சிவபெருமானின் வெள்ளயங்கிரி மலையின் வரலாறு!
கோயம்புத்தூரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளயங்கிரி மலை பக்தர்களுக்கும் மற்றும் சாகச ஆர்வலர்களுக்கு நீண்ட காலமாக மலையேற்ற மையமாக இருந்து வருகிறது. ஏழு மலைகளின் சங்கிலியான வெள்ளியங்கிரி மலைகள் நாட்டின் தென் கைலாயம் என்று அன்புடன் போற்றப்படுகிறது.
இம்மலையின் அடிவாரத்தை பூண்டி என்றழைக்கின்றனர். பூண்டி விநாயகர், வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மன் ஆகியோரின் சன்னதிகள் பக்தர்களை முகப்பிலேயே வரவேற்கின்றன. வெள்ளியங்கிரி மலைகள், இறைமையின் மகத்துவத்துக்கு மட்டுமின்றி இயற்கையின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிற மேன்மையான தலமாகும்.
வெள்ளியங்கிரி மலையின் வரலாறு:
சிவபெருமானை மணக்க வேண்டும் என்று மிகவும் தீரமாக இருந்த பெண் ஒருத்தி, தான் எதிர்பார்த்த நாளுக்குள் சிவபெருமான் வந்து தன்னை மணக்க வேண்டும் என்றும், அப்படி அவர் வரவில்லையென்றால் தான் உயிர் துறக்க போவதாகவும் சபதம் செய்திருந்தாள். இதனை அறிந்த சிவபெருமான் அவளது உயிர்த்தியாகத்தை நிறுத்தும் பொருட்டு அந்த பெண் இருந்த இடம் தேடி புறப்பட்டார், இருந்தாலும் அவர் வரும் வழியில் பல இடையூறுகளை சந்தித்ததால் சரியான நேரத்தில் அவரால் அந்த பெண்ணிடம் சேர முடியவில்லை.
சிவபெருமான் தன்னை காண வராத காரணத்தினால் அப்பெண் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதனால் மனமுடைந்த சிவபெருமான் சோகத்துடனும் கோவத்துடனும் வந்து அமர்ந்த மலை தான் இந்த “வெள்ளியங்கிரி மலைகள்”. அவர் இங்கு மன சாந்தியுடன் இங்கு அமராவிட்டாலும் கூட, இங்கு வரும் பக்த பெருமக்களுக்கு மன நிம்மதியும், அமைதியையும் வழங்கி ஆசி புரிகின்றார்.
ஏழாவது மலையில் எம்பெருமான் தரிசனம்:
ஏழு மலைகளை அடங்கிய தொடர் தான் வெள்ளியங்கிரி மலைகள். ஏழாவது மழைக்கு சென்றால் தான் எம்பெருமானை தரிசிக்க முடியும். முதல் மலையில் ஒரு அடி அளவுள்ள படிக்கட்டுகள் இருந்தாலும் ஏறுவதற்கு சற்று சிரமமாகத் தான் உள்ளது. மூலிகை மணத்துடன் வீசும் குளிந்த காற்றும், ரம்மியமான சூழலும், பறவைகள் மற்றும் வண்டுகள் எழுப்பும் மெல்லிய ஒலியும் நம் மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. முதல் மலையின் முடிவில் நாம் விநாயகர் சன்னதியைக் காணலாம்.
முழுமுதற் கடவுளை தரிசித்துவிட்டு இரண்டாம் மலை ஏற வேண்டும். இரண்டாவது மலை சிற்சில இடங்களில் சமவெளியும் படிகளும் உள்ளன. இந்த மலையின் முடிவில் பாம்பாட்டி சுனை என்ற தீர்த்தம் உள்ளது. மூன்றாவது மலையில் சித்தர்கள் நடமாட்டம் இருக்கும் என நம்பப்படுகிறது. இங்கே நின்று கை தட்டினால் பாறைகளின் இடுக்கிலிருந்து தண்ணீர் வருகிறதாம். நான்காவது மலையும் ஐந்தாவது மழையும் நடந்து போக எளிதாகவும் பக்தர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பையும் வழங்குகின்றன.
வெள்ளை மணலைக் கொண்ட ஆறாவது மலை நீலி ஆற்றில் சேர்கிறது. இந்த மலை செங்குத்தாக இருப்பதால் ஏறுவது சற்று சிரமமாகத் தான் இருக்கிறது. கிரிமலை என்றழைக்கப்படும் ஏழாவது மலையில் தான் வெள்ளியங்கிரி நாயகனான எம்பெருமான் சுயம்பு வடிவில்வீற்றிரிக்கிறார். இந்த இடத்தை அடைவது அவ்வளவு எளிதல்ல. அவனருள் இருந்தால் மட்டுமே அவனை தரிசிக்க முடியும். மிக மிக செங்குத்தான வடிவில், ஏறுவதற்கு மிகவும் கடினமாக இருக்கும் பாதையை கடந்து வந்தால் தான் ஈசனின் அருளைப் பெறலாம்.
வெள்ளயங்கிரி மலைக்கு செல்ல எப்போது அனுமதி:
வன அதிகாரிகள் வெள்ளியங்கிரி மலைப் பயணத்திற்கு பிப்ரவரி முதல் மே வரை செல்ல அனுமதி தருகிறார்கள். ஆண்டு தோறும் செல்ல அனுமதி இல்லை. குளிர்காலத்தில் வெப்பநிலை கிட்டத்தட்ட 0 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து கோடையில் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமடைகிறது. இருந்தபோதிலும், வெள்ளியங்கிரியின் தட்பவெப்பநிலை நமக்கு ஒரு இனிமையான மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்குப் போதுமான ஆனந்தமாக இருக்கிறது.
மலை ஏறுவதற்கு முன்:
செய்வதற்கு முன் தண்ணீர் பாட்டில்கள், போர்வை, தைலம், சிறிது உணவு, ஜூஸ் மற்றும் குளுகோஸ் ஆகியவற்றை உங்களது பேக்பேக்கில் எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். மலை ஏறும்போதும் இறங்கும் போதும் நமக்கு உயிர்த்துணையாக விளங்குவது அடிவாரத்தில் விற்கும் மூங்கில் தடிகள் தான்.
வெள்ளியங்கிரி மலை ஏறுவது என்பது சாதாரணமான காரியம் அல்ல.
இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதயம் பலவீனமானவர்கள், குறைந்த, அதிக ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் மற்றும் 40 வயதுக்கும் மேலானவர்கள் ஆகியோர் மலை ஏறுவது உயிருக்கு மிக ஆபத்தானதாகும். 10 வயதிற்கு மேலும் 40 வயதிற்கு கீழும் உள்ள பெண்கள் மலை ஏறக்கூடாது.
சித்தர்களும் யோகிகளும் ரிஷிகளும் முனிவர்களும் பல காலம் தங்கியிருந்து தவம்புரிந்து தெய்வீகத்தை உணர்ந்த தலம், இந்த வெள்ளியங்கிரி. அவர்கள் தெய்வீகத்தை உணர்ந்ததோடு நில்லாமல், அதனை உணர்த்தும் விதமான அதிர்வுகளையும் நிரப்பியிருக்கிற மலை இந்த வெள்ளியங்கிரி.
