வம்சக் கணக்கு என்பது என்ன? வம்சம் என்பது எப்படி கணக்கிடப்படுகின்றது?
ஒருவருக்கு பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன் என ஆண் குழந்தை மட்டுமே வம்சத்தில் கணக்கில் வரும். ஒருவருடைய சராசரி வயது 50 என்றால் கூட அவருடைய தாத்தாவின், தாத்தாவின் பெரும் தாத்தாவின் காலம் என 13 ஜென்மங்களுக்கு முந்தய காலம் எனக் கணக்கிட்டால் 13 x 50 = 650 ஆண்டுகள் என வரும். யாருக்காவது 650 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அவர் சந்ததியினர் யார் என்பது தெரியுமா?
அதை விட சிறிய கேள்வி, யாருக்காவது அவர்களுடைய குடும்பத்தில் 13 ஆம் வம்சத்தின் பெரிய தாத்தா யார் என்பது தெரியுமா? இதையெல்லாம் யார் குறித்து வைத்துக் கொண்டு வருகிறார்கள்? அதனால்தான் ஒரு குல தெய்வம் ஏழேழு ஜென்மம் அதாவது 49 ஜென்மங்களுக்கு அதாவது 13 ஜென்ம காலத்துக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும் என்ற வார்த்தை வந்தது.
மகள் என்பவள் திருமணம் ஆனதும் புகுந்த வீட்டிற்குச் சென்று விடுவதினால் அவளுக்கு தாய்-தந்தையின் குல தெய்வத்தை தனது குல தெய்வமாக ஏற்க பாத்யதை இல்லை. அவள் புகுந்த வீட்டின் குலதெய்வமே அவள் குல தெய்வம் ஆகி விடும்.
பலருக்கு குல தெய்வம் யார் என்பது ஏன் தெரியாமல் உள்ளது?
இதற்குக் காரணம் பூர்வ ஜென்மத்தில் ஏற்பட்ட சாபம் அல்லது முன்னோர்கள் செய்த அலட்சியமே காரணம் . முன்னர் எல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் தமது மகன்களுக்கு தாம் வணங்கும் குல தெய்வம் யார், அந்த ஆலயம் எங்கு உள்ளது என்பதைக் கூறுவார்கள். சில வருடங்களுக்கு ஒரு முறையாவது தமது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று பூஜித்து விட்டு வருவார்கள். வீடுகளில் குல தெய்வ உண்டியல் இருக்கும். அதில் தமது காணிக்கைகளை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.
அவ்வபோது தாம் போக முடியாவிடிலும் குடும்பத்தில் யார் அங்கு செல்கிறார்களோ அவர்களிடம் அந்த காணிக்கைப் பணத்தை தந்து உண்டியலில் சேர்த்து விடுமாறு கூறுவார்கள். தமது பிள்ளைகள் வெளியூருக்குப் போகும்போது அவர்களுக்கு குல தெய்வம் யார் என்பதைக் கூறி குல தெய்வத்தின் படத்தையும் தருவார்கள். அது மட்டும் அல்ல எந்த ஒரு நல்ல காரியமும் வீட்டில் நடக்கும்போது, முதல் பிரார்த்தனை குல தெய்வத்திற்குத்தான் நடைபெறும். அதற்குப் பின்னரே மற்ற பூஜைகள் துவங்கும்.
ஆனால் காலபோக்கில் ஏற்பட்ட நாகரீக மாற்றங்களினால் வெளியூர் செல்லும் பிள்ளைகள் குல தெய்வம் என்ற கருத்தை மறந்து விட்டார்கள். தங்கும் இடமே என்ன என்பது தெரியாதபோது குல தெய்வத்தின் நினைவு அவர்களுக்கு எப்படி இருக்கும். குல தெய்வத்தின் படம் கூட அவர்களிடம் இருக்காது. திருமணம் ஆகி வேலைக்கு சென்றதும் கிடைக்கும் விடுமுறை நாட்களிலும் தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வெளியே செல்வதும், வெளியூர் செல்வதும் பழக்கமாகி விட்டது.
ஆனால் சில வருடங்களுக்கு ஒரு முறையாவது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று வணங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இல்லை. குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு மொட்டை அடிக்கும்போது மட்டுமே குல தெய்வத்தை தேடுவார்கள். அது தெரியவில்லை என்றால் அதுவும் ஒரு சடங்கு போல பழனி, திருப்பதி அல்லது வைதீஸ்வரன் ஆலயம் என எங்காவது சென்று மொட்டைப் போட்டு விட்டு வந்து விடுவார்கள்.
அது மட்டும் அல்லாமல் காலப் போக்கில் தமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு முடிவு தேட புதுப் புது சாமியார், சன்யாசிகள் மற்றும் தெய்வப் பிறவிகள் என ஓடுகிறார்கள். அவர்கள் கூறுவதை செய்வார்கள். ஆனால் தம்முடைய குல தெய்வத்தை நினைக்க மாட்டார்கள். அதற்கு மேலும் அந்த சாது, சன்யாச, தெய்வப் பிறவிகளும் முதலில் உங்கள் குல தெய்வத்திற்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற நியதியை அறிவுறுத்த மாட்டார்கள். அப்படி செய்தால் அவர்கள் என்ன ஆவது ?
இப்படி எல்லாம் இருப்பதினால்தான் குல தெய்வத்தை மறந்து விடுபவர்களும், குலதெய்வ சிந்தனை இல்லாமல் இருப்பவர்களும், அப்போது தம்மையே அறியாமல் ஒரு சடங்கு போல வீட்டில் நடக்கும் அனைத்து பூஜை, பண்டிகைகளையும் கொண்டாடும்போது தாம் குல தெய்வத்தை மறந்து விட்டோமே என்ற எண்ணம் இருப்பது இல்லை.
அப்படி செய்யும் தவறு தெரிவது இல்லை. என்னதான் எந்த ஆலயத்தில் சென்று சடங்கை செய்தாலும் குல தெய்வத்தை மறப்பது பெற்றோர்களையே மறப்பது போன்றதே என்ற தவறு தெரிவது இல்லை. அதனால் அவர்கள் குல தெய்வத்தின் சாபங்களுக்கு ஆளாகி விட அது அவர்கள் வம்சத்தை பல வகைகளிலும் பாதிக்கின்றது. அந்த குல தெய்வ சாபம் அந்த குடும்பத்தினருக்கு தொடரும்.
