Monday, October 16, 2023
HomeArthamulla Aanmeegamசரணாகதி...!

சரணாகதி…!

காருண்யம், சக்தி ஆகிய இரண்டையும் உடைய பகவானிடத்திலெ தான் நாம் சரணாகதி பண்ணனும்.

பரமார்த்த ஸ்துதி என ஒன்றை சுவாமி தேசிகன் பண்ணியிருக்கிறார் – திருப்புட்குழி (காஞ்சிபுரம் அருகே) என்ற க்ஷேத்ரத்தில் இருக்கும் எம்பெருமான் பேரிலான பத்து சுலோகங்கள். அதை நித்திய பாராயணம் பண்ணனும் என்பது தேசிகரின் திருவுள்ளம்.

அந்த பரமார்த்த ஸ்துதியில் அவர் அழகாகச் சொல்கிறார்:
நாம் எத்தனையோ யக்ஞம் பண்ணுகிறோம். ஆனால், பகவான் ஒரு யக்ஞம் பண்ணுகிறான். அது அவனைத் தவிர வேறு ஒருத்தர் பண்ண முடியாத யக்ஞம். அது தான் சரணாகத ரக்ஷணம் என்னும் யக்ஞம்.
யக்ஞம் பண்ணனும் என்றால் தர்மபத்தினி பக்கத்திலே இருக்க வேண்டாமா? அந்த ஸ்ரீயோடு கூட சேர்த்தே விளங்கி சரணாகத ரக்ஷணம் என்கிற யக்ஞத்தை நடத்துகிறான் பரமாத்மா. அந்த சரணாகத ரக்ஷண யக்ஞத்திலே ரித்விக்குகள் யார் என்று கேட்டால், எம்பெருமானிடத்திலே இருக்கும்படியான அவனுடைய கல்யாண குணங்கள். அவற்றுள் தயைதான் முக்கியமான ரித்விக். மற்றவை துணையானவை.

எந்த யக்ஞமும் தட்சிணையில் முடிய வேண்டும். தட்சிணை இல்லாவிட்டால் அதற்குப் பூர்த்தி கிடையாது. பகவான் பண்ணுகிற சரணாகத ரக்ஷணம் என்கிற யக்ஞத்தில் யார் யார் தட்சிணை பெறக் கூடியவர்கள்?
யார் யாரெல்லாம் அவன் சரணாகத ரக்ஷகன் என்பதை உணர்ந்து வருகிறார்களோ, அத்தனை பேருக்கும் தட்சிணை உண்டு.

பகவானிடத்திலே கை கூப்புவதற்கு அதிகாரி, அதிகாரி அல்லாதவன் என்றெல்லாம் வேறுபாடு உண்டோ? யார் வேண்டுமானாலும் தொழலாம். சரணாகதி பண்ணலாம். சுத்தி பண்ணிக் கொண்டு வரவேண்டும். சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் தேடிப் போக வேண்டியதில்லை. இருக்கிற இடத்திலே சரணாகதி பண்ணலாம்.
உயர்ந்த ரீதியிலே பகவானை உணர்ந்து சரணாகத ரக்ஷணம் பண்ணிவிட்டால், மோக்ஷ தட்சிணையை – சாச்வதமான நித்யானந்தத்தைக் கொடுக்கிறான் அவன்.

சரணாகதி பண்ணுபவர்கள், பரப்ரும்மத்துக்குத் துல்லியமான, சமானமான யோக்யாதிகளை அடைந்து மோக்ஷத்தை அடைகிறார்கள்.
அவனைத் தவிர வேறு யாரும் அப்படி சரணாகத ரக்ஷணம் பண்ண முடியாததனாலே அவனுடைய திருவடியை நாம் பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார் சுவாமி தேசிகன்.

அயோத்யா காண்டத்தில் சீதா பிராட்டியிடம் லக்ஷ்மணன் சரணாகதி பண்ணினான். அந்த சரணாகதிக்குப் பயனாய், பகவானுக்கு நித்ய கைங்கர்யம் செய்கிற வாய்ப்பு லக்ஷ்மணனுக்குக் கிடைத்தது. கூடவே வனவாசம் அழைத்துப் போனான் பகவான். அந்த லக்ஷ்மண சரணாகதி பூரண பலனைக் கொடுத்தது.

வசிஷ்டாதிகளை முன்னிட்டுக் கொண்டு எம்பெருமான் திருவடிகளிலே சரணாகதி பண்ணினான் பரதன். பரமாத்மா தன பாதுகைகளை அவன் சிரஸில் வைத்து அனுக்ரஹித்தான். அவன் பண்ணிய சரணாகதியின் பூரண பலனை அயோத்தியிலே இருக்கிற புல் பூண்டுகூட அனுபவித்து உயர்கதி பெற்றதாம்!
பாதுகைகளை ஆச்சர்யமாக நந்தி கிராமத்தில் பிரதிஷ்டை பண்ணி, பாதுகா ஆராதனம் செய்தான்… 14 ஆண்டுக்காலம்! யாருக்காவது கிடைக்குமா இப்படி ஒரு பாக்கியம்! முக்தி ஐஸ்வர்யத்தைக் காட்டிலும் உயர்ந்த ஐஸ்வர்யம் கிடைத்ததே அவனுக்கு! பரதனுடைய சிரஸுக்கு அத்தனை அழகாகப் பொருந்தியது பாதுகை! சிரஸ் அதற்கு ஒரு பீடம் போல அமைந்திருந்ததாம்.

ஆரண்ய காண்டத்தில், மகரிஷிகள் அத்தனை பேரும் எம்பெருமாணன் திருவடியில் சரணாகதி பண்ணியபோது, தண்டகாரண்யத்தையே ஒரு யாகம் செய்வதற்கு அனுகூலமான இடமாக ஆக்கித் தந்தான் பரமாத்மா.

