Saturday, November 4, 2023
HomeArthamulla Aanmeegamசாகுற நேரத்தில சங்கரா’ - பழமொழியின் பொருள் என்ன?

சாகுற நேரத்தில சங்கரா’ – பழமொழியின் பொருள் என்ன?

நாம் எல்லாம் ஒரு வகையில் பாக்கியசாலிகள். ஈஸ்வரனை நினைத்த நேரத்தில் சென்று தரிசிக்கிறோமே அது எத்தனை பெரிய பேறு தெரியுமா?

276 பாடல் பெற்ற தலங்கள், அது தவிர 267 வைப்புத் தலங்கள், இதுவும் தவிர தனிச் சிறப்பு மிக்க அந்தந்த பதிகளில் உள்ள தலங்கள் என நாம் உய்ய எத்தனை எத்தனை வழிகள்…

இந்த கண்களின் பயன் சிவனை தரிசிப்பதும், செவியின் பயன் அவன் பெருமைகளை கேட்பதும், நாவின் பயன் அவன் பதிகங்களை படிப்பதும், கால்களின் பயன் அவன் ஆலயம் நாடிச் செல்வதும், கைகளின் பயன் அவனை தொழுவதுமே என்பதை என்றும் மறக்கவேண்டாம். இதெல்லாம் செய்யாத அந்த உறுப்புக்கள் இருந்தும் பயனற்றவையே!

பதிவின் ஒவ்வொரு வரியும் மிக முக்கியம். இறுதியில் பதிவின் கருத்துக்கு சான்றாக அளிக்கப்பட்டுள்ள சம்பந்தர் பாடல் அதைவிட முக்கியம். எதையும் தவறவிடவேண்டாம்.

அருள்மிகு ஒப்பிலாநாயகி உடனுறை நித்திய சுந்தரேஸ்வரர் (நெடுங்களநாதர்) திருக்கோவில், திருநெடுங்குளம், திருச்சி மாவட்டம்
சாகுற நேரத்தில சங்கரா…
‘சாகுற நேரத்தில சங்கரா’ என்று ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த பழமொழிக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

உயிர்பிரியும் நேரத்தில் சங்கரா என்று கூப்பிட்டால் கூட மோட்சம் உண்டு என்பது தான். ஆனால், உயிர் பிரியும் நேரத்தில் இறைவனின் பெயர் நினைவுக்கு வரவேண்டுமே? அது நிச்சயமில்லையே…

வாழும்போது இறைசிந்தனையோடு வாழ்ந்தால் தானே சாகும்போதும் அது இருக்கும். ஒன்றை பழக்கப்படுத்தி விட்டால் அது வழக்கமாகி விடும். நல்ல விஷயங்களை நம் உடலுக்கு பழகப்படுத்தி விட்டால் பின் எப்போதும் அதை மறக்காது. இறுதிக் காலத்தில் அறிவு குழம்பும், நினைவு தப்பும், புலன்கள் தடுமாறும்…எப்போதும் நல்லதையே செய்து பழக்கப் படுத்திவிட்டால் புலன்கள் அப்போதும் நல்லதையே செய்யும், நினைக்கும். எனவே தான் ‘நற்றவா உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே’ என்று பாடினார் சுந்தரர்.

சிலர் தங்களையுமறியாமல் உயிர் பிரியும் நேரத்தில் இறைவன் பெயரை சொல்லிவிடுவார்கள். அதனால் என்ன கிடைக்கும்? அது பற்றிய ஒரு கதையை பார்ப்போம். இது சூதமாமுனிவர் சௌனகாதி முனிவர்களிடம் கூறிய கதை இது.

கௌதம தேசத்தில் கந்துகபுரம் என்னும் நகரத்தில் வியாளன் என்கிற நல்லொழுக்கம் மிக்க அந்தணன் ஒருவன் வசித்து வந்தான். அவனுக்கு வீரியவான் மகன் ஒருவன் இருந்தான். தந்தைக்கு நேரெதிர் குணம் கொண்ட அவன், சதாசர்வ காலமும் தீய செயல்களில் ஈடுபட்டு பாவங்களை மலை போல குவித்து வந்தான்.

மது, மாது, சூது என அவனிடம் இல்லாத பழக்கங்களே இல்லை. சாஸ்திரங்களால் விலக்கப்பட்ட அனைத்தையும் செய்து வந்தான் அவன். கள், மாமிசம் முதலியவற்றை விற்றும் வந்தான். நல்லொழுக்கங்கள் எதுவும் அவனிடம் காணப்படவில்லை.

இப்படியே காலத்தை கழித்தவனுக்கு ஒரு நாள் முடிவுக் காலம் நெருங்கியது. நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தான். கைகால்கள் இழுத்துக்கொண்டன. அவனுடைய புதலவர்கள் அவனிடம் வந்து, “அப்பா… நாம் கொடுக்கவேண்டிய கடன் அல்லது நமக்கு வரவேண்டிய கடன் ஏதாவது உள்ளதா? நமக்கு யாரவது பணம் தரவேண்டுமா? அல்லது நாம் தரவேண்டுமா?” என்று கேட்டார்கள்.

அப்போது ஒவ்வொரு வியாபாரத்திலும் தான் பார்த்து வந்த கணக்கு வழக்குகளை ஒப்படைத்து, கள் வியாபாரத்தில் ஈடுபட்ட கணக்கு வழக்குகளை கூறத் துவங்கினான். அப்போது, “பக்கத்து பட்டணத்தில் இருக்கும் சண்டாளன் ஒருவனுக்கு சிவன் அளவு கள் கடன் கொடுத்திருக்கிறேன். அதற்குரிய தொகையை அவனிடம் வசூலிக்கவேண்டும்” என்று கூறியபடி உயிரை விட்டான்.

வரலாற்று தகவல்:

(சிவன் = குறுணி) எட்டுப்படி கொண்ட ஒரு தானிய அளவு குறுணி எனப்படும். இந்த அளவைக்கு ‘சிவன்’ என்ற பெயரும் உண்டு. குறுணி என்பது பண்டைய பாண்டிய நாட்டு முகத்தலளவை ஆகும். அளவீடுகளை பெயரில் கொண்ட தெய்வங்கள் பல தமிழகத்தில் உண்டு. உதாரணத்துக்கு : மதுரை முக்குறுணி பிள்ளையார்.

அடுத்தநொடி அங்கு யமதூதர்கள் அவனை பற்றி இழுத்துச் செல்ல அங்கு தோன்றினார்கள். அவனை பாசத்தால் கட்டி இழுத்துச் செல்ல முற்படும் போது திடீரென அங்கு தோன்றிய சிவகணங்கள் இருவர் யமதூதர்களை அடித்து விரட்டிவிட்டு, வீரியவானை தங்களுடன் அழைத்துச் சென்றார்கள்.

சிவ கணங்களால் விரட்டப்பட்ட யமதூதர்கள் நேரே யமலோகம் சென்று தங்கள் படைத்தலைவனான காலதேவனிடம் (இவன் யமகிங்கரர்களின் படைத்தலைவன்) நடந்ததை கூறினார்கள்.

இதைக் கேட்டு சினமடைந்த காலதூதன் சிவகணங்களை தேடி அவர்கள் இருக்கும் இடத்தை அடைந்தான். காலதேவன் வந்த நோக்கத்தை அறிந்த சிவகணங்கள் சீற்றமடைந்து, அவனை அவனுடைய பாசத்தைக் கொண்டே கட்டிபோட்டுவிட்டு அவனடைய படைகளை அடித்து விரட்டினார்கள்…

பின்னர் கயிலை மலையின் அடிவாரத்தில் உள்ள குகை ஒன்றில் அவனை சிறைவைத்து, ஒரு மரத்தில் கட்டிபோட்டுவிட்டு அவனை கண்காணிக்க ஒரு சிவகணத்தையும் நியமித்துவிட்டு சென்றார்கள். எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்று சிவகணங்கள் அவனை விட்டுவைத்தார்கள். ஒருவேளை யமதர்மன் அங்கு வந்திருந்தால் அவனையே சிவகணங்கள் கொன்றிருப்பார்கள்.

