இறைவனிடம் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்?
யாராக இருந்தாலும் இறைவனிடம் பக்தியோடு எதை கேட்டாலும் நமக்கு கேட்டதை கொடுத்து இறைவன் அருள் புரிவார். அப்படி கேட்பதில் உயர்வான விஷயங்களும் உண்டு, சாதாரண விஷயங்களும் உண்டு.
இறைவனை வேண்டினேன், நோய் சரியாகி விட்டது,
பிரார்த்தனை செய்தேன், செல்வம் கிடைத்து விட்டது,
பிரார்த்தனை செய்தேன், வேலை கிடைத்து விட்டது,
என்று சந்தோஷப்படுவது எல்லாம், கோடீஸ்வரனிடம் போய் 10 ரூபாய் வாங்கி சந்தோஷப்படுவது போல ஆகும். இறைவனிடம் என்ன கேட்க வேண்டும் என்று வேதங்கள் சொல்கிறது என்று ஸ்லோகங்கள் மூலமாக ஆதி சங்கரர் புரிய வைத்தார்.
படித்து முடித்த இளைஞர்களாக இருந்தால் வேலை கேட்பது, திருமணமாகவில்லை என்றால், திருமண பாக்கியம் கேட்பது, குழந்தை இல்லை என்றால் குழந்தை பாக்கியம் கேட்பது, பதவி உயர்வு இல்லையென்றால், வேலையில் பதவி உயர்வு கேட்பது, நோய் தீரனும், என் பையனுக்கு, பொண்ணுக்கு கல்யாணம் நடக்கணும் என்று தான் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஆனால், உண்மையில் இதையெல்லாம் இறைவனிடம் கேட்க கூடாது என்று சொல்லி, கேட்க வேண்டிய என்று சில உள்ளது உன் முயற்சியால் கூட நீ அடைய முடியாத தை இறைவனிடம் கேட்க வேண்டும் என்று ஆதி சங்கரர் சொல்லிக் கொடுக்கிறார்.
கர்வம்:
நான் செய்கிறேன் என்ற கர்வத்தை என்னிடமிருந்து விலக்கிவிடுங்கள். எல்லாமே அறிந்த இறைவனுக்கு, உன்னை படைத்தவனுக்கு, உன்னை காப்பவனுக்கு உன் துக்கம், நோய், கஷ்டம் தெரியாதா? இறைவனிடம் சொல்லித்தான் அவருக்கு தெரிய வேண்டுமா?
ஆசை:
எனது மனதில் ஆசைகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த ஆசைகளை வராமல செய்துவிட என்று வேண்டிக் கொள்ள வேண்டும். ஒரு ஆசையை நிறைவேற்ற முயன்றால் அது பலிக்கும் போது இன்னொரு ஆசை மனதில் உண்டாகிறது. ஆசைக்கு முடிவு இல்லை. கர்வத்தை எப்படி அழிக்க முடுயாதோ அது போன்று ஆசையையும் நம்மால் அழிக்க முடியாது.
பகவான் அனுகிரஹத்தால் மட்டுமே, நம்மால் அழிக்க முடியாத கர்வத்தையும், நம்மிடம் உருவாகும் ஆசையையும் அழிக்க முடியும்.
திருப்தி:
எனக்கு எது இருக்கிறதோ அதைப் பார்த்து நான் திருப்தி அடையும் குணத்தை மட்டும் எனக்கு கொடு என்பது தான் ஆதி சங்கரர் வாக்கு.
பகவத் கீதையில், இந்த திருப்தியை பற்றி ஸ்ரீ கிருஷ்ணர்
“யதுர்சா லாப சன்துஷ்ட: த்வந் த்வா தீதோ விமத் சர:
சம: சித்தாவ சித்தௌ ச க்ருத் வா பி ந நிபத் யதே !!'”
என்று சொல்லும் போது,
நானாக சென்று யாரிடமும் கதை ஏந்த மாட்டேன், எனக்கு என்று எது கிடைக்கிறதோ அதை ஏற்றுக் கொண்டு நான் சந்தோஷமாக வாழ்வேன் என்று எவன் திருப்தி அடைகிறானோ அவனே சுகம், துக்கம், வெற்றி, தோல்வி என்ற எந்த அனுபவமும் மனதளவில் பாதிக்காது என்கிறார்.
இரக்கம்:
இறைவனே எனக்கு யாரை பார்த்தாலும் மனதில் இரக்க சிந்தனை உருவாகும் படி செய்யுங்கள் என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.
மோக்ஷம்:
இறைவா, பல யுகங்களாக நானும் இந்த ஸ்ம்ஸார ஸாகரத்தில் மூழ்கி எழுந்து கொண்டு இருக்கிறேன். என்னை இதிலிருந்து தாண்ட வைத்து எனக்கு மோட்சத்தை கொடு என்கிறார் ஆதி சங்கரர்.
புனரபி ஜனனீ ஜடரே சயனம் I
இஹ ஸம்ஸாரே பகுதுஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே !!”
என்று பாடுகிறார்.
பிறப்பும், இறப்பும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பிறந்தாச்சு, கொஞ்ச வருஷம் வாழ்ந்து தான் ஆக வேண்டும். பிறகு இறப்பு. செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்அ திரும்ப திரும்ப பிறந்து, வாழ்ந்து, இறந்து தான் ஆக வேண்டும்.
ஆனால் இப்படியே எவ்வளவு நாள் ஸம்ஸார சாகரத்தில் சூழல்வது? கர்வம், ஆசையை எப்படி நம்மால் அழிக்க முடியாதோ அது போன்று மனதில் திருப்தியையும் இரக்கத்தையும் நம்மால் கொண்டு வர முடியாது. அது போலத்தான் ஸம்ஸார சக்கரத்திலிருந்து நமக்கு முற்றுப்புள்ளி என்பது கிடையவே கிடையாது.
தெய்வத்தின் அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே மோட்சம் கிடைக்கும். இந்த 5 விஷயங்களைத் தான் இறைவனிடம் கேட்டு பெற வேண்டும் என்று ஆதி சங்கரர் எடுத்துரைக்கிறார்.
