திருமழபாடி வைத்தியநாதர் கோயில் – புராணக் கதைகள்!

87

திருமழபாடி வைத்தியநாதர் கோயில் – புராணக் கதைகள்!

அரியலூர் மாவட்டம், திருமழபாடி என்ற ஊரில் உள்ள கோயில் தான் வைத்தியநாதர் கோயில். இங்கு வைத்தியநாதசுவாமி மூலவராகவும், சுந்தராம்பிகை அம்மன் தாயாரும் பக்தரிகளுக்கு காட்சி தருகின்றனர். பனை மரம் தான் கோயிலின் தல விருட்சம்.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இரு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. பாலாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. கருவறை மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி தருகிறார். மேலும் இங்கு உள்ள குளத்திற்கு மருத்துவ குணம் இருப்பதால் இதில் நீராடுவோர்க்கு தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகிறது நம்பிக்கை இருக்கிறது.

பக்தர்கள் சிவனுக்கும் நந்திக்கும் நடுவில் இருக்கும் மூன்று குழிகளை நவக்கிரகங்களாக கருதி, அவற்றில் தீபமேற்றி வணங்குகின்றனர். இந்தத் தலத்தில் இருந்த நவகிரகங்களை ஈசன் தம் நெற்றிக்கண்ணால் அழித்துவிட்டராம். அதன் காரணமாக முக மண்டபத்தில் உள்ள மூன்று குழிகளையே நவகிரகங்களாக பாவித்து வழிபடுகின்றனர். சரும நோயினால் அவதிப்பட்ட சந்திரன், இந்தத் தலத்து இறைவனை வழிப்பட்டான். சந்திரனுக்குக் காட்சி அளித்த இறைவன், நவகிரகக் குழிகளில் நெய்விளக்கு ஏற்றி வழிபடும்படி கூறினார்.

சந்திரனும் அப்படியே செய்து சருமநோய் தீரப்பெற்றதாகத் தல வரலாறு கூறுகிறது. சிபி சக்கரவர்த்தியின் நவகிரக தோஷமும் நீங்கியதாகச் சொல்லப்படுகிறது. சனிக்கிழமைகளில் இந்தக் குழிகளுக்கு முன்பாக எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மார்க்கண்டேய முனிவர், வைகாசி விசாகத்தில் மழுவேந்திய கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்திற்கு மழுவாடி என்ற பெயரும் உண்டு. இத்தலத்தில்தான் நந்திக்கு திருமணம் நடைபெற்றது. மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வைதீஸ்வரன் தலத்திற்கு எவரேனும் நேர்த்தி கடன் இருந்தால் அதை இந்த நிறைவேற்றலாம் என்பதும் இத்தல சிறப்பாகும்.

தல வரலாறு:

பிரம்மனின் சத்திய லோகத்திலிருந்து புருஷா மிருகம் லிங்கத்தை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டது. இதை அறிந்த பிரம்மன் லிங்கத்தை எடுக்க முயன்றான். பிரம்மன் அந்த லிங்கத்தை எடுக்க முயல, அது அவனின் கைக்கு வர மறுத்து அது முடியாது போகவே இது, வைரத்தூணோ என்று கூறினான். பிரம்மன், வைரத்தூணானவனோ எனக் கூறியதால், இவ்விறைவனை வைரத்தூண் நாதர் என்றும், வச்சிரதம்பேஸ்வரர் என்றும் ஈசனுக்கு பெயர்கள் ஏற்பட்டது.

திருமழபாடி பெயர்க்காரணம்:

சோழர் காலத்தில் அவர்களுக்கு உதவியாக சேரர் பிரிவான மழவர் படை பாசறை இங்கு அமைத்திருந்ததால் வந்ததென்றும், மேலும் மார்க்கண்டேய முனிவருக்காக இங்குள்ள சிவபெருமான் மழு ஏந்தி நடனம் ஆடியதால் மழுவாடி என்று பெயர் பெற்று பின்னர் மழபாடி என்று பெயர் திரிந்ததாகவும் கூறுகின்றனர்.

