Thursday, October 19, 2023
HomeArthamulla Aanmeegamசுமங்கலி பாக்கியம்

சுமங்கலி பாக்கியம்

திலிபச்சக்கரவர்த்தி ஆழ்ந்த வேதனையடைந்தார்.காட்டுக்கு வேட்டைக்கு வந்த அவர், பெண் மானுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆண்மான் மீது அம்பெய்தார். ஆனால், அது ஒரு முனிவராக மாறியது. அந்த முனிவர் கடும் அவஸ்தைப்பட்டு இறந்தார். இதைக்கண்ட பெண் மான் ரிஷிபத்தினி (ரிஷியின் மனைவி) வடிவெடுத்தது. அந்தப்பெண், அவர் மீது விழுந்து அழுதாள். நிலைமை விபரீதமாகி விட்டதைக் கண்ட ராஜா, அவளருகே ஓடிவந்தார். “”அம்மா! மான் என்று நினைத்தே அம்பெய்தேன். இப்படி ஆகிவிட்டதே! அந்தணரைக் கொன்றதன் மூலம் கடுமையான பிரம்மஹத்திக்கு ஆளாகித் தவிக்கிறேனே! ” என்று கண்ணீர் வடித்தார்.

அதுகேட்ட ரிஷிபத்தினி, “”மன்னா! இது தாங்கள் அறியாமல் செய்த தவறு. இது மன்னிப்பிற்குரியதே. இருப்பினும், என் கணவரின்றி என்னால் வாழ இயலாது. என்னையும் கொன்று விடுங்கள்,” என்று அழுதாள்.

மன்னரின் மனம் இன்னும் வேதனைப்பட்டது. ஒரு பெண்ணை…அதிலும் அந்தணப்பெண்ணைக் கொன்று மேலும் பாவத்தை வரவழைத்துக் கொள்வதா! ஐயையோ! என்ன செய்வேன்! என் குலகுருவே! வசிஷ்ட மகரிஷியே! தாங்கள் இப்போதே இங்கு எழுந்தருள வேண்டும். இந்த குழப்பமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்,” என்று வேண்டினான். வசிஷ்டர் அங்கு தோன்றினார். அந்தப் பெண் அவரது பாதங்களில் விழுந்தாள்.

என்ன நடந்ததென்பதை அறியாத வசிஷ்டர்,””தீர்க்க சுமங்கலி பவ” என அவளை வாழ்த்தினார்.

“”மாமுனிவரே! இதோ! இங்கே இறந்து கிடப்பவர் என் கணவர். அவர் இறந்தபிறகு, அபாக்கியவாதியாக நிற்கிறேன்! தாங்களோ நான் சுமங்கலியாக வாழ்வேன் என்று சொல்கிறீர்ளே! இதெப்படி சாத்தியம்!” என்று வருத்தமாகக் கேட்டாள். வசிஷ்டருக்கு இப்போது தான் நிலைமை புரிந்தது. “தன் மாணவனையும் காப்பாற்ற வேண்டும், இந்தப்பெண்ணுக்கும் தன் வாக்குப்படி சுமங்கலியாய் வாழும் பாக்கியம் தர வேண்டும். என்ன செய்யலாம்?’ அவர் யோசித்தார். “”பெண்ணே! காவிரிக்கரையில் வில்வமரக்காட்டில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அருகில் அம்பாள் சிலையும் இருக்கும். அங்கே நீ செல். உன் கணவனின் உடலை ஒரு பல்லக்கில் ஏற்றிக்கொள். அதை இந்த மன்னனின் சேவகர்கள் சுமந்து வருவார்கள். அந்தக் கோயிலிலுள்ள ஜல்லிகை தீர்த்தத்தில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து உன் கணவனின் உடலில் தெளி. அவர் பிழைத்து எழுவார். அந்தக் கோயிலில் ஜல்லிகை என்ற அசுரகுலப் பெண்மணி, இதே போல உயிர்போன தன் கணவனை எழுப்பினாள். அசுரனுக்கே அருளிய அந்த இறைவன், உனக்கு

நிச்சயம் உதவுவான், கிளம்பு,” என்றார். அந்தப் பெண் மகிழ்ந்தாள். ரிஷிபத்தினி அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து தன் கணவரின் உடல் மீது தெளித்தாள். தூங்கி எழுந்தவர் போல் எழுந்தார் முனிவர். அப்போது அம்பாளும், சிவனும் அவர்கள் முன் தோன்றினர். அம்பாளிடம் ரிஷிபத்தினி, “”அன்னையே! என்னைப் போலும், ஜல்லிகை போலவும் தன் கணவரின் உடல்நலம் நாடி இங்கு வரும் பக்தைகளுக்கு தீர்க்க சுமங்கலியாய் இருக்கும் வரத்தை தந்தருள வேண்டும்,’ ‘ என வேண்டினாள். அம்பாளும் அப்படியே செய்வதாக வாக்களித்தாள். ரிஷிபத்தினியும், முனிவரும் மீண்டும் திலீபனைச் சந்தித்தனர். தாங்கள் சிவபார்வதி தரிசனம் கண்ட இடத்தில் கோயில் கட்டும்படி கூறினர். மன்னனும் அவ்வாறே செய்தான். அதுவே திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயிலாகும்.

திருவாரூரில் இருந்து 30 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது. இந்தக் கதையைப் படித்தவர்களின் குடும்பத்தில் அகால மரணம் நிகழாது என்பது ஐதீகம். தம்பதி சமேதராய் இந்தக் கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள். தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெறுங்கள்..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 1 =

Most Popular