Thursday, November 2, 2023
HomePurana Kathaigalஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம்- 18

ஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம்- 18

இனியும் தன் அவதாரத்தை அவள் நினைவில் இருந்து மறைத்து வைத்திருக்கலாகாது, அதை வெளிப்படுத்தும் தருணம் வந்து விட்டாலும் அதே சமயத்தில் இன்னும் சில நாட்கள் அது அவர்கள் இடையே ரகஸ்யமாகவே வைத்திருக்கப்பட வேண்டும் என்பதையும் உணர்ந்தார். தன் தாயாரை ஒரு கணம் உற்றுப் பார்த்தார். அவர் பார்த்தப் பார்வையில் அவளுக்கு பழைய நினைவுகள் மீண்டும் தோன்றின. அவர் கூறத் துவங்கினார் ‘ அம்மா, நான் இந்தப் பிறவியில் ஸ்ரீனிவாசனாக மனித உருவில் அவதரித்து உள்ளதினால், அந்த உடலுக்கான சோதனைகளையும், வேதனைகளையும் அனுபவித்தே ஆக வேண்டும். இதுவே நியதி. நான் விஷ்ணுவாக இருந்தால் என்ன? இப்போது அந்த உடலில் நான் இல்லை என்பதினால் இந்த மனித உடலுக்கான சில கடமைகளை செய்யவே வந்துள்ளேன். உனக்கு முன் ஜென்மத்தில் கொடுத்த வாக்கின்படி உன்னையும் இந்தப் பிறவியில் என்னோடு என் தாயாராக இணைத்துக் கொண்டு விட்டேன். நான் கிருஷ்ணராக இருந்தபோது நடந்தக் கதை மட்டும்தானே உனக்கு இதுவரை தெரியும். இப்போது நான் ராமனாக அவதரித்து இருந்தபோது நடந்த சிறிய சம்பவத்தைக் கூறுகிறேன். அதையும் இப்போது கேள்.

நான் ராமனாக இருந்தபோது சீதையை மணம் செய்து கொண்டு சந்தப்பவசத்தினால் வனவாசம் சென்றேன். அப்போது ராவணன் சூழ்ச்சி செய்து என் மனைவியான சீதையைக் கவர்ந்து செல்ல ஏற்பாடு செய்தபோது அந்த நிலையில் இருந்து சீதையைக் காப்பாற்ற அக்னி பகவான் ஒரு மாய சீதையை உருவாக்கி ராவணனை ஏமாற்றி அவளைக் கடத்தச் செய்தார். அந்த ராவணனுடன் யுத்தம் செய்து சீதையை நான் மீட்டுக் கொண்டு வந்தப் பின் அவளை அக்னி பிரவேசத்துக்கு உட்படுத்தி கற்பை சோதித்தபோது, தீயில் இருந்து சீதையும், மாய சீதையாக இருந்த வேதவதி எனும் பெண்ணும் வெளி வந்தார்கள். வேதவதி வேறு யாருமல்ல. அவளும் லஷ்மியின் ஒரு அம்சம்தான். அக்னியில் வெளி வந்த வேதவதி ராமர் உருவில் இருந்த விஷ்ணுவான என்னை மணக்க விரும்பினாள். ஆனால் அந்த ராமாவதாரத்தில் நான் ஏகபத்தினி விரதம் பூண்டு இருந்ததினால் அவளை அடைய முடியாமல் போயிற்று. ஆகவே உனக்கு கிருஷ்ணாவதாரத்தில் ஒரு வாக்கு தந்தது போல வேதவதிக்கு ராமாவதாரத்தில் ஒரு வாக்கு தந்தேன். அதன்படி நான் ஸ்ரீனிவாசராக அவதரிக்கும்போது அவளையும் மானிடப் பிறவியில் அவதரிக்க வைத்து அவளை மணப்பதாக வாக்கு தந்தேன்.

