முன்னோர்கள் சொல்லி வைத்த பரிகார ரகசியம்!
எல்லோருக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் இருக்கும். அதற்கு ஒரு பரிகாரமும் இருக்கும். வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு ,அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட, கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை (10.30 -12.00) இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, நெய்தீபம் ஏற்றி, தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்.
குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம். கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும். ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.
ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும். வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால், ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.
சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி 12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்கு சாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும். 21 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.
கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும். ஜாதகப்படி சனிபகவானின் பாதிப்பு குறைய, திங்கட் கிழமைகளில் சிவபெருமானுக்கு, பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும்.
சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில் தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும். சிவன் கோவிலில் கால பைரவரையும், விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.
சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை அதிகாலை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற, நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு.
பிரதோஷ காலத்தில், ரிஷபாரூட மூர்த்தியாய், மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாரதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.
மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும். கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில்,செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம்.
நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனைகள் நிறைவேறும்.
வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட, தெய்வ குற்றம், குடும்ப சாபம் நீங்கும். ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்கு சிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.
சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட, சங்கடங்கள் தீரும். சங்கட ஹரசதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள். இரெட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபடகடன் பிரச்சனை தீரும்.
செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபட மூன்று மாதத்தில் வேலை கிடைக்கும். விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்யவும்.