சுக்ரீவ சரணாகதிக்குப் பூரண பலனைக் கொடுத்து, அவன் சொன்ன காரியத்தை பகவான் பண்ணினான்.
சுந்தர காண்டத்திலே திரிசடை சீதாபிராட்டியிடம் சரணாகதி பண்ணினாள். சீதாபிராட்டி அந்த சரணாகதிக்குப்பலனாய் ஆஞ்சநேயனிடமிருந்து அத்தனை ராக்ஷஸ ஸ்திரீகளையும் ரட்சித்து விட்டாள்.

சீதாபிராட்டியை இத்தனை நாட்களாக விரட்டிக் கொண்டிருந்தார்கள் அந்த ராட்சஸ ஸ்திரீகள். “அத்தனை பேரையும் முஷ்டியினாலே, காலினாலே உதைத்துத் தள்ளிவிடுகிறேன் – ஆக்ஜை கொடுங்கள்” என்றான் ஆஞ்சநேயன். அதற்கு சீதாபிராட்டி சொல்கிறாள்: “அப்பா! இத்தனை நாளாக இவர்கள் என்னை ஏசியதும் பேசியதும், ராவணனிடம் உள்ள பயத்தினாலே.. அவன் உத்தரவுக்கு கட்டுப்பட்டு அப்படி செய்தார்கள். உலகத்திலே உன் திருஷ்டியினால் இவர்கள் தப்பு. என்னுடைய திருஷ்டியில் இவர்கள் நல்லவர்கள் என்றே நினைக்கிறேன். தப்பு செய்தவர்கள் ஆனாலும் நல்லதையே பண்ணக் கூடியவர்கள் ஆனாலும், உலகத்தில் தப்பே பண்ணாதவர்கள் கிடையாது..”

ஆஞ்சநேயனின் முகம் வெளுத்துப் போய் விட்டதாம்! ராமனைத் தன் ஹ்ருதயத்திலே வைத்திருந்தான் அல்லவா ஆஞ்சநேயன்! “இப்போது சீதை சொன்ன வார்த்தையிலே ராமனும் அல்லவா அடிபட்டுப் போய்விட்டான்! என்று அவனுக்கு அதிர்ச்சி. ராமனும் தப்பு செய்தவன் என்றல்லவா ஆகிவிட்டது.

அதைப் பார்த்து சீதாபிராட்டி சொல்கிறாள்: ஹே, ஆஞ்சநேயா! உன் முக விகாரத்தில் இருந்து உன் என்னத்தைப் புரிந்து கொண்டேன். ராமன் தப்பு பண்ணவில்லையா? அவனும் தப்பு பண்ணியவன் தான். என்ன தப்பு என்று கேட்டானாம் ஆஞ்சநேயன். “அவன் வந்து என்னை மீட்காவிட்டால் அவன் பௌருஷம் நிலைக்குமா என்று கேட்கும்படி உன்னிடம் நான் சொல்லியனுப்பினேன். அப்புறமே அவன் என்னை மீட்க வந்திருக்கிறான். பத்தினி இங்கே இருக்கிறாள் என்பது அவனுக்கு ஏற்கெனவே தெரியாத விஷயமா என்ன? உடனே ஓடி வந்து என்னைக் காப்பாற்ற வேண்டாமா? அபலையான ஒரு ஸ்திரீ, ஒரு காமாதுரனுடைய முன்னிலையிலே தன்னுடைய பதிவ்ரத்யத்தை எத்தனை நாள் ரக்ஷித்துக் கொள்ள முடியும்? இவ்வளவு நாள் என்னை இந்த இடத்திலே விட்டு வைத்தது அவர் பண்ணின குற்றமில்லையா? ஆஞ்சநேயன் பார்த்தான், “ஆமாம், அது ரொம்ப பெரிய குற்றம். உடனே வந்து மீட்டிருக்க வேண்டாமா? இது இத்தனை நாள் எனக்குத் தெரியாது போயிடுத்தே” என்று ராமனின் தவறை ஒப்புக் கொண்டு விட்டான்.

அதற்குப் பிறகும் ஆஞ்சநேயனுக்கு இன்னொரு சந்தேகம்! “அம்மா, நீங்கள் என்ன தப்பு செய்தீர்கள்?” என்று கேட்டான். “நானும் தப்பு பண்ணியவள்தான்” என்றாள் சீதை. “தன் கணவன் எப்படி இருந்தாலும் அவனைக் குறித்து மற்றவரிடத்திலே விமர்சித்துப் பேசக் கூடியவள் உத்தம பத்தினியாகமாட்டாள். இப்போது என் பர்த்தா ராமபிரான் என்னைப் பத்து மாதம் இங்கே விட்டு வைத்தார் என்று உன்னிடம் சொன்னேனே… அதுதான் பெரிய தப்பு”. ஆஞ்சநேயன் அதையும் ஒப்புக் கொண்டான்.

“அடியேன் என்ன தப்பு செய்தேன்”? என்று கேட்டான் அடுத்தபடியாக. “நீயும் தப்பு பண்ணியவன்தான். இந்த ராட்க்ஷஸிகளை எல்லாம் அடிக்கிறேன், உதைக்கிறேன்” என்று சொன்னாயே.. அது தான் பெரிய தப்பு. அந்த மந்தரையையே (கூனி) பகவான் ரட்சித்தானே. நாம் அதை நினைக்க வேண்டாமா? என்றாள் சீதாபிராட்டி.

குறையொன்றுமில்லை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + fifteen =

Most Popular