அதன்படி அவளே பத்மாவதியாக அவதரித்து இருக்கிறாள். ஆகவே நான் அவளை எப்படியாவது மணந்து கொண்டே ஆக வேண்டும். ஆனால் சில காரணங்களுக்காக நான் யார் என்பதையோ, அவள் யார் என்பதையோ இப்போது வெளியில் கூறக் கூடாது. நாங்கள் அவதரித்து உள்ள இந்த மனித உடல் சில வேதனைகளை அனுபவித்தால்தான் நாங்கள் முன்னர் பெற்றிருந்த சாபம் இந்த உடல்களோடு அழியும். இல்லை என்றால் அது மீண்டும் அடுத்த அவதாரத்திலும் எங்களை தொடர்ந்து கொண்டு இருக்கும். ஆகவே நீதான் இந்த விஷயத்தை இரகசியமாகவே வைத்திருந்து, நான் இந்த மனித உடலில் செய்யும் அனைத்துக் காரியங்களுக்கும் உதவி செய்ய வேண்டும். இந்த உண்மைகள் எப்போது வெளிப்பட வேண்டுமோ அப்போது நானே இந்த உலகுக்கு வெளிப்படுத்துவேன். அதை மீறி நீ யாரிடமாவது இதைக் கூறி விட்டால், எங்கள் திருமணம் நடைபெறாது என்பது மட்டும் அல்ல, எங்கள் அவதாரமும் இந்த யுகத்தில் முடிந்து விடும். மீண்டும் பல யுகங்கள் நாங்கள் மீண்டும் மணந்து கொள்வதற்குக் காத்திருக்க வேண்டும்’ என்றார்.

அதைக் கேட்ட வகுளா தேவியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. ‘மகனே, உனக்கு என்னால் இந்த அவதாரத்தில் எந்த கஷ்டமும் நேராது. என்னால் இந்த தேவ ரகசியம் யாருக்கும் வெளிப்படாது. மாறாக உனக்கு எத்தனை உதவிகள் செய்து இந்த திருமணம் நடைபெற வேண்டுமோ அதற்கான வழி முறைகளை செய்வேன் என உன் மீதே சத்தியம் இட்டுக் கூறுகிறேன்’ என்று கூறிவிட்டு உறங்கச் சென்றாள். அன்று இரவு முழுவதும் ஸ்ரீனிவாசருக்கு உடல் உபாதையும், மன உபாதையும் குறையவே இல்லை. மனித உருவில் இருந்ததினால் தன்னை மறந்து ‘ராஜகுமாரி, ராஜகுமாரி’ என்று முனகியவாறே படுத்திருந்தார். மறுநாள் முதல் அவரால் வேட்டைக்கும் போக முடியாமல் சோகம் அவரை சூழ்ந்திருந்தது.

இது இங்கே இப்படி இருந்தது என்றால், அங்கு அரண்மனையிலோ, ஸ்ரீனிவாசரை துரத்தி அடித்த பத்மாவதியும் உறக்கம் இல்லாமல் தவித்தாள். அவளை மீறி வேடரான ஸ்ரீனிவாசரின் முகம் அவள் முன் தோன்றித் தோன்றி அவளை வாட்டியது. அவரை சேவகர்கள் அடித்து உதைத்து துரத்திய சம்பவம் மனதை குடைந்தது. தன்னால்தானே அவருக்கு அத்தனை ரத்த காயமும் நேரிட்டது என்று மனம் வேதனைப்பட்டது. அவள் மனதில் நீங்காத வருத்தம் சூழ்ந்தது. தினமும் அந்த தாடகத்தின் அருகில் சென்று அவர் அமர்ந்திருந்த இடத்தில் சென்று நின்று கொண்டு மெளனமாக கண்ணீர் விட்டு அழுது விட்டு திரும்புவாள். ஆனால் அவள் மன நிலை அவளது தோழிகளுக்கும் அவளது பெற்றோர்களுக்கும் தெரியவில்லை. ஆனால் நாளாக நாளாக அவள் சரிவர சாப்பிடவில்லை, சரிவர உறங்கவில்லை. கேளிக்கைகளிலும், உல்லாசங்களிலும் ஆர்வமும் காட்டவில்லை. எதையோ பறி கொடுத்து விட்டவளைப் போல தனிமையில் அமர்ந்திருந்தபடி யோசனையில் ஆழ்ந்து இருந்தாள் .

……தொடரும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − four =

Most Popular