சிவலிங்கம் சாட்சி சொன்ன வரலாறு!

77

சிவலிங்கம் சாட்சி சொன்ன வரலாறு!

தஞ்சாவூர் மாவட்டம் திரும்புறம்பயம் என்ற ஊரில் உள்ள கோயில் புன்னைவனநாதர் சாட்சிநாதர் கோயில். அங்கு அவரே மூலவர். அவரின்றி யாருமில்லை. இந்தக் கோயிலில் சிவலிங்கமே வந்து சாட்சி சொல்லியிருக்கிறதாம். அது ஏன், எதற்காக? என்று இந்தப் பதிவில் பார்ப்போம் வாங்க…

அந்தக் காலத்தில் காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனது பெயர் அரதன குப்தன். மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, மதுரையிலேயே வாழ்ந்து வந்தார். காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த, அவன் தங்கைக்கும், தங்கையின் கணவருக்கும் தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை.

எதிர்பாராமல் ஒரு நாள், அரதன குப்தனின் தங்கையும், அவள் கணவரும் இறந்துவிட்டதாக காவிரிபூம்பட்டினத்திலிருந்து தகவல் வந்தது. உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு, திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான்.

வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே, ஒரு புன்னைவனம். அதில் ஒரு வன்னிமரம் இருந்தது. அருகில் ஒரு சிவலிங்கம் கூட, சற்றுத் தள்ளி ஒரு கிணறு இருப்பதைக் கண்ட அவர்கள், கட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு, அங்கேயே தங்கி விட்டார்கள். காலையில் கண் விழித்த ரத்னாவளி பதறிப் போனாள். எதற்காக என்றால், அரதன குப்தன், அசைவற்ற நிலையில் கிடந்தான். நள்ளிரவில் நல்ல பாம்பு ஒன்று வந்து கடித்திருக்கிறது. அந்த நேரம் பார்த்து திருஞானசமந்தர் வருகிறார். அரதன குப்தனை பாம்பு கடித்ததை அறிந்து கொண்ட அவர், எம்பெருமான் ஈசனிடம் முறையிடுகிறார்.

உயிரோடு எழுந்தான் அரதன குப்தன். சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர்.அப்புறம் சொன்னாராம் : “ஈசனுக்கு முன்பாகவே இந்தப் பெண்ணுக்கு ஒரு தாலியைக் கட்டி, இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ. மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன். இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள், அங்கே இருந்த ஒரு வன்னிமரமும், கிணறும் , சிவலிங்கமும்தான். இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள்.

கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி, கொதித்துப் போனாளாம். ரத்னாவளி நடந்த விஷயங்களை, உள்ளது உள்ளபடியே சொல்ல. அதை கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி. இதையடுத்து அரசன குப்தனின் 2 திருமணம் வழக்கு சபைக்கு வந்தது. அந்த சபையில் வைத்து தான், நீ திருமணம் செய்து கொண்டதற்கு என்ன சாட்சி, யார் வருவா? என்று கேட்டுள்ளார்கள். அதற்கு ரத்னாவளியோ, எனது திருமணத்திற்கு சாட்சியா மனிதர்கள் என்று யாரும் இல்லை. அதற்கு வன்னி மரமும், சிவலிங்கமும் தான், கிணறும் தான் சாட்சி என்று கூறினாள். அதற்கு முதல் மனைவியோ நக்கலாக சிரித்துக் கொண்டே அந்த சிவலிங்கமா வந்து சாட்சி சொல்லப் போகிறது? என்றாள்.

இதைக் கேட்டு சபையில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்தார்களாம். கூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி அழுதாள். ஈசனிடம் முறையிட்டாள். ஈசனே, இது என்ன சோதனை? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்? சொல் இறைவா சொல்? ரத்னாவளி பெரும் குரல் எடுத்து கதறி அழ, அப்போது ஒரு குரல் கேட்டது. அது என்ன என்றால், நாங்கள் சாட்சி. குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க, ஈசன் அங்கே எழுந்தருளி நின்றாராம்.

ஆம், இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான். ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக, கல்யாணம் நடந்த இடமான திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும், இன்று முதல், இந்த மதுரை கோயிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் ‌சாட்சியாக இருக்கும், என்று கூறி மறைந்தாராம். பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம். இப்போதும், மதுரையில் சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில், வன்னி மரம், கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கிறது.

கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் இத்தல இறைவன் சாட்சி நாதர் என்றும் “ஸ்ரீ சாட்சிநாதசுவாமி என்ற பெயரில் அழைக்கப்பட்டாராம். திரும்புறம்பயம் கோயில் சிவனுக்கு, கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் இந்த திரும்புறம்பயம் ஸ்ரீ சாட்சிநாதசுவாமி கோயில் இருக்கிறதாம்.