அங்குஷ்ட பரிமாணமுள்ள ஜீவன் கர்ம சரீரம் பெற்று வன்னி மரத்தை விட்டு யம கிங்கரர்களுடன் சித்திர குப்தனது பட்டணத்தின் வழியாக யமபுரிக்குச் செல்லும். யமபட்டணம் புண்ணியம் செய்தோர்க்கு மிகவும் அழகாகக் காணப்படும். இறந்தவனைக் குறித்துச் செய்யும் இரும்பு ஊன்றுகோல், உப்பு, பருத்தி, எள்ளுடன் பாத்திரம் ஆகியவற்றை தானம் செய்வதால் யமபுரியிலுள்ள யமபரிகாரர் கள் மகிழ்ந்து காலதாமதம் செய்யாமல் ஜீவன் வந்திருப்பதை யமதர்மனுக்குத் தெரிவிப்பார்கள். எப்போதும் யமதர்மன் அருகிலேயே இருப்பவன் தர்மத்துவஜன். புவியில் இறந்தவனைக் குறித்துக் கோதுமை, கடலை, மொச்சை, எள், கொள்ளு, பயறு ஆகிய ஏழு வகைத் தானியங்களைப் பாத்திரங்களில் வைத்துத் தானம் செய்தால் அவன் திருப்தியடைந்து இந்த ஜீவன் நல்லவன். புண்ணியம் செய்த புனிதன் என்று விண்ணப்பம் செய்வான்.
பாவம் செய்தவனுக்கு யமனும், யமதூதர்களும் யாவரும் அஞ்சத்தக்க பயங்கர ரூபத்தோடு தோற்றமளிப்பர். அதைக் கண்டு பாவி பயங்கரமாக ஓலமிடுவான். புண்ணியம் செய்த ஜீவன் யமன் முன் தோன்றினால், அவன் புண்ணியம் செய்தவனாகையால் சூரிய மண்டலம் வழியாக பிரம்மலோகம் சேரத்தக்கவன். ஆகையால் அவனுக்கு யமன், தன் ஆசனத்திலிருந்து எழுந்து மரியாதை செய்வான். யமகிங்கரர்களும் அணிவகுத்து நிற்பர். புண்ணியம் செய்தவன் யம தூதர்களால் துன்புறுத்தப்படாமல் யமன் முன் சென்று தேவனாக மாறி தேவருலகம் செல்வான். பாவம் செய்தவனை யமகிங்கரர்கள் யமதர்மராஜன் கட்டளைப்படி நரகத்தில் விழுந்து கிருமி, புழு போன்ற ஜன்மத்தை அடைவான். அந்த ஜீவனும் மிதமாகப் புண்ணியம் செய்திருந்தால் முன்பு போல் மானிடப் பிறவியைப் பெறும்.
தொடரும்…
விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!