இதன்பின்னர் சிவகணங்கள் வீரியவான் என்னும் அந்த அந்தணனை சிவலோகதிற்கு அழைத்துச் சென்று அங்கே அவனை உமா மகேஸ்வரனின் சன்னதியில் சேர்த்துவிட்டு தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பினார்கள். வீரியவானும் அங்கிருந்தபடியே சிவபெருமானை தொழுது சிவசாயுஜ்ஜிய பதவியை அடைந்தான்.

அப்போது யமதர்மன் மேருமலையில் அஜோவதி நகரத்தில் எழுந்தருளியிருக்கும் ஈஸ்வரனை தரிசித்துவிட்டு தனது யமலோகப்பட்டினத்திற்கு திரும்ப வந்துகொண்டிருந்தான்…

(தேவர்களே ஆனாலும் சிவனை தரிசிக்கவேண்டும் என்றால், பூலோகத்திற்கு தான் வரவேண்டும். நினைத்த நேரத்தில் எல்லாம் சிவனை கயிலைக்கு சென்று தரிசிக்க முடியாது! இது மிக முக்கியமான வரி. மனதில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்!!)

யமலோகதிற்கு திரும்பிய தங்கள் தலைவனிடம் யமகிங்கரர்கள், நடந்த அனைத்தையும் கூறி, சிவகணங்களால் காலதேவன் கயிலை அடிவாரத்தில் சிறைவைக்கப்பட்டிருக்கும் தகவலையும் சொன்னார்கள்.

மிகுந்த துயரம் கொண்ட யமதர்மன், தனது தூதனை விடுவிக்க கயிலை புறப்பட்டுச் சென்றான். அங்கே நந்திதேவரை சந்தித்து நடந்த அனைத்தையும் கூறினான். நந்திதேவர், “யமதர்மனே, வீரியவான் என்னும் இந்த அந்தணன், தனது உயிர் பிரியும் நேரத்தில் மகா புனிதமான நமது சர்வேஸ்வரனின் நாமத்தை சொன்னான்.

அதன் மகத்துவத்தால் அவன் சிவலோகப் பிராப்தத்தையும் பெற்றுவிட்டான். ஆகையால், உயிர்பிரியும் நேரத்தில் யார் அறிந்தோ அறியாமலோ சகல பாவங்களையும் போக்கும் சிவநாமத்தை சொல்கிறார்களோ அவர்களிடம் உன்னுடைய தூதர்களின் அதிகாரமோ ஆர்பாட்டமோ செல்லவே செல்லாது.

இது சர்வேஸ்வரனின் ஆணை. இது மீறும் சக்தி யாருக்கும் இல்லை. இதை நீ உனது அனுபவத்திலேயே ஏற்கனவே உணர்ந்திருக்கிறாய். அதையெல்லாம் மறந்துவிட்டாயா? மறந்திருந்தால் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்” என்றார்.

