பார்வதி தேவியின் அவதாரமாக அருள்புரியும் இசக்கி அம்மனின் புராணக் கதை!
யார் இந்த கிராம தேவதைகள்?
இந்த பதிலில் நாம் காண இருக்கும் இசக்கி அம்மன் என்ற அம்மன் ஒரு கிராம தேவதை ஆவாள். சாதாரணமாக கிராம தேவதைகளை கிராமத்தில் உள்ளவர்கள் பெரிய அளவில் போற்றி வணங்குகிறார்கள். அவர்கள் தம்மையும் தமது கிராமத்தையும் காப்பதாக நம்புகிறார்கள். அது போல சில கிராம தேவதைகளை ஆராதிப்பதன் மூலம் தாமும் தமது குடும்பமும் நலமாக இருப்பார்கள், வேண்டியது கிடைக்கும். முதலில் கிராம தேவதைகள் தம்மையும் தமது சக்தியையும் வெளிக் காட்ட கிராம மக்களை ஏதாவது ஒரு விதத்தில் பயமுறுத்துவார்களாம்.
பின்னர் அந்த கிராம மக்கள் யாராவது ஒருவரின் கனவில் அவர்கள் தோன்றி தான் இன்ன இடத்தில் புதைந்து உள்ளதாகவும், தன்னை வெளியில் எடுத்து வழிபட்டால் அந்த ஊரைக் காத்தபடி இருப்பேன் எனவும் கூறுவார்களாம். அதன்படி அந்த கிராம மக்கள் கனவில் வந்தபடியே அந்த தேவதைகளைக் கண்டறிந்து சிறு ஆலயம் எழுப்பி வழிபடுவார்கள். அந்த தேவதையும் அந்த ஊரைக் காத்தபடி ஊர் எல்லைகளில் அமர்ந்து இருப்பார்களாம்.
இசக்கி அம்மன்:
மாரியம்மன், தன்னை வெளிக்காட்ட அம்மை நோயை உண்டாக்கி அதை குணப்படுத்த தன்னை வழிபட வைத்ததாக கிராமியக் கதைகள் உண்டு. இன்றும் அதனை முன்னெடுத்து செல்கிறார்கள் இந்த தலைமுறையினர். அப்படிப்பட்ட மாரியம்மன் அம்சத்தை சேர்ந்தவள் இசக்கி அம்மன் . அத்துடன் ஒருவரது குடும்பத்தையும் குழந்தைகளையும் காத்தருளும் தெய்வமாக அவதரித்தவளே இசக்கி அம்மன் என்பார்கள். இசக்கி அம்மனை மாரியம்மனின் ஒரு அம்சமாகவே கருதுகிறார்கள்.
மேலும் அந்த இரண்டு அம்மன்களும் பார்வதியின் ஒரு ரூபமே என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. இசக்கியம்மன் பொதுவாக சிவப்பு உடை உடுத்தி, கையில் ஒரு குழந்தையை ஏந்தியபடியே காட்சி தருகிறாள். அவள் கருணை உள்ளம் கொண்டவள். அவள் ஆலயத்தை சுற்றி உள்ள பால்கள்ளு என்ற பெயரில் உள்ள சில செடிகளைக் கிள்ளினால் வெள்ளை நிறத்தில் பால் போன்ற திரவம் வடியும். அதுவே அந்த இடங்களில் இசக்கி அம்மன் உள்ளாள் என்பதன் அடையாளம் என்று கிராம பெரியவர்கள் கூறுவார்கள்.
பார்வதி தேவியின் அவதாரமான இசக்கி அம்மன்:
இசக்கி அம்மனை ரத்தத்தைக் குடிக்கும் நீலி என்ற யட்ஷினியின் சகோதரி என்றும் கூறுகிறார்கள். அந்த நீலி என்பவள் காளியின் யுத்த தேவதைகளில் ஒருவள் என்றும்,காளியும் பார்வதியின் அவதாரமே என்பதினால் இசக்கியம்மனும் பார்வதியை சேர்ந்த ஒரு தேவதையே எனக் கருதுவதில் தவறில்லை என்கிறார்கள் கிராம தெய்வங்கள் பற்றிய ஆய்வாளர்கள். இசக்கி அம்மன் ஆலயங்களில் நாகர்கோவில் பறக்கை, முப்பந்தல் மற்றும் கன்னியாகுமரி குளச்சலில் உள்ள ஆலயங்கள் பிரபலமானது.
புராணக் கதை:
இசக்கி அம்மன் மானிட உருவு எடுத்து பூமிக்கு வந்தபோது அவளை வஞ்சித்து கொன்று விட்ட ஒருவரை பழி வாங்கும் விதத்தில் ஏழு ஜென்மத்திலும் பிறப்பு எடுத்து தானே அவனை அழிக்க வேண்டும் என சிவபெருமானிடம் வரம் கேட்டாள். அவள் கேட்ட வரத்தை தந்தாலும் ஒரு நிபந்தனை விதித்தாராம் சிவபெருமான். ஒவ்வொரு ஜென்மத்திலும் அவள் தன்னை சந்தித்து தனது ஆசிகளைப் பெற்றுக் கொண்டப் பின்னர்தான் அவனை அழிக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.
