ஆலயம் மற்றும் வீட்டின் பூஜையின் போது மணி அடிப்பதில் உள்ள அர்த்தம் என்னவென்று தெரியுமா?
கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி பூஜை செய்யும் போது மணி அடிப்பது வழக்கம். சாதாரண மணி தானே என நாம் எண்ணிவிடக் கூடாது. மணி அடிப்பதால் உள்ள நன்மை மற்றும் அதன் முக்கியத்துவம் பல இருக்கிறது .
மணி அடிப்பதில் உள்ள அர்த்தம் என்னவென்று தெரியுமா?
மணி அடிப்பதிலும் ஒரே மாதிரியாக மணியை அடிக்கக் கூடாது. மெதுவாக மணியை அடித்தால் அகர்பத்தி சமர்பிக்கப்படுகிறது என்று பொருள். கணகணவென்று அடித்தால் சாமிக்கு தீபம் அல்லது தூபம் காட்டப்படுகிறது என்று பொருள். இரண்டு பக்கமும் விசேஷமாக அடித்தால் திருமஞ்சனம் நடக்கிரது என்று பொருள். மெதுவாக சீராக அடித்தால் இறைவனுக்கு அமுது படைக்கப்படுகிறது என்று பொருள்.
மணி அடிப்பதன் தொனியை வைத்தே கோவிலில் நடக்கும் பூஜைகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம். மணியை எப்போதும் நம் இடது கையால் எடுக்கக் கூடாது. மணியை வலது கையில் எடுத்து பின்னர் இடது கையில் மாற்றிக் கொண்டு,வலது கையால் கற்பூர தட்டை எடுத்து ஆரத்தி காட்ட வேண்டும். அதே போல் மணியை கீழே வைக்கும் போதும் அதே முறையை பின்பற்றவேண்டும்
மணி அடிப்பதில் உள்ள பலன்கள்:
துர் தேவதைகளை விரட்ட, வீட்டில் பூஜை செய்யும் போது கண்டிப்பாக மணி அடிக்க வேண்டும். அந்த மணிக்கும் தனியாக பூஜை செய்யப்பட வேண்டும். பொதுவாக பூஜை செய்யும் போது மணி அடித்து பூஜை செய்வது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், அந்த மணிக்கே நாம் தினமும் பூஜை செய்ய வேண்டும் என்று பூஜா முறைகள் கூறுகின்றன.
பூஜை ஆரம்பிக்கும் முன்பு மணி அடித்தால், அதனுடைய சத்தம் கேட்டு வீட்டிலுள்ள துர் சக்திகள் வெளியே ஓடிவிடும். ஏனென்றால்ம் துர் தேவதைகளுக்கு மணி சத்தம் கேட்டால் பயம். அதனால், தான் வீட்டில் பூஜை செய்யும் போது மணி அடித்து துர் தேவைகளை முதலில் விரட்டி விட்டு அதன் பின்னர் தான் பூஜையை ஆரம்பிப்பார்கள்.
ஒவ்வொரு நாளும் வீட்டில் பூஜை செய்யும் போது இப்படிதான் செய்ய வேண்டும். ஏனென்றால், வீட்டில் இருட்டிய பின்பு மீண்டும் துர் தேவதைகள் வீட்டிற்கு வந்து விடலாம். அப்படி இருந்தால் இருக்கட்டுமே என்று நீங்கள் கூறினால், உங்களுடைய வீட்டில் தெய்வங்கள் வராது.
உங்களது வீட்டிற்கு தெய்வங்கள் வர வேண்டும் என்றால், ஒவ்வொரு நாளும் பூஜை செய்யும் போது பூஜை மணி அடித்து துர் சக்திகளை வெளியேற்றிவிட்டு தான் பூஜை செய்ய வேண்டும். அதோடு மட்டுமின்றி தேவர்களையும், தேவ கணத்தினரையும் வீட்டிற்கு அழைக்கத்தான் பூஜையின் போது மணி அடிக்க வேண்டும் என்று சாஸ்திர சம்பிரதாயங்கள் கூறுகின்றன. சாமிக்கு பூஜை செய்யும் போது படையல் அல்லது நைவேத்தியம் அல்லது நிவேதனம் படைப்பது வழக்கம். நிவேதனம் என்பதற்கு அறிவித்தல் என்று பெயர். அந்த அறிவிப்பை வெளிப்படுத்துவதற்கு தான் மணி பயன்படுத்தப்படுகிறது.
பூஜைப் பொருளில் ஒன்றான மணியை இஷ்டம் போல நினைத்த நேரமெல்லாம் அடிக்கக் கூடாது. அபிஷேகத்தின் போதும், சாம்பிராணி காட்டும் போதும், தீபாராதனை வேளையிலும், நைவேத்யம் செய்யும் போதும், ஆபரணம் அணிவித்து அலங்கரிக்கும் போதும், நீராஞ்ஜனம் என்னும் கற்பூர ஆரத்தியின் போதும் மணியோசை எழுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது .
