செய்திருக்கலாம். அப்படியும் ஒரு கதை எழுதலாம். இன்னமும் கூட வேறு விதமாக யோசிக்கலாம். எதற்காக இராவணன் மேல் சண்டை போட வேண்டும் ? அவன் போரிட்டு எதிரிகளை வென்றான் (தேவர்களை). கைதிகளை , கைதிகள் போல் நடத்தினான். அவ்வளவுதானே. அது ஒரு பெரிய குற்றமா ? அவன் பாட்டுக்கு அந்த பக்கம் இருக்கட்டும். நாம் பாட்டுக்கு இந்த பக்கம் நாட்டை ஆளுவோம் என்று கூட சிலர் சிந்திக்கலாம்.

பொதுவாகவே, உயர்ந்த நூல்களை படிக்கும் போது , அவற்றை படிப்பதன் மூலம் நம்மை நாம் எப்படி உயர்திக் கொள்ளலாம் என்று சிந்திக்க வேண்டுமே தவிர, எப்படி அந்த நூல்களை நம் தரத்துக்கு கீழே கொண்டு வருவது என்று சிந்திக்கக் கூடாது.

இராமாயணம் போன்ற உயர்ந்த நூல்களை படித்து விட்டு சிலர் அதை பரிகசித்து வேறு மாதிரி நூல்கள் எழுதினார்கள். இராமாயணத்தை கொளுத்த வேண்டும், அதை அடியோடு அழிக்க வேண்டும் என்று சில இயக்கங்கள் புறப்பட்டன.

இவை எல்லாம், உயர்ந்த நூல்களை நம் தரத்துக்கு கீழே இறக்கும் முயற்சி.

அதை விடுத்து, அதில் உள்ள உயர்ந்த கருத்துகளை தேடிப் பிடித்து , அந்த கருத்துகளை நம் வாழ்வில் கடை பிடித்து நாம் உயர என்ன வழி என்று சிந்திக்க வேண்டும்.

சரி, இன்னொரு காரணம் என்ன ?

வள்ளுவர் கூறினார், வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வானில் உள்ள தேவர்களுக்கு சமமாவான் என்று.

இந்த உலகில் வாழும் முறைப்படி வாழ்ந்தால் , இந்த உலகிலேயே அவன் தேவனாக மதிக்கப் படுவான் என்றார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

சரி. வாழ்வாங்கு என்றால் வாழும் முறைப்படி என்று அர்த்தம். அது என்ன முறை ? அந்த முறை எங்கே எழுதி இருக்கிறது ? யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது ?

அப்படி வாழ்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா ?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை இராமாயணம்.

இங்கே நல்லபடி வாழ்ந்து , தேவர்களைப் போல ஆனவர்கள் யார் என்று சொன்னாலும், அவர்கள் வாழ்வில் உள்ள சில குறைகளை கண்டு பிடித்து , இதுவா வாழ்வாங்கு வாழும் முறை என்று சிலர் ஆரம்பித்து விடுவார்கள்.

எனவே, கம்பர் என்ன செய்தார் தெரியுமா, வானில் உள்ள ஒருவனை பூமிக்கு கொண்டு வந்தார். அங்குள்ள ஒருவன் இங்கு வந்தால் எப்படி வாழ்வான் என்று படம் பிடித்து காட்டுகிறார்.

திருமாலையே நேராகக் கொண்டு வந்து , அவனை சாதாரண மானிடன் போல வாழ வைக்கிறார்.

திருமால் , மனித வாழ்க்கையை வாழ்ந்தால் எப்படி வாழுவார் என்று காண்பிக்கிறார்.

இராமன் என்னென்ன செய்தான் என்று தெரிகிறது.

ஏன் செய்தான் என்று நாம் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். இராமனின் சில காரியங்களுக்கு நமக்கு காரணம் விளங்காமல் இருக்கலாம். அதனால் அவை தவறு என்று ஆகி விடாது.

ஒரு கடவுளே இங்கு வந்து வாழ்ந்தால் எப்படி வாழ்வான் என்று காண்பிக்கும் முயற்சி தான் இராமாயணம்.

வேண்டாம், எனக்கு இராமன் போல வாழ வேண்டாம். இராமன் செய்த செயல்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்று சிலர் சொல்லலாம்.

சரி. வேறு வழியில் வாழ்வாங்கு வாழத் தெரியும் என்றால், முடியும் என்றால் அந்த வழியிலேயே போகலாம்.ஒரு தவறும் இல்லை.

இது இராமன் + அயனம் (பாதை; உத்தராயணம், தட்சிணாயனம் என்று கூறுவது போல).

வாழ்வாங்கு வாழ இராமன் காட்டிய வழி.

முடிந்தவரை அந்த வழியில் செல்வோம்.

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five − four =

Most Popular