முருகனுக்கு ஏன் காவடி எடுத்து வழிபடுகிறோம் தெரியுமா?

58

முருகனுக்கு ஏன் காவடி எடுத்து வழிபடுகிறோம் தெரியுமா?

முருகனை வழிபட விரதமிருந்து பாத யாத்திரை செல்வது மற்றும் காவடி எடுப்பது என பல வகையிலும் வழிபாடு செய்கின்றனர் பக்தர்கள். தன்னை நாடி வந்த பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று அப்பன் முருகனும் அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றி தன் அறுபடை வீட்டிலும் அருள்பாளிக்கிறார். இதில் காவடி வழிபாட்டிற்கு ஒரு புராண கதையும் உண்டு. அது என்னவென்று இந்தப் பதிவில் நாம் காணலாம்.

புராணக் கதை:

இடும்பன் என்பவன் அகஸ்திய முனிவரின் சீடர்களுள் ஒருவர். அகஸ்திய முனிவர் ஒருமுறை தனது வழிபாட்டிற்காக, இடும்பனிடம் கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு மலைகளையும் கொண்டு வரும்படி கூறினார்.

முருகனின் திருவிளையாடல்:

அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று சிவகிரி மற்றும் சக்திகிரி என்ற இரு மலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியாகக் கட்டி எடுத்துக் கொண்டு வந்தான். முருகன் இவ்விரு மலைகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். மாறுவேடத்தில் தோன்றிய முருகன், இடும்பன் வழி தெரியாமல் திகைத்த போது, முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப் போல் தோன்றி இடும்பனை ஆவினன் குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறுகிறார்.

காவல் தெய்வமான இடும்பன்:

இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டுப் புறப்படும் போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.

தனக்கே சொந்தம் ஆனால் அந்த சிறுவன் இந்த மலை ‘தனக்கே சொந்தம்’ என்று உரிமை கொண்டாட, கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான். அப்போது இடும்பன் கீழே சரிந்து விழுந்தான். இதைக் கண்ட அகஸ்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அப்போது முருகன், இடும்பன் போல் காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக வாக்களித்தார்.