அதை அவள் ஏற்றுக் கொண்டாள். அடுத்த ஆறு ஜென்மங்களிலும் அவளும் , அவளை வஞ்சித்த அந்த ஆடவனும் பிறப்பு எடுத்தார்கள். அந்த ஆறு ஜென்மத்திலும் அவளே அவரை பல வழிகளில் கொன்று பழி தீர்த்தாள். கடைசி ஏழாவது ஜென்மம். மீண்டும் இருவரும் பிறப்பு எடுத்தார்கள். இசக்கி அம்மன் சிவபெருமானை தேடியவண்ணம் காட்டில் அலைந்து கொண்டு இருந்தாள். அப்போது ஒருநாள் அவள் காட்டு வழியே சென்று கொண்டு இருந்தபோது அவள் ஒரு சித்தரைக் கண்டாள்.
அந்த சித்தருக்கு அவள் மனிதப் பிறப்பு எடுத்து வந்துள்ளதின் காரணம் தெரியும் என்பதினால் அவளை சந்தித்தவர் அவளுக்கு சிவபெருமானும் பார்வதியும் இருந்த இடத்தைக் காட்டினார். அதன்படி இசக்கியம்மன் சிவசக்தியை அவர்கள் உட்கார்ந்து இடத்துக்குச் சென்று பார்த்து தனக்கு வேண்டிய வரத்தைப் பெற்றுக் கொண்டாள். அப்போது பார்வதி அவளுக்கு துணையாக இருக்க ஆவலுடன் நாகராஜரையும் அனுப்பி வைத்தாள்.
நாகராஜரும் இசக்கியம்மனும் காடு வழியே சென்று கொண்டு இருந்தபோது அந்த வழியே ஒருவன் சென்று கொண்டு இருந்ததைக் கண்டார்கள். அவனைப் பார்த்த நாகராஜர் இசக்கியம்மனிடம் அவன்தான் உன்னை வஞ்சித்த ஆடவன் என அடையாளம் காட்டினார். ஆகவே இசக்கியம்மன் அந்த வழிப்போக்கரிடம் சென்று தான் ஒரு வேலை தேடுவதாகவும் அவர் வீட்டு வேலை செய்ய தன்னை வைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டாள். அந்த வழிப்போக்கனும் தனது மனைவி நிறைமாத கர்பிணியாக இருப்பதினால் அவளுக்கு உதவி செய்ய ஒரு பெண் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணியவாறு அவளை தன் வீட்டில் வேலைக்கு அமர்த்திக் கொண்டான்.
அவன் வீட்டில் வேலை செய்யத் துவங்கினாள் இசக்கியம்மன். ஒரு நாள் அவன் வெளியில் சென்றபோது அவனை நாகராஜரை அனுப்பி கொன்று விட்டாள். அந்த ஆடவனின் மனைவிக்கு வந்துள்ள இசக்கியம்மன் ஒரு பெண்ணாக இருக்காது, ஏதோ தெய்வமாகவே இருக்க வேண்டும் எனத் தோன்றியது. தன் கணவன் இறந்தப் பின் தானும் உயிர் வாழக் கூடாது என எண்ணியவள் இசக்கியம்மனிடம் தன் வயிற்றில் ஒரு குழந்தை வளர்கின்றது என்றும் அதை வெளியில் எடுத்துவிட்டு தன் குடலையும் வெளியில் எடுத்து விட்டு தனக்கு மரணம் கிடைக்க அருளுமாறு கேட்டுக் கொண்டப் பின் மயங்கி விழுந்து விட்டாள்.
அவள் வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம் இசக்கியம்மன் அவள் வயிற்றில் இருந்தக் குழந்தையை வெளியில் எடுத்து தன்னிடம் வைத்துக் கொண்டு அவள் குடலை மாலையாக்கி தன் கழுத்தில் அணிந்து கொண்டாள். அவளே ஆள்தாரை இசக்கியம்மன் என்ற பெயருடன் ஊரின் ஒரு ஆலமரத்தடியில் எழுந்தருளி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றாள்.
இடையூரின்றி தொடரும் பயணம்:
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் உள்ள முப்பந்தல் என்ற ஊரில் உள்ள இசக்கியம்மன் ஆலயத்தின் முன்னால் வாகனங்களில் செல்பவர்கள் தமது வாகனங்களை ஒரு நிமிடமாவது நிறுத்தி வைத்து விட்டு எந்த இடையூறும் இன்றி தமது பயணம் தொடர வேண்டும் என வேண்டிக் கொண்டு செல்வார்களாம். இசக்கி அம்மன் எனும் கிராம தேவதை வழிபாடு அல்லது கிராம காவல் தெய்வ வழிபாடு செய்தால் நமக்கு இடையூறாக இருக்கும் அனைத்து தடைகளும் மறைந்து முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
ஆலய அமைவிடம்:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, முப்பந்தல் எனும் ஊரில் அமைந்துள்ளது இசக்கி அம்மன் ஆலயம்.