Saturday, October 28, 2023
HomePurana Kathaigalஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம்-11

ஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம்-11

லஷ்மி தேவி ஏன் ஆகாசராஜனுக்கு மகளாகக் கிடைக்க வேண்டும் என்பதின் காரணம் லஷ்மி தேவி கோபத்தினால் விஷ்ணுவை பிரிந்து சென்று விட்ட கதை மற்றும் ஸ்ரீனிவாசர் பிறந்தக் கதையுடன் ஒன்று சேர்ந்தது. ஆகாசராஜன் முன் பிறவியில் வராக ஷேத்திரம் எனும் நாட்டை ஆண்டு வந்த ஒரு சோழ மன்னனாக இருந்தவர். அந்த சோழ மன்னன் விஷ்ணுவின் சாபத்தினால் சில காலத்துக்கு ஒரு பிசாசாக இருந்தப் பின்னர் மீண்டும் மனித உருவில் ஆகாசராஜனாகப் பிறந்தவர். இனி லஷ்மி தேவி விஷ்ணுவை பிரிந்து சென்றக் கதையையும் அதன் பின் அவள் ஆகாசராஜனின் மகளாக பிறந்தக் கதையையும் படிக்கலாம்.

லஷ்மி தேவி விஷ்ணுவை பிரிந்தாள்

முன்னர் கூறியபடி முனிவர்கள் செய்த யாகத்தில் அதித்தியாக மும்மூர்த்திகளில் யாரையாவது அழைக்கலாம் என எண்ணி பிருகு முனிவர் சென்றபோது நடந்தக் கதையைப் பார்த்து விட்டோம். அதில் விஷ்ணுவை லஷ்மி தேவிக்கு முன்னால் பிருகு முனிவர் அவமானப்படுத்தி விட்டுச் சென்று இருந்தார். அதனால் லஷ்மி தேவி கோபம் அடைந்தாள். தனது கோபத்தை கணவரிடம் காட்டிய பின் அவரை விட்டு விலகிச் சென்று விட்டாள். இப்படி பல முறை அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்திருந்ததினால் லஷ்மி தேவி கிளம்பிச் சென்றதை விஷ்ணு பெரியதாகப் பொருட்படுத்தவில்லை ஆகவே அவள் எங்கு சென்று விட்டாள் என்பதோ, உண்மையிலேயே தன்னை விட்டு சென்று விட்டாளா என்பதும் விஷ்ணுவிற்கு தெரியவில்லை. அவருடைய எண்ணமெல்லாம் தான் யாகத்துக்கு செல்ல வேண்டும், அதன் பின் பூமியில் ஸ்ரீனிவாசராக இன்னொரு அவதாரம் எடுத்து உலகைக் காக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவை அனைத்துமே கலியுகம் பிறக்கும் முன் செய்யப்பட வேண்டியவை என்பதை சுற்றியே இருந்தது. அதன் பின் விஷ்ணு பகவான் தான் வாக்கு கொடுத்தது போல பூமிக்குச் சென்று முனிவர்களின் யாகத்தை நிறைவு செய்து தந்தப் பின், விரைவில் மீண்டும் தான் பூமியில் அவதரித்து உலகைக் காப்பேன் என ரிஷி முனிவர்களுக்கு உறுதி கூறி விட்டு வைகுண்டம் சென்று விட்டார்.

வைகுண்டத்துக்குத் திரும்பியதும் அவர் லஷ்மியைக் காண அவள் அறைக்குச் சென்றபோதுதான் அவள் அங்கு இல்லை என்பது தெரிந்தது. சரி வெளியில் எங்காவது சென்று இருப்பாள் என நினைத்துக் காத்திருந்தார். ஆனால் லஷ்மி வரவே இல்லை. சில நாட்கள் ஆகியும் லஷ்மி தேவியைக் காணவில்லை. அவள் எங்கு சென்று இருப்பாள் என்று தேடத் துவங்கியபோதுதான் அவருக்கு ஒரு உண்மை நிதர்சனமாகத் தெரிந்தது. அவள் தன்னை விட்டு உண்மையிலேயே விலகிச் சென்று விட்டாள் .

லஷ்மி எங்கு சென்று இருப்பாள் என்று தெரியாமல் விஷ்ணு மனம் குழம்பினார் ஒரு சிறிய விளக்கத்தை இங்கு தர வேண்டி உள்ளது. கடவுள் என்றால் அனைத்தும் தெரிந்து இருக்கும் என்கிறார்கள். அப்படியானால், லஷ்மி செய்வது விஷ்ணுவிற்கு தெரியாதா? அவள் எங்கு சென்றாள் என்பதும் அவருக்கு புரியாமல் இருக்குமா? அப்படி தெரியாது என்றால் கடவுள் சக்தி படைத்தவர் என்பதே ஒப்புக் கொள்ள முடியாமல் போய் விடும் அல்லவா? அது கேலிக் கூத்தாக உள்ளதே என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அது சரியான எண்ணம் அல்ல.

பூமியில் மனிதர்கள் உள்ளது போன்ற நிலைதான் தெய்வீக லோக
த்தில் உள்ள தெய்வங்களின் நிலையும் . ஒரு தெய்வம் செய்வதை இன்னொரு தெய்வத்தினால் அறிந்து கொள்ள முடியாது என்பதுதான் தத்துவார்த்தமான உண்மை என்பதின் காரணம் அவர்கள் ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

பராசக்தி படைத்த பிரபஞ்சத்தில் அனைத்து தெய்வங்களுமே பராசக்தி நடத்தும் பொம்மலாட்ட பொம்மைகளைப் போலவே உள்ளார்கள். இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டபோதே இன்னென்ன நாடகங்கள் நடைபெறும் என்பது காலக் கோளினால் வரையுறக்கப்பட்டு விட்டது. ஆகவே அதன்படித்தான் அனைத்தும் நடைபெறும். மனிதர்கள் செய்வது அனைத்தையும் தெய்வத்தினால் அறிந்து கொள்ள முடியும் என்றாலும் காலக் கோளினால் வரையுறக்கப்பட்டு விட்ட நாடகத்தில் எப்போது தெய்வங்கள் மனிதப் பிறவிகளோடு இணைந்து செயல்படத் துவங்குகிறார்களோ அப்போது முதலே அந்த நாடகத்தின் தெய்வங்களினால் அந்த நாடகத்தின் அனைத்து காட்சிகளையும் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியாது என்பது பரப்பிரும்மனின் தேவ தத்துவம். ஆகவே ரிஷி மூலம் மற்றும் நதி மூலம் போன்றவற்றை ஆராயலாகாது என்று கூறுவார்களே அதைப் போல நடக்கும் தெய்வ நாடகத்தை அதிகம் ஆராயாமல் நாம் அவர்களுடைய மனித அவதார வாழ்க்கையை படிக்க வேண்டும்.

…………தொடரும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + 10 =

Most Popular