ஸ்ரீ ரங்கநாதர் அஷ்டகம்!

118

ஸ்ரீரங்கநாதரின் அருளை பெற சொல்ல வேண்டிய ஸ்ரீ ரங்கநாதர் அஷ்டகம்!

ஆநந்தரூபே நிஜபோதரூபே
பிரஹ்ம ஸ்வரூபே ஸ்ருதிமூர்த்திரூபே
ஸஸாங்கரூபே ரமணீயரூபே
ஸ்ரீரங்கரூபே ரமதாம் மநோ மே | 1
பொருள்:
ஆனந்த மந்திரங்களின் வடிவினரும், சத்திய ஞானசொரூபரும், பரபிரம்மமாக உள்ளவரும், ச்ருதிகளின் (வேதங்களின் வடிவானவரும் கையில் சங்கேந்தியிருப்பவரும், அழகிய உருவமுடையவரும், ஸ்ரீரங்கத்தில் அருளாட்சி செய்பவருமான அந்த ரங்கநாதரிடம் என் மனம் லயிக்கின்றது.

காவேரிதீரே கருணாவிலோலே
மந்தாரமூலே த்ருதசாருகேலே
தைத்யாந்தகாலே அகிலலோகலீலே
ஸ்ரீரங்கலீலே ரமதாம் மநோ மே | 2
பொருள்:
காவேரி தீரத்தில் அதீதமான கருணையுடன் அருள்புரிபவரும், மந்தார மரத்தின் மேல் அமர்ந்தபடி புரியும் தனது அழகான லீலைகளால் மனத்தைக் கவர்பவரும் அசுரர்களின் அந்திம காலத்தை முடிவுக்கு கொண்டு வந்து அகில உலகையும் விளையாட்டாகவே காப்பவருமாகிய ஸ்ரீரங்கனுடைய லீலைகளின்பால் என் மனம் ஈடுபடுகின்றது

லஷ்மீநிவாஸே ஜகதாம்நிவாஸே
ஹ்ருத்பத்மவாஸே ரவிபிம்ப வாஸே
க்ருபாநிவாஸே குணவ்ருந்தவாஸே
ஸ்ரீரங்கவஸே ரமதாம் மநோ மே | 3
பொருள்:
லட்சுமி தேவியின் இருப்பிடமாக உள்ளவரும் (திருமாலின் மார்பை விட்டு என்றும் நீங்காதிருப்பவள் மகாலட்சுமி) அகில உலகிற்கும் ஆதாரமானவரும் பக்தர்களின் தாமரை போன்ற இதயத்தில் வசிப்பவரும், சூரிய மண்டலத்தில் ஒளிர்பவரும், கருணையின் இருப்பிடமாய் இருப்பவரும், காருண்யத்துக்கு ஆதாரமானவரும், ஸ்ரீரங்கத்திலே வசிப்பவருமான அந்த ரங்கநாதரின் பால் என் மனம் வசப்படுகிறது.

ப்ரமாதிவந்த்யே ஜகதேகவந்த்யே
முகுந்தவந்த்யே ஸுரநாதவந்த்யே
வ்யாஸாதிவந்த்யே ஸநகாதிவந்த்யே
ஸ்ரீரங்கவந்த்யே ரமதாம் மநோ மே | 4
பொருள்:
பிரம்மா முதலிய தேவர்களால் வணங்கப்படுபவரும், உலக உயிர்கள் அனைத்தினாலும் வழிபடத் தகுந்தவரும், முகுந்தனால் துதிக்கப்படுபவரும், தேவேந்திரனால் நமஸ்கரிக்கப்படுபவரும், வியாசர் மற்றும் சனகாதி முனிவர்களால் போற்றப்படுபவரும் ஸ்ரீரங்கத்தில் வசிப்பவருமான ரங்கநாதரை தரிசிக்க என் மனம் விழைகின்றது.

