Sunday, November 5, 2023
HomePurana Kathaigalஆதிவீரமாகாளியம்மன் கோயில் வரலாறு தெரியுமா?

ஆதிவீரமாகாளியம்மன் கோயில் வரலாறு தெரியுமா?

ஆதிவீரமாகாளியம்மன் கோயில் வரலாறு தெரியுமா?

தஞ்சாவூர் மாவட்டம் பள்ளியூரில் ஆதிவீரமாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை அங்குள்ள மக்கள் ‘பௌர்ணமி கோயில்’ என்றும் அழைப்பது உண்டு. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இந்தக் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறும். பௌர்ணமி அன்று பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள், அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும். அன்று பால், மஞ்சள், தயிர், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படும்.

இந்த ஆதிவீரமாகாளியம்மன் கோயில் 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் இருந்துள்ளது. அந்தப் பகுதியில் குடியிருந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் அதனை வழிபட்டு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் இடத்தை காலி செய்து விட்டு சென்ற பின்னர், அந்தப் பகுதி முழுவதும் கருவேல மரங்கள் நிறைந்து காணப்பட்டது. அதில் ஒரு புற்று ஒன்றும் இருந்துள்ளது. இதனை அந்தப் பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். ஒரு நாள் திடீரென மழை பெய்த போது புற்றின் மேல்பகுதியில் இருந்த மண் கரைந்து கருப்பு நிறத்தில் ஒரு பொருள் வெளியே தெரிந்தது.

இதைப்பார்த்த பொதுமக்கள் பிறகு தண்ணீரை அதிக அளவில் ஊற்றிய போது, அந்தப் புற்றில் இருந்து அம்மன் சிலை தென்பட்டது. அது வீரமாகாளியம்மன் சிலை. இதையடுத்து அந்த சிலை காணப்பட்ட இடத்திலேயே பள்ளியூர் மக்களின் முழு ஒத்துழைப்போடு கோவில் கட்டப்பட்டது. அம்மன் சிலை 1½ அடி உயர கருங்கல் சிலை ஆகும். இந்த சிலை 1996-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அதற்கு கோவில் கட்டி 2005-ம் ஆண்டு குட முழுக்கு நடத்தப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு மீண்டும் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு குட முழுக்கு நடத்தப்பட்டது.

குளத்தின் கரையில் விநாயகர் சன்னிதியும் உள்ளது. இந்தக் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தால் எண்ணங்கள் ஈடேறும் என்கிறார்கள். குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்தால் குழந்தைப் பேறு கிட்டும், திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். குழந்தை இல்லாதவர்கள் இந்த கோயிலுக்கு 3 பௌர்ணமி வந்து தரிசனம் செய்ய வேண்டும். தேங்காய், வெற்றிலை, பாக்கு போன்றவை எடுத்து வர வேண்டும்.

மூன்றாவது பௌர்ணமி அன்று அவர்கள் கோயிலுக்கு வரும் போது ஆண், பெண் உருவம் கொண்ட 2 மரப்பாச்சி (மரத்தினால் செய்யப்பட்டது) பொம்மைகளை எடுத்து வர வேண்டும். அதில் ஒரு பொம்மையை கோயிலில் வைத்து விட்டு ஒரு பொம்மை, கொண்டு வந்தவர்களிடம் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு விரைவில் குழந்தை பேறு கிட்டுகிறது. அதன்படி இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு குழந்தை பேறு கிடைத்துள்ளது. இதே போல் திருமணம் ஆகாதவர்கள், தங்கள் ஜாதகத்தின் நகல்களின் 2 பிரதிகளை இந்த கோயிலுக்கு கொண்டு வர வேண்டும். அதனை அம்மன் பாதத்தில் வைத்து விட்டு ஒன்றை அங்கு வைக்கப்பட்டுள்ள ஜாதக உண்டியலில் போட வேண்டும். மற்றொன்று கொண்டு வந்தவர்களிடமே கொடுக்கப்படும்.

அதன்படி இதுவரை இந்த கோயிலுக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு 90 நாளில் திருமணம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நோய் நீங்க வேண்டும், இன்னும் பல்வேறு காரியங்களை நினைத்துக்கொண்டு வருபவர்களுக்கும், அவர்களின் எண்ணங்கள் ஈடேறி வருவதாக இங்கு வரும் பக்தர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்தக் கோயிலில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பூஜைகள் நடைபெற்றாலும் ஆடி மாத பௌர்ணமியில் நடைபெறும் பூஜை தான் திருவிழா போல கொண்டாடப்படுகிறது.

பஞ்சபூத தலம்:

பௌர்ணமி அம்மன் என்று அழைக்கப்படும் ஆதிவீரமாகாளியம்மன் கோயில் பஞ்சபூத தலத்தை உள்ளடக்கியது. இந்தக் கோயிலின் முன்புறம் விநாயகர் சன்னிதி உள்ளது. இந்த அம்மன் கோயிலுக்கும், விநாயகர் சன்னிதிக்கும் இடையில் குளம் (நீர்) உள்ளது. கோயில் இயற்கை சூழ வயல்வெளிக்கு மத்தியில் அமைந்துள்ளது. இதில் ‘புற்று’ நிலம் என்றும், அம்மன் ‘நெருப்பு’ என்று அழைக்கப்படுகிறது. கோயில் பகுதியில் (காற்று) எப்போதும் சிலு, சிலுவென்று காற்று வீசிக்கொண்டே இருக்கும். கோயில் திறந்த வெளியில் (ஆகாயம்) அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கன்றுடன் கூடிய பசு சிலை:

பாப விமோசனம், லட்சுமி கடாட்சம் கிடைக்கும் வகையில் கன்றுடன் கூடிய பசு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அமைந்துள்ள இடத்தின் அருகே புற்று உள்ளது. இதனையும் பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். இந்த புற்றுக்கு தல விருட்சமாக வேப்பமரம் உள்ளது. விநாயகருக்கு தல விருட்சமாக அரசமரம் மற்றும் வேப்பமரம் உள்ளது. இந்த இரண்டு மரங்களுக்கும், திருக்கல்யாணமும் நடத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 2 =

Most Popular