Monday, October 16, 2023
HomeArthamulla Aanmeegamமிக தொன்மை வாய்ந்த சக்தி வழிபாடு!

மிக தொன்மை வாய்ந்த சக்தி வழிபாடு!

மிக தொன்மை வாய்ந்த சக்தி வழிபாடு!

சக்தி வழிபாடு என்பது மிக, மிக தொன்மையானது. ஆதி காலத்தில் இந்த வழிபாட்டை ‘தாய்மை வழிபாடு” என்றே கூறினார்கள். உலகின் முதல் வழிபாடாக சக்தி வழிபாடு கருதப்படுகிறது. ஆதி சக்தி என்றால் “முதல் சக்தி” என்று அர்த்தமாகும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வசிக்கின்ற தொடக்கநிலை சக்தியாகும். இந்த சக்தி பெண்மை வடிவமாகும்.

சக்தி என்பது அண்டசராசத்தில் உள்ள உயிரனங்களுக்கு உயிர் கொடுக்கும் ஒரு கருத்தமைவு அல்லது மனிதப் பண்புகளை மனிதர் அல்லாதவைகளுக்கு ஏற்றிச் சொல்லும் தெய்வீக பெண்மை வடிவமாகும். சதாசிவன், மகேஸ்வரன், ருத்ரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய 5 பேரை தனது அம்சமாக உருவாக்கிய அன்னை, பிறகு “ஹ்ரீம்” எனும் பீஜத்தில் எழுந்தருளியதாக திருமூலர் கூறியுள்ளார்.

“ஹ்ரீம்” என்ற மந்திரம் ஓம் எனும் பிரணவ மந்திரம் போல சிறப்பு வாய்ந்தது. “ஹ்ரீம்” என்ற பீஜ மந்திரத்தை மனதில் இருத்தி, மனதை அலைபாய விடாமல், ஒருமுகப்படுத்தி படித்தால், முக்காலமும் உணர்ந்து மரணத்தை வென்று மகத்தான வாழ்வை பெற முடியும் என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார். அம்பிகையைச் சரண் அடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது மகாகவி பாரதியாரின் வாக்கு.

“முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே” என்கிறார் அபிராமிபட்டார்.
கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் தருபவள் சக்தியே. சிவனிடம் இருந்து சக்தியை ஒரு போதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்தி மயமாக உள்ளது. வேதங்கள் வகுத்தபடி பராசக்தியை வழிபடுபவர்களுக்கு இந்திர பதவியை தருவாள் என்கிறார் அபிராமி பட்டார்.

லோக மாதாவான பராசக்திக்கு நாம் எல்லாருமே பிள்ளைகள் தான். நம் மீது கருணை, அன்பு காட்டி, நம்மையெல்லாம் பக்குவப்படுத்தி அவள் வளர்த்துள்ளாள். அன்னையை வணங்கி நாம் தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியே பெறும். அவள் அருளைப் பெற்றவர்களுக்கு எந்த செயலிலும் எந்தவித இடர்பாடும், இடையூறும் வராது.

இப்படி கடவுளாகவும், குருவாகவும் அன்னையை ஏற்றுக் கொண்டால், அவள் நமக்கு என்றென்றும் வழிகாட்டியாக இருப்பாள். அம்மனின் மலர்ப்பாதங்களில் நமது எண்ணம் அனைத்தையும் குவித்து விட வேண்டும். அவளிடம் முழுமையாக நாம் சரண் அடைதல் வேண்டும். உடல், பொருள், ஆன்மா அனைத்தையும் அவள் காலடியில் ஒப்படைக்க வேண்டும். அதில்தான் அன்னை பராசக்தி மகிழ்ச்சி அடைவாள்.

அவளிடம் ஏற்படும் மகிழ்ச்சி, நம் வாழ்வை உயர்த்தும். இந்த பிறவியை இன்னலின்றி நிறைவு செய்ய உதவும். அண்டங்கள் அனைத்தையும் அதிர வைக்கும் ஆற்றலை அன்னை பெற்றிருந்தாலும், தூய்மையான பக்தியுடன் வழிபடும் பக்தர்களிடம் அன்பையும் அரவணைப்பையும் காட்டுவாள். அதை பெற நாம் சக்தி தலங்களுக்கு சென்று மனதை ஒருமுகப்படுத்தி வழிபட வேண்டும்.

மனதை அடக்க, அடக்க மாயை விலகி சக்தி பிறக்கும். சக்தியை வழிபடுவோம்….. சகல நன்மைகளையும் பெறுவோம்.

யா தேவி சர்வ பூதேஷு சக்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்மை; நமஸ்தஸ்மை; நமஸ்தஸ்மை நமோ நமஹ!!”
என்கிறது தேவி மஹாத்மியம்.
பொருள்:
“எந்தத் தேவியானவள் எல்லா உயிர்களிலும் சக்தியின் உருவமாக அமைந்திருக்கிறாளோ அவளுக்கு எங்கள் நமஸ்காரம்,”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − three =

Most Popular