பசுக்கள் சிவபூஜை செய்த சிவதலங்கள்!
கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில், திருவாவடுதுறை கோமுக்தீஸ்வவரர் (மாசிலா மணீசர்) கோயில், கோயம்புத்தூரில் உள்ள பேரூர் பட்டீஸ்வரம் பட்டீஸ்வரர் கோயில், சென்னை தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில், கரூர் ஆனிலை பசுபதீசுவரர் கோயில், ஆந்திரத்தில் உள்ள
ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜுனர் கோயில், திருவாசகம் போற்றும் கோகழி (அழிந்து போன தலம்), விழுப்புரம் அருகே திரு ஆமாத்தூர் அழகிய நாதர் கோயில் மற்றும் பல ஈஸ்வரன் கோயில்கள் பசு மாடு சிவ பூசை செய்த கோயில்களாகும்.
பராசக்தி பசு மாடாகி சிவ பூஜைசெய்து ஈசனருளால் மீண்டும் பெண் ஆன தலங்கள் திருவாவடுதுறை, கோகழி. தேவ லோகப் பசுவான காமதேனு சிவலிங்கத்தின் மேல் பால் சொரிந்து பூஜித்த கோயில் தேனுபுரீஸ்வரர் கோயில். காமதேனுவின் மகள் (கன்று) பட்டி பூஜித்தது பேரூர்பட்டீஸ்வரம் பட்டீஸ்வரர் கோயில். காமதேனு பட்டி இருவரும் சேர்ந்து வந்து பூஜித்தது பட்டீஸ்வரம் தேனுபுரீசுவரர் கோயில். பட்டியின் பெயரால் தலமும் காமதேனுவின் பெயரால் ஈசன் நாமமும் அமைந்தன. பூஜை செய்த காமதேனுப் பசுவின் பெயரால் கரூர் பசுபதீஸ்வரர் கோயில் ஆனிலை என்றே பெயர் பெற்றது. பல பசுக்கள் கூடி வந்துவழிபட்ட தலம் திரு ஆமாத்தூர்.
பொழுது விடியும் முன் விடியற்காலையிலேயே பசு எழுந்து சிவ லிங்கத்தின் மேல் பால் சொரிந்து வழிபட்ட அருமையை, சிவ வழிபாட்டின் சிறப்பை, வாயற்ற உயிர்களுக்கும் அருளும் பசுபதீஸ்வரரது கருணையை “இரவி நீள் சுடர் எழுவதன் முன்னம் எழுந்து தன் முலைக் கலசங்கள் ஏந்திச் சுரபி பால் சொரிந்து ஆட்டி நின் பாதம் தொடர்ந்த வார்த்தை”என்று சுந்தரர் போற்றுகிறார். கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள பெரும்பாலான கோயில்களில் கோபுர வாசலுக்கு வெளியே கொடிக் கம்பம் போல் உள்ள ஒரு தூணில் பசு மாடு சிவ பூஜை செய்யும் சிற்பத்தைக் காணலாம்.
காளையார் கோயில் பதிகத்தில் பெண் யானைகள் (பிடி) முன் செல்ல ஆண் யானைகள் (களிறு) வந்து விடியற்காலையிலேயே லிங்கப் பரம்பொருளை வழிபடும் காட்சியை தெய்வ மழலைக் காட்டுகிறார். வாயற்ற உயிர்களும் பக்தியுடன் சிரத்தையுடன் சிவ பூஜை செய்யும் புண்ணியப் பிறவிகளாய் உள்ளன.
