அசைக்க முடியாத இறை நம்பிக்கை என்ற செல்வம் மற்ற செல்வங்களிலெல்லாம் சிறந்த செல்வம்…!
மும்பையில், இந்து ஒருவர் மிகப் பெரும் செல்வந்தர்.. அவருக்கு மனைவி குழந்தைகள் என்று யாரும் இல்லை. பரோபகாரி. ஒரு தீபாவளி பண்டிகையையொட்டி, தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மிக சிறந்த விருந்து ஏற்பாடு செய்து அவரே முன்னின்று அனைவரையும் உபசரிக்கிறார். விருந்து முடிந்தவுடன், ஒவ்வொருவருடைய இருக்கைக்கு முன் இரண்டு பெரிய வண்ண கவர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒன்றில் பணம் என்றும் மற்றொன்றில் புனித ராமாயணம் புத்தகம் என்றும் எழுதி வைக்கபட்டுள்ளது..
நண்பர்களே, நீங்கள் எனக்காக உண்மையாக உழைக்கின்றீர்கள். உங்கள் வேலைக்கேற்ற அல்லது அதற்கும் அதிகமாகவே உங்களுக்கு சம்பளமும் கொடுத்து வந்துள்ளேன். என்னுடைய இந்த செல்வம் இறைவனால் அருளப்பட்டது. என்னுடைய செல்வத்தை எவ்வாறு செலவழித்தேன் என்று இறைவனுக்கு பதில் சொல்ல கடமைபட்டுள்ளேன். உங்கள் முன் இரண்டு கவர்கள் உள்ளன. ஒன்றில் பணம், மற்றொன்றில் ராமாயணம் புத்தகம் இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
முதலாமவர் தயங்கியவாறே சொன்னார், முதலாளி, நான் ராமாயணத்தை மதிக்கிறேன். ஆனால் இப்போதைக்கு, நோய்வாய்பட்டிருக்கும் என் தாய்க்கு நல்ல சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கு பணம் வேண்டும். பணம் என்று எழுதப்பட்ட கவரை எடுத்து கொண்டார். அடுத்தவர், என் ஓலை குடிசைக்கு பதில், சின்னதாக ஒரு கல் வீடு கட்ட வேண்டும். இந்த பணம் இருந்தால் என் கனவு வீடு கட்ட முடியும். பணத்தை எடுத்து கொண்டு முதலாளிக்கு நன்றி சொல்லி நகன்றார். இப்படியே அடுத்தடுத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களோடு பணத்தை எடுத்து கொண்டனர்.
கடைசியாக, முதலாளியின் தோட்டத்தில் உள்ள கால்நடைகளை பராமரிக்கும் வாலிபனுடைய முறை, அவன் பரம ஏழை. வயதான தாய். மனைவி மற்றும் பிள்ளைகள், அவன் பணத்தின் தேவை அறிந்தவன். அவனும் பணம் உள்ள கவர் அருகில் சென்று, அதை எடுத்து கையில் வைத்து கொண்டு முதலாளியிடம்,
என்னுடைய தேவைக்கு நான் எப்போது கேட்டாலும் நீங்கள் தரத்தான் போகிறீர்கள்.. மேலும் என் அம்மா அடிக்கடி சொல்வார்கள், ஏழ்மை என்பதும் இறைவனால் அருளப்பட்டதே.
நம் தேவைகளை நிறைவேற்றுபவனாக எல்லாம் வல்ல இறைவன் இருக்கின்றான்… மேலும், எங்கள் வீட்டில் ஒரு பழக்கம், தினசரி, அதிகாலை ராமாயணம் படித்தும் மாலையில் அந்தி சாயும் நேரத்தில் மகாபாரதம் படித்தும் என் அம்மா அதன் அர்த்தம் சொல்லுவார்கள். நாங்கள் சுற்றி அமர்ந்து அதை செவிமடுப்போம், என்று சொன்ன அந்த வாலிபன், எடுத்த பண கவரை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு
நான் இந்த புனிதமான ராமாயணம் புத்தகம் தேர்ந்தெடுக்கிறேன் என்று அதை எடுத்தான்.
சம்பவம் இதோடு முடியவில்லை நண்பர்களே! புனித ராமாயணம் இருந்த பெரும் கவரை எடுத்தவன், முதலாளியிடம் நன்றி சொல்லிவிட்டு அதை திறந்து பார்க்கிறான்.
என்ன ஆச்சர்யம். ராமாயணம் இருந்த கவருக்குள் மேலும் இரண்டு கவர்கள்.
ஒன்றில், பணமும் மற்றொன்றில் செல்வந்தரின் சொத்துக்களின் ஒரு பகுதியை தானமாக எழுதி கையெழுத்திட்ட பத்திரம். யாருக்கு என்ற பெயர் மட்டும் எழுதப்படாமல் இருந்தது.
அந்த வாலிபன் மட்டும் இல்லை, ஏனைய தொழிலாளர்களும் அதிர்ந்து போயினர்…
செல்வம் நிலையானது அல்ல. இறைவன் நினைத்தால் இன்றைய நிலை அப்படியே தலைகீழாக மாறும், மனிதர்களை செல்வத்தை கொண்டும் சோதிப்பேன் என்ற இறைவனின் கூற்று எப்படி பொய்யாக முடியும்? வாலிபன் தாய் சொன்னதை நம்பினான். ஆம்,அவள் சொல்லி இறைவன் கொடுத்தார்.
இறைவனை நம்பு. அவனிடம் உன் தேவைகளை கேள். இறைவன் சிலவற்றை தாமதமாக கொடுப்பான். ஆனால் சிறந்ததையே கொடுப்பான். அள்ள அள்ள குறையாத செல்வத்தை அவன் நமக்கு தேவையான நேரத்தில் வழங்குவான்.
அசைக்க முடியாத இறை நம்பிக்கை என்ற செல்வம் மற்ற செல்வங்களிலெல்லாம் சிறந்த செல்வம் அல்லவா.
