சர்க்கரை விநாயகர் வரலாறு தெரியுமா?
திருவாரூர் மாவட்டம் கீழ வீதி என்ற ஊரில் உள்ள கோயில் சர்க்கரை விநாயகர் கோயில். இந்தக் கோயிலில் சந்ததிகளை காத்தருளும் வகையில் சர்க்கரை விநாயகர் காட்சி தருகிறார். அரசு மற்றும் நெல்லி மரமே இங்கு தல விருட்சமாக விளங்குகிறது. சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி கொலு, வாரம்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிற்து.
கீழ வீதி கோயிலில் உள்ள விநாயகர் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். கோயிலுக்கு மேற்கு பக்கமாக ராஜகோபுரம் உள்ளது. மேற்கு பக்கமாக தியாகராஜரை பார்த்தவாறு ராஜ அலங்காரத்தில் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருமணத்தில் உள்ள தடை நீங்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கவும், நினைத்த காரியம் கை கூடவும் பக்தர்கள் இந்தக் கோயிலில் வேண்டிக் கொள்கின்றனர்.
அப்படி வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் நிவர்த்திக்கடனாக 108 தேங்காய் உடைத்து நெய் தீபம் ஏற்றினால், திருமணத் தடை அகலும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க சர்க்கரை, முக்கனி, சொர்ண அபிஷேகம் செய்தும், வெண்டை, வெற்றிலை, திராட்சை, தேங்காய் வைத்து படைத்து, வெள்ளெருக்கு, தும்பை, செம்பருத்தி மற்றும் அருகம் புல் படைத்து நிவர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
விநாயகப் பெருமானை சுயம்புவாக அருள்பாலித்த போது தஞ்சையை ஆட்சி புரிந்த ராஜராஜ சோழன், இங்குள்ள விநாயகரை வழிபட்ட பிறகு தான் எல்லா காரியத்தையும் தொடங்கியுள்ளார். அதன்பின் அவர் வம்ச வழியினர் குடும்பத்திலுள்ள குதூகலம் தழைத் தோங்கியது. சந்ததிகளை காத்ததால் சர்க்கரை வைத்து வழிபட்டதால் பின்னாளில் சந்திகளை காக்கும் சர்க்கரை விநாயகர் என்று அழைக்கப்பட்டு வருகிறார். கோயில் மகா மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்து விநாயகப் பெருமானை உற்று நோக்கினால் அவர் நம்மிடம் பேசுவது போன்று தெரியும். வேலை இல்லாதவர்கள் இங்குள்ள சர்க்கரை விநாயகரை வழிபட்டு வேலை கிடைக்கப் பெற்றுள்ளனர்.
வசிஷ்ட ரிஷியின் பத்தினியான அருந்ததிதான் விநாயகருக்கு முதலில் மோதகம் செய்து நிவேதனம் அளித்தார் என புராணம் கூறுகிறது. அந்த வகையில் திருவாரூர் கீழ வீதியில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக விநாயகர் இப்பகுதியில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விநாயகர் பெருமானை வணங்கி வெற்றியடைந்தவர்கள், சந்ததியினர்களும் வெற்றி அடைந்ததால், வெற்றியில் திளைத்தவர்கள் வெல்லத்தை படைத்து வழங்கியுள்ளனர். அதுவே பின்னாளில் சந்ததி காக்கும் சக்கரை விநாயகர் (சர்க்கரை விநாயகர்) என அழைக்கப்பட்டார்.