ப்ரஹ்மாதிராஜே கருடாதிராஜே
வைகுண்ட ராஜே ஸுரராஜ ராஜே
த்ரைலோக்ய ராஜே அகிலலோக ராஜே
ஸ்ரீரங்கராஜே ரமதாம் மநோ மே | 5
பொருள்:
பிரம்மாவுக்கு அதிபதியும் கருடனுக்கு எஜமானரும், வைகுண்டத்தின் அரசரும், தேவராஜனுக்கு ராஜாவும், மூன்று உலகங்களுக்கும் அரசனும், ஒட்டுமொத்த பிரபஞ்சத்துக்கும் அதிபதியும் ஸ்ரீரங்கத்தில் வசிப்பவருமாகிய ரங்கநாதனிடம் என் மனம் நாட்டமுடையதாகிறது.

அமோகமுத்ரே பரிபூர்ணநித்ரே
ஸ்ரீயோகநித்ரே ஸஸமுத்ரநித்ரே
ஸ்ரிதைகபத்ரே ஜகதேகநித்ரே
ஸ்ரீரங்கபத்ரே ரமதாம் மநோ மே | 6
பொருள்:
உயர்வான அபய முத்திரையை உடையவரும், முழுமையான நித்திரையையுடையவரும், யோக நித்திரையில் ஆழ்ந்தவரும் பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவரும், அடைக்கலமடைந்தவர்களின் தேடுதலுக்குச் செவிசாய்த்து அருள்பவரும், பிரபஞ்சத்தில் நிலையாக இருக்கும் ஒரே ஒருவருமான ஸ்ரீரங்கவாசரின் பால் என் மனம் எப்போதும் ஈர்க்கப்படுகிறது.

ஸசித்ரஸாயீ புஜகேந்த்ரஸாயீ
நந்தாங்கஸாயீ கமலாங்கசாயீ
க்ஷீராப்திஸாயீ வடபட்ரஸாயீ
ஸ்ரீரங்கஸாயீ ரமதாம் மநோ மே | 7
பொருள்:
ஆச்சரியப்படும் வடிவினில் படுத்திருப்பவரும், ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருப்பவரும், நந்தன் மடியில் படுத்திருப்பவரும், பிராட்டியாரின் மடியில் தலை வைத்துப் படுத்திருப்பவரும், ஸ்ரீரங்கத்தில் சயனித்திருப்பவரும் ஆகிய ரங்கநாதரின் மேல் என் மனம் எப்போதும் ஒன்றியுள்ளது.

இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம்
புநர்நசாங்கம் யதி சாங்கமேதி
பாணௌ ரதாங்கம் சரணாம்பு காங்கம்
யாநே விஹங்கம்ஸயநே புஜங்கம் |8

பொருள்:
இது வல்லவா ஸ்ரீரங்கம்! இத் தலத்தில் மரணிப்பவர்கள் மறு பிறப்பால் அவதிப்படுவதில்லை. அப்படி மறு சரீரம் பெற்றால் (மறு பிறவியில் பிறந்தால்) கையில் சக்கரம், காலில் கங்கா ஜலம், பயணிக்கும்போது கருடன், சயனத்தில் சர்ப்பம் என்று சாட்சாத் மகாவிஷ்ணுவின் சாருப்யத்தையே அடைவர்.

ரங்கநாதாஷ்டகம் புண்யம் ப்ராதருத்தாய ய: படேத்
ஸர்வாந் காமாநவாப்நோதி ரங்கிஸாயுஜ்யமாப்நுயாத் | 9
பொருள்:
எவரொருவர் இந்த ரங்கநாத அஷ்டகத்தை தினமும் காலையில் படிக்கிறாரோ அவரது நியாயமான எல்லா ஆசைகளும் நிறைவேறுவதோடு, ரங்கநாதரின் சாயுஜ்யத்தையும் அவர் பெறுவார் என்பது நிச்சயம்!