தினந்தோறும் சொல்ல வேண்டிய வராகி மாலை!

170

தினந்தோறும் சொல்ல வேண்டிய வராகி மாலை!

பஞ்சமி நாளில், வராஹியை நினைத்துக் கொண்டு, காலையிலும் மாலையிலும் வீட்டில் விளக்கேற்றுங்கள். ஒரு பத்துநிமிடமேனும் அவளின் திருநாமங்களைச் சொல்லி, உங்கள் கோரிக்கைகளையெல்லