பிரியவிரதர் வரலாறு
பிரியவிரதர், மனுவின் மற்றொரு புத்திரர். அவர் ஒரு சமயம் நாரத முனிவரைச் சேவித்து ஆத்ம சொரூப ஞானத்தை சுலபமாக அறிந்து, அதனால் பிரம்ம தியானம் என்ற பிரம்ம ஸத்ரயாகத்தைச் செய்ய விரும்பினார். ஆனால், அவருடைய பிதா ஸ்வயம்புவர் அவரைப் பூமியைப் பரிபாலித்து வரும்படி உத்தரவிட்டார். எனினும், தந்தையின் ஆணையை மறுத்துவிட்டு தவம் செய்யப் புறப்பட்டார்.
அப்போது அங்கு வந்த பிரம்மதேவர், பிரிய விரத! நீ பத்மநாப சரணாரவிந்தக் கோட்டைக்குள் வசிப்பவன். ஆறு பகைவர்களையும் வெற்றி கண்டவன். ஆகவே, பகவத் கிருபையால் கிடைத்துள்ள சுகபோகங்களை அனுபவித்து இல்லறத்தை நல்லறமாக்கிப் பிறகு ஆசைகளைத் துறந்து, ஆத்ம நிஷ்டையின் ஆனந்தத்தைப் பெறுவாயாக என்று கூறினார். பின்னர், பிரிய விரதர் அவ்விதமாகவே செய்வதாகக் கூறினார். பிரம்மதேவரும் தமது திவ்ய லோகத்துக்குச் சென்றார்.
மனு மிக்க மகிழ்ச்சியுடன், நாரதர் அனுமதி பெற்று பிரியவிரதருக்குப் பட்டாபிஷேகம் செய்வித்தார். விசுவகர்மாவின் புத்திரி பர்ஹித்மதியை விவாகம் செய்வித்தார். பிரியவிரதருக்கு பத்து புத்திரர்களும், ஊர்ஜஸ்வதி என்ற ஒரு புத்திரியும் பிறந்தனர். அவர்களுள் கவி, மகாவீரன், வைனன் என்ற மூன்று குமாரர்களும் சிறுவயது முதலே ஆத்ம வித்தையில் ஆவலுடையவர்களாகிப் பரமஹம்ஸா சிரமத்தை அடைந்தனர்.
பிரியவிரதர் ஏழு சமுத்திரங்களையும், ஏழு தீவுகளையும் வகுத்து அவற்றில் தனது ஏழு குமாரர்களையும் மன்னர்களாக முடி சூட்டினார். மகள் ஊர்ஜஸ்வதியை அசுரகுரு சுக்கிராச்சாரியருக்கு மணம் செய்து கொடுத்தார். பிரியவிரதருக்கு நாளடைவில் இல்லறத்தில் வெறுப்பு ஏற்பட ஒருநாள் எல்லாவற்றையும் விட்டு விட்டு வைராக்கியத்துடன் ஸ்ரீஹரியின் லீலா வைபவங்களைப் பாடிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்து நாரத முனிவரால் உபதேசிக்கப்பட்ட வழியைப் பின்பற்றிச் சென்றார். ஆசிரதரர் பிதாவினால் அளிக்கப்பட்ட ஜம்பூத்வீபத்தை நீதியுடன் ஆண்டு வந்தார். பூர்வசித்தியை மணந்து ஒன்பது புத்திரர்களைப் பெற்று நாட்டை ஒன்பது கண்டங்களாகப் பிரித்து புத்திரர்களிடம் ஒப்படைத்து பூர்வசித்தியுடன் பிரம்மலோகம் சென்றார்.
தொடரும்…
ஓம் க்ரிஷ்ணாய நமஹ!