“இல்லை ஸ்வாமி… நான் மறக்கவில்லை”

“முன்பொரு முறை ஒரு வேடர் தலைவன் மாண்டுபோனான். அவனை எமலோகத்திற்கு கொண்டு வந்து அவனது புண்ணியப் பலன்களை ஆராய்ந்தபோது சித்திரகுப்தன், உன்னிடம் “எமதர்மனே, இவன் இந்தப் பிறவியில் ஒரு புண்ணியமும் வாழ்நாளில் செய்ததில்லை என்றும் வாழ்நாள் முழுதும் பல ஜீவராசிகளை கொன்றும், பொன்னாசை பொருளாசை பிடித்து காட்டில் எதிர்ப்படும் மனிதர்களையெல்லாம் கொன்று குவித்து அவர்கள் ஆடை, அணிகலன்கள் என எல்லாவற்றையும் கொள்ளையடித்து வாழ்ந்துவந்தான். அதுமட்டுமல்ல, மது, மாமிசம் முதலானவற்றை விரும்பியே புசித்து வந்தான். இவன் தன் இறுதிக் காலத்தில் கூட தன் பிள்ளைகளிடம் “பிரஹர, ஆஹர, சம்ஹர” என்று தான் தன் பிள்ளைகளிடம் சொல்லிய படி உயிரை விட்டான்.

( * பிரஹர, ஆஹர, சம்ஹர – என்றால் அடி, உதை, குத்து, கொல்லு, சாப்பிடு என்று அர்த்தம்.) புண்ணியத்தின் சாயலே துளியும் இல்லாத இவனை நரகில் பல கல்ப காலம் தள்ளி வாட்டவேண்டும். சரியான முறையில் தண்டிக்கவேண்டும்!” என்று உன்னிடம் அவனைப் பற்றி தெரிவித்தான்.

“நீ சிறிது யோசித்தாய். பின்பு சித்திரகுப்தனிடம், ‘இது சர்வேஸ்வரன் நமக்கு வைக்கும் சோதனை. இவரை தண்டிக்கும் அதிகாரம் நமக்கு எள்ளளவும் இல்லை. இவர் ஒரு மகா புண்ணியாத்மா. காரணம், இவர் உயிர் பிரியும் நேரம், ‘பிரஹர, ஆஹர, சம்ஹர’ என்று கூறியிருக்கிறார்.

நம் கண்ணுதற் கடவுளாம் கங்காதரனின் நாமமான ‘ஹர’ என்பதை மூன்று முறை உச்சரித்திருக்கிறார். ஆகையால் இவரை நாம் தண்டிப்பதைவிட வணங்குவதே முறை’ என்று கூறி, மிகவும் பயபக்தியுடன் அந்த ஆன்மாவை கையெடுத்து வணங்கினாய். எனவே இதையெல்லாம் நீ மறக்காது தற்போது எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவேண்டும்” என்றார் நந்தி பகவான்.

யமன் பயந்து நடுங்கியபடி, “நந்தியம்பெருமானே, நான் இது நடந்தபோது யமபுரியில் இல்லை. அம்மையப்பனை வணங்க, அஜோவதி நகருக்கு சென்றிருந்தேன். இந்த காலன், புதிதாக நியமிக்கப்பட்டவன். சர்வேஸ்வரனின் பெயர்களை உச்சரிப்பதால் கிடைக்கக்கூடிய மேன்மையை பற்றி இவனுக்கு எதுவும் தெரியவில்லை. உங்கள் கணங்களால் தாக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டிருக்கும் அவனை நீங்கள் தான் மன்னித்து அருளவேண்டும்” என்று மன்றாடி கேட்டுக்கொண்டான்.

யமனின் நிலையை பார்த்து இரக்கங்கொண்ட நந்தி பகவான் “யமதர்மா, உன்னுடைய காலனை, மகாகாளரின் வீரர்கள் கட்டியிழுத்துப் போயிருக்கிறார்கள். எனவே நீ விரைந்து சென்று மகாகாளரை சந்தித்து வணங்கி, என்னுடைய உத்தரவை தெரிவித்து உனது தளபதியை மீட்டுச் செல்வாயாக” என்று கூறி அனுப்பினார்.

யமன் உடனே மகாகாளரை தேடிச் சென்று, நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு, சாஷ்டாங்கமாக அவரை விழுந்து வணங்கி, நடந்த அனைத்தையும் கூறி நந்தியெம்பெருமான் கூறிய தகவலையும் சொன்னான்.

மகாகாளர் சீற்றத்துடன் “அடேய்… யமனே முன்பு நடைபெற்ற விஷயங்களை எல்லாம் மறந்து போனாயோ?” என்று கோபமாக கேட்க, “இல்லை இல்லை சுவாமி… இல்லை. இன்றும் கூட அவற்றை நினைவுப்படுத்தி வருகிறேன்” என்றான் திக்கித் திணறி.

அது என்ன முன்பு நடைபெற்ற விஷயங்கள்? அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்ப்போம்.

சிவபெருமானின் திவ்ய நாமங்களான சிவன், ருத்திரன், பசுபதி, சம்பு, சங்கரன், சந்திரசேகரன், மிருத்யுஞ்சயம், விபோஷம், நீலகண்டன், மகேஸ்வரன் பர்க்கன், மகாதேவன், ஹரன், உமாபதி போன்ற பெயர்களில் ஒன்றையோ அல்லது வேறு பல நாமங்கலையோ எவன் சிந்தையில் இருத்தி ஜபித்து வருகிறானோ அவனே பாக்கியசாலி. அவனே புண்ணியாத்மா.

அவன் சகல தேவர்களாலும் வணங்கி வழிபடத் தக்கவன் ஆகிறான். அவன் இந்த உலகத்தில் வாழ்வாங்கு வாழ்வதுடன் இறுதியில் கயிலாயத்தை அடைந்து சிவ சாயுஜ்ஜியத்தையும் அடைகிறான். இந்த நாமங்களின் மகிமையை உணர்ந்து யார் தியானித்து வருகிறார்களோ அவர்கள் கயிலையை அடைந்து சிவபெருமானுடைய சாயுஜ்ஜியத்தை அடைகிறார்கள்.

தவிர, இந்த நாமங்களின் மகிமை உணராமல் உச்ச்சரித்தவர்கள் கூட நற்கதி அடைகிறார்கள் எனும்போது உணர்ந்து உச்சரிப்பவர்கள் அடையும் பேற்றை விளக்கவும் வேண்டுமா என்ன?

இந்த கதையெல்லாம் நல்லாயிருக்கு… ஆனா, இதுல வர்ற கருத்து உண்மையா என்கிற சந்தேகம் உங்களுக்கு எழுகிறதல்லவா? அச்சந்தேகம் தேவையே இல்லை. சிவபுண்ணியக் கதை ஒவ்வொன்றும் சத்தியத்தை காட்டிலும் உயர்ந்தவை. படிக்க படிக்க நமது வினைகளை தகர்ப்பவை.

திருஞானசம்பந்தர் கூறுவதைப் பாருங்கள்… எத்தனை அழகாக தெளிவாக கூறியிருக்கிறார் பாருங்கள். ஞானசம்பந்தப் பெருமானின் கூற்றுக்கு மறுமொழி உண்டோ?

திருவைந்தெழுத்துக்கு பாகுபாடு இல்லை !
நல்லவர் தீயர் எனாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்ல நமன்றமர் கொண்டு போமிடத்
தல்லல் கெடுப்பன அஞ்செ ழுத்துமே.
– திருஞானசம்பந்தர் (முதல் திருமுறை)

பாடல் விளக்கம் : புண்ணியர், பாவிகள் என்ற பாகுபாடு இன்றி விரும்பிச் செபிப்பவர்கள் யாவரேயாயினும் அவர்களுடைய மலங்களை நீக்கிச் சிவமுத்தி காட்டும் ஆற்றலுடையன திருவைந்தெழுத்தாகும் . எமதூதர்கள் வந்து உயிரைக் கொண்டு செல்லும் காலத்தும் , மரணத்தறுவாயில் ஏற்படக் கூடிய துன்பத்தைப் போக்குவனவும் திருவைந்தெழுத்தேயாகும்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 − 2 =

Most Popular