கயிலைநாதன் எழுந்தருளியுள்ள திருக்கோவிலை கண்டு வழிபட எண்ணிய நம்பியாரூரராம் சுந்தரமூர்த்தி சாமிகள் திருவாரூரிலிருந்து புறப்பட்டு நன்னிலம், திருவாஞ்சியம், ஆவடுதுறை, நாகேச்சரம், கண்டியூர் போன்ற தலத்தை தரிசித்து திருவாலம் பொழிலையைடைந்து இறைவனை வழிபட்டு அன்றிரவு தங்கியிருந்த போது அவர் கனவில் சிவபெருமான் தோன்றி “மழபாடிக்கு வருவதற்கு மறந்தாயோ” என்று வினவி மறைந்தார்.
பின் வடகரையை அடைந்து திருமழபாடி ஈசனாரை தரிசித்து,

“பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கு அசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னை அல்லால் இனியாரை நினைக்கேனே”
என்ற தேவார திருப்பதிகத்தை பாடிப்போற்றினர்.

இந்த மழப்பாடி ஈசனை சுந்தரர் காலத்துக்கு முன்பே திருஞானசம்பந்தர் கண்டு “காச்சிலாத பொன்னோக்கும் கனகவயிரத்தின் ஆச்சிலதா பளிங்கினன் மழப்பாடி வள்ளல்” என்று போற்றியுள்ளார். திருநாவுக்கரசரோ “மரு சுடரின் மாணிக்கக்குன்று கண்டாய் மழப்பாடி மண்ணும் மணாளன் தானே ” என்று மழப்பாடி ஈசனை போற்றியுள்ளார்.

நந்திதேவர் விழா:

நந்தி கல்யாணம்: திருமழபாடி கோயிலில் தான் நந்தி தேவர் சிவகணங்களின் தலைமைப் பதவியையும், திருக் கயிலையின் தலை வாயிலைக் காக்கும் உரிமையையும் பெற்றார். ‘நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்’ என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நந்தி தேவரின் திருக்கல்யாணம் நடைபெற்ற தலமும் இது தான்.

குழந்தை பாக்கியம் வேண்டி சிலாத முனிவர் சிவனை நோக்கி தவம் இருந்தார். அப்போது அசரீரி தோன்றி,”முனிவரே! புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
நீர் யாகம் செய்யும் நிலத்தை உழும் போது, பூமியில் இருந்து ஒரு பெட்டி கிடைக்கும். அதனுள் இருக்கும் குழந்தையை எடுத்து வளர்த்து வாருங்கள். ஆனால், அந்தக் குழந்தை 16 ஆண்டுகள் தான் உயிர் வாழும்,”என்றது. சிலாதரும் அவ்வாறே செய்ய ஒரு பெட்டியில், மூன்று கண்கள், நான்கு தோள்கள், சந்திரனை அணிந்த முடியுடன் ஒரு குழந்தை இருப்பதைக் கண்டார்.

வியந்து போன அவர், பெட்டியை மூடிவிட்டு மீண்டும் திறக்க பழைய அடையாளங்கள் மறைந்து அழகிய குழந்தையாக மாறியிருந்தது. அதற்கு “ஜபேசர்’ என பெயரிட்டார். இறைவனிடம் சகல வரங்களையும் பெற்ற தனது மகன் ஜபேசர் என்கிற திரு நந்திதேவருக்கு திருமணம் செய்ய சிலாத முனிவர் முடிவு செய்தார். சிலாத முனிவர், தம் மகனுக்கு திருமழப்பாடி தலத்தில் ஆசிரமம் அமைத்து, தவமும், அறமும் செய்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகையை பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருமணம் செய்து வைத்தார். இதற்காக திருவையாற்றில் இருந்து நந்திகேஸ்வரர் குதிரை வாகனத்தில் திருமழப்பாடி புறப்பட்டார்.

தனது பக்தனுக்கு தானே முன்னின்று திருமணம் செய்து வைப்பதற்காக ஐயாறப்பர்- அறம் வளர்த்தநாயகி ஆகியோர் பல்லக்கில் திருமழப்பாடிக்குச் சென்றனர். திருமழப்பாடியில் உள்ள சுந்தராம்பிகை சமேத வைத்தியநாத பெருமான் கொள்ளிடம் சென்று மங்கல வாத்தியங்கள் முழங்க ஐயாறப்பர், அறம் வளர்த்தநாயகி, நந்தி்யம்பெருமான் ஆகியோரை வரவேற்று கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள திருமண மேடைக்கு அழைத்து வந்தார். இருவருக்கும் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக இன்றும் நந்தியம்பெருமான்- சுயசாம்பிகை திருமணம் திருமழப்பாடியில் நடைபெறுகிறது.

ஓம் சிவாய நம ஓம் சிவ சிவ ஓம்