தடைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்குவாள். எதிர்ப்புகளை தலைதெறிக்க ஓடச் செய்வாள் வராஹிதேவி.
வராகி மாலை –
வம் வராஹ்யை நமஹ
இந்த வராகி மாலையில் இருக்கும் 32 பாடல்களை தினமும் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு ஒரு முறையும், இரவு ஒருமுறையும் மனதிற்குள் பாடினாலே அன்னை வராகி (அரசாலை)யின் அருள் நமக்கு பூரணமாக கிட்டிவிடும்;
அசைவம், மது இவைகளை நிரந்தரமாக கைவிட்டப் பின்னரே இந்த பாடல் பாடத் துவங்க வேண்டும்;
முதலில் ஓம் (உங்கள் குலதெய்வம்) நமஹ என்று ஒருமுறையும்
பிறகு ஓம் கணபதி நமஹ என்று ஒருமுறையும்
பிறகு ஓம் (உங்கள் இஷ்ட தெய்வம்) நமஹ என்று ஒருமுறையும் நினைத்து ஜபித்தப் பிறகு பாடத் துவங்க வேண்டும்;
1.வசீகரணம் (தியானம்)
இருகுழை கோமளம் தாள் புட்பராகம் இரண்டு கண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்த வல்லி
மரகதம் நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே
2.காட்சி (யந்த்ர ஆவாகனம்)
தோராத வட்டம் முக்கோணம் சட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டிதுநடுவே
ஆராதனைசெய்து அருச்சித்துப் பூசித்தடி பணிந்தால்
வாராதிராள் அல்லளே வாலை ஞான வராகியுமே
3.பகைத் தடுப்பு (பிரதாபம்)
மெய்சிறந்தாற்பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைச்சிரத் தேந்திப்புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்க்கடித்துப்
பச்சிரத்தம் குடிப்பாளே வராகி பகைஞரையே
4.மயக்கு (தண்டினி தியானம்)
படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத்தடி கொண்டு பேய்கள் அவர் குருதி
குடிக்கும் குடர் கொண்டு தோள் மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வராகி பதினா லுலகம் நடுங்கிடவே
5.வெற்றி ஈர்ப்பு (சத்ரு சங்காரம்)
நடுங்காவகை அன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும் காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்டு
ஆடும் பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகமிடும்
தொடுமங்கார் மனோண்மணி வராகி நீலி தொழில் இதுவே
6.உச்சாடனம் (ரோக அரம்)
வேய்க்குலம் அன்னதிண் தோளாள் வராகிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கெளவக் கொடுப்பாள் வராகி என் நாரணியே
7.எதிர்ப்புக்கட்டு (சத்ரு அரம்)
நாசப்படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்
வீசப்படுவர் வினையும் படுவர் இம் மேதினியோர்
ஏசப்படுவர் இழுக்கும் படுவர்என் ஏழைநெஞ்சே
வாசப்புதுமலர்த் தேனாள் வராகியை வாழ்த்திலரே
8.பெருவஸ்யம் (திரிகால ஞானம்)
வாலை புவனை திரிபுரை மூன்றும்இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆக எக் காலத்துமே
ஆலயம் எய்தி வராகி தன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே
9.பகை முடிப்பு (வித்வேசனம்)
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க் காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வராகி என் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே
10.வாக்கு வெற்றி (சத்ரு மாரணம்)
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னையே புகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்டதோ? பட்டதோ நிந்தை யாளர் தெரு எங்குமே
11.தேவி வருகை (பூத பந்தனம்)
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம் பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழித்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப்போக விட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வராகி சிவசக்தியே
12.ஆத்ம பூஜை (மகாமாரி பசனம்)
சக்தி கவுரி மகமாயி ஆயி என் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவி நின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வராகி என் நெஞ்சகத்தே
13.தேவி தாபனம் (பில்லி மாரணம்)
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்ற நிர்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வராகி குலதெய்வமே
14.மந்திரபூஜை (முனி மாரணம்)
மது மாமிசம் தனைத் தின்பாள் இவள் என்று மாமறை யோர்
அதுவே உதாசீனம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர்வாளில் வெட்டி எறிவாள் வராகிஎன் மெய்த்தெய்வமே
15.வராகி அமர்தல் (மூர்த்தி தியானம்)
ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வராகி மலர்க்கொடியே
16.வரம் பொழிதல் (எதிரி மாரணம்)
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம் தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றிகுறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!
