நாகராஜர் கோயில் – வரலாறு!
பாம்பு மூலவராக உள்ள ஒரே கோயில் நாகர்கோவில் நாகராஜா கோயில். நாக பிரதிஷ்டையும், சர்ப்பக்காவும் கேரளாவிற்கு உரிய சிறப்பம்சங்களாகும். பழங்காலத்தில் கேரளாவில் 15 ஆயிரம் சர்ப்பக்காவுகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. வெட்டுக்காடு, பாம்பன் மேக்கோடு, மன்னார் சாலை ஆகியவை பிரசித்தி பெற்ற சர்ப்பக்காவுகளாகும்.
மன்னார் சாலையில் வாழ்நாள் முழுவதும் ஒரு பெண் கன்னியாகவே இருந்து நாகபூஜை செய்யும் வழக்கம் தற்போதும் உள்ளதாக சொல்லப்படுகிறது. திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் மாரியம்மன் கருநாகமாக தோன்றியதாக வரலாறு கூறுகிறது. ஆனால், இந்தக் கோயிலில் கருமாரியம்மன் 5 தலை நாகத்தின் குடை நிழலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் புரிகிறாள்.
திருச்செங்கோடி மலைச் சரிவில் 60 அடி நீளத்தில் பாம்பு புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இங்கு பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சிலர் நாகத்தை குல தெய்வமாக கோயில் கட்டி வழிபாடு செய்கின்றனர்.
இப்படி நாக வழிபாட்டுக்காக பல கோயில்கள் இருந்தாலும் நாகர்கோவில் நாகராஜா கோயில் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. இங்குள்ள கோயிலின் பெயரை வைத்து தான் நாகர்கோவில் விளங்குவதாக சொல்லப்படுகிறது.
தல வரலாறு:
இளம்பெண் ஒருவர் புல் அறுத்துக் கொண்டிருந்த போது அவரது அரிவாள் ஆனது 5 தலை நாகத்தின் தலையி பட்டு ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அலறியடித்து ஓடிய அந்தப் பெண் கிராம மக்களை அழைத்து வந்தாள். இதையடுத்து, கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அங்கு கோயில் கட்டி வழிபட தொடங்கியதாகவும், பிற்காலத்தில் களக்காடு மன்னரின் தீராத தொழு நோய் கோயில் வழிபாட்டின் மூலமாக சரியானதாகவும் வரலாறு சொல்கிறது.
கோயிலுக்குள் செல்லும் போது வாசலின் இரு புறமும் 5 தலை நாகத்தின் படம் எடுக்கும் வடிவிலான சிலையானது அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இவை தர்னேந்திரன் என்ற நாகராஜன் என்றும், பத்மாவதி என்ற நாகராணி என்றும் சொல்லப்படுகிறது.
இந்தக் கோயிலின் கருவறையானது ஓலை கூரையில் கீழ் இருப்பதாகவும், அந்த கூரைக்கு பாம்பு காவலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மூலவர் இங்கு தண்ணீரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால், அவர் அமைந்திருக்கும் இடமானது எப்போதும் ஈரமாக இருக்கும். அந்த தண்ணீர் ஊற்றிருந்து எடுக்கப்படும் மண் தான் இந்தக் கோயிலின் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.
இது ஆறு மாதகாலம் கறுப்பாகவும், ஆறு மாதகாலம் வெள்ளையாகவும் காட்சி தருகிறது. திருமணம் நடக்க வேண்டியும், நாக தோஷம் நீங்கவும், ராகு, கேது தோஷம் நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வேண்டிக் கொண்டு நாகருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர். பால் பாயாச வழிபாடு முக்கிய வழிபாடு ஆகும். பால், உப்பு, நல்ல மிளகு, மரப் பொம்மைகள் ஆகியவற்றை காணிக்கையாக பக்தர்கள் வழங்குகின்றனர்.