Saturday, November 4, 2023
HomePurana Kathaigalமுருகா என்ற சொல்லுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் சக்தி உள்ளது.

முருகா என்ற சொல்லுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் சக்தி உள்ளது.

முருகப்பெருமான். தமிழ் கடவுள் முருகனை வணங்கினால் எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

அதனால் முருகனை வழிபட ஒருமுறை முருகா என்று சொல்ல பிரம்மஹத்தி தோஷம் போகும் என்பது நம்பிக்கை.

அதென்ன பிரம்மஹத்தி தோஷம் என்கிறீர்களா?
தூங்குபவரை அவசியமின்றி எழுப்புதல்… ஆன்மீகக் கருத்துக்கள் சொல்பவரை தடுத்தல்..

. தாயிடம் இருந்து குழந்தையைப் பிரித்தல்…கணவன் மனைவியை வாழவிடாமல் தடுத்தல்…இவற்றை செய்தால் பிரம்மஹத்தி என்னும் கொலைப் பாவம் உண்டாகும்.

பிரம்மஹத்தி தோஷம் இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது என்று கேட்பவர்களுக்கு உங்களின் ஜனன ஜாதகத்தில் ஏதாவது ஒரு கட்டத்தில் குருவும் சனியும் இணைந்திருக்கும் அமைப்பு உள்ளதா என்று பாருங்கள்.

அதன்பிறகு ஜோதிடரிடம் சென்று பலன் கேளுங்கள்.
கொலை செய்தாலோ முற்பிறவியில் கடுமையான பாவங்கள் செய்தாலோ இந்த குறை இருக்கும் பிரம்மஹத்தி தோஷத்துடன் பிறக்கவைத்து அதற்கான தண்டனையை அனுபவிக்க நேரிடுகிறது.

எதற்கெடுத்தாலும் தடைகள் வரும். செல்வம், திருமணம், குழந்தைகளுக்கு நல்லது நடப்பதில் தாமதம் என எதற்கெடுத்தாலும் பாதிப்பும் தடைகளும் வந்து கொண்டே இருக்கும்.

* திருவிடைமருதூர் மகாலிங்கதலம் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலமாக உள்ளது.*

முருகா என்று சொன்னாலும் உச்சரித்தாலும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பதற்கு ஒரு புராண கதையே உள்ளது.

கங்கை கரையோரம், குடிசையில் வேதம் கற்ற முனிவரும், அவரது மகனும் வாழ்ந்தனர். ”தந்தையே! கடவுளர்களில் சிறந்தவர் யார்?” என மகன் கேட்டான். ”வேதம் எல்லாம் போற்றும் கடவுள்,முருகப்பெருமான். அவரை வணங்கினால் எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

அதனால் நீயும் முருகனை வழிபடு” என்றார்.
ஒரு சமயம் முனிவர் வெளியூர் சென்ற நேரத்தில், மன்னர் ஒருவர் வந்தார். முகம் வாடியிருந்த அவர், ”தம்பி! முனிவர் இருக்கிறாரா?” எனக் கேட்டார். ”நீங்கள் யார்? என்ன விஷயமாக வந்தீர்கள்? அப்பா ஊரில் இல்லையே!” என்றான் முனிவரின் மகன். ”எங்கு போனாலும் விதி என்னை துரத்துகிறதே!. உன்னிடம் சொல்லி என்ன ஆகப் போகிறது! நாளை மாலை வருகிறேன்” என்று சொல்லி கிளம்பினார்.

சிறுவன் தடுத்து, ”மன்னா! உதவி செய்ய பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு கிடையாது. விளக்குடன் இருண்ட அறைக்குள் பெரியவர் சென்றாலும், சிறியவர் சென்றாலும் உள்ளே வெளிச்சம் பரவி விடும்! எனவே வந்த விஷயத்தை என்னிடம் சொல்லுங்கள். நிச்சயம் தீர்வு சொல்வேன்” என்றான் நம்பிக்கையுடன்.

அவனது பேச்சு மன்னரைக் கவர்ந்தது. ‘புலிக்கு பிறந்த புலி’ என்று எண்ணியபடி, ”தம்பி! நான் வேட்டையாட பாணம் தொடுத்தேன். அது குறி தவறி ஒரு முனிவர் மீது பாய்ந்தது. இப்போதோ கொலைப்பாவம் துரத்துகிறது. போக்குவதற்கு வழி சொல்வாயா” என்றார் மன்னர். ”பரிகாரம் இருக்கிறதே! கங்கை நதியில் மூழ்கி, வடக்கு நோக்கி எழுந்து, மூன்று முறை ‘முருகா’ என்று சொல்லுங்கள். பாவம் ஓடி விடும்” என்றான்.
மன்னரும் அவ்வாறே செய்து பாவம் நீங்கப் பெற்றார். மறுநாள் முனிவர் குடிலுக்கு வந்தார். வாசலில் தேர் வந்து சென்ற தடம் பதிந்திருந்தது. மன்னர் வந்த விஷயம் முழுவதையும் கேட்டு அறிந்த முனிவருக்கு, மகன் மீது கோபம் எழுந்தது. ”உன்னைப் போய் மகனாகப் பெற்றேனே!

ஒருமுறை ‘முருகா’ சொன்னாலே ஆயிரம் பிரம்மஹத்தி போகுமே! நீ மூன்று முறை சொல்ல வைத்து, மந்திரத்தின் பெருமையைக் குறைத்து விட்டாயே! அடுத்த பிறவியில் பூலோகத்தில் வேடனாகப் பிறக்க கடவது” எனச் சபித்தார். சிறுவன் தந்தையிடம் மன்னிப்பு கேட்டான்.
”என் சாபம் பலித்தே தீரும். அடுத்த பிறவியில் முருகனின் திருநாமங்களில் ஒன்றான ‘குகன்’ என்னும் பெயருடன் வேடனாகப் பிறப்பாய். ராமபிரானுக்கு தொண்டு செய்யும் பாக்கியம் பெறுவாய்” என்றார். இச்சிறுவனே மறுபிறவியில் குகனாகப் பிறந்தான்.
முருகன் பெயரை உச்சரிக்க சொன்னால் பிரம்மஹத்தி தோஷம் போகும் என்பது ஒருபுறம் இருக்க முனிவர் மகன் வேடனாக பிறந்து அந்த கடவுளின் அவதாரமான ராமபிரானுக்கே தொண்டு செய்யும் பாக்கியத்தை பெற்றார். இதிலிருந்தே முருகனின் திருநாமத்தின் மகிமையை அறிந்து கொள்ளலாம்.

பாம்பம் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் படித்தால் எதிர்ப்புகள், எதிரி, ஏவல், பில்லி, சூனியம் பயம் போக்கும். செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 1 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 1 முறை பாராயணம் செய்ய பயம் போகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + fifteen =

Most Popular