கந்தர் சஷ்டிகவசம் கலிகால நோய்தீர்க்கும் அருமருந்து
கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.
உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க!
விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க!
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க!
பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க!
கன்னமிரண்டும் கருணைவேல் காக்க!
என் இளங் கழுத்தை இனிய வேல் காக்க! .
என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.
இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது.
மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.
இப்படி மூளையின் தனி கவனத்திற்க்கு வரும்போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்க்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.
மனோ வைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும் என்று தற்போது நம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லத்துவங்கியுள்ளார்கள்.
இன்றைக்கு ஆராய்ச்சி என்று சொல்லி வெளிநாட்டினர் கண்டுபிடித்ததாகச் சொல்லுவதை நம் முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்தது மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்பாட்டில் செயல் படுத்தியும் வந்திருக்கிறார்கள்.
இந்த மனோ வைத்திய முறை நம் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடுகள் அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே இதை கந்தர் சஷ்டி கவசம் என்று கூறினார்கள்.
இந்த கவசத்தில் வரும் வரிகளில் நவ கோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று ஒரு வரி உண்டு. வார்த்தைகளால் சொல்லும் மந்திரத்தினால் நவ கோள்கள் எப்படி நன்மை செய்யும் என்றும் தோன்றலாம். நவ கிரகங்களின் மாறுதல்களால் பூமியின் மீதே பாதிப்பு ஏற்படும் போது மனித உடலில் பாதிப்பு ஏற்படாதா என்ன?.
கிரகங்களின் மாற்றத்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் எந்த ஒரு வியாதிக்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை.
ஆனால் கவசம் படிப்பதன் மூலமாக தினசரி மூளை நமது உடலை உற்று நோக்கி தானே தன்னைச் சரிசெய்யும் வேலையை செய்து கொண்டே இருப்பதால் நவ கோள்களால் ஏற்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம். அதையே நவகோள்கள் கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாக கூறினார்கள்.
இப்படி கந்தர் சஷ்டி கவசம் தொடர்ந்து படிப்பதில் மனோவியல் ரீதியான நன்மைகள் பல உள்ளன.
காக்க காக்க கனகவேல் காக்க!…
நோக்க நோக்க நொடியில் நோக்க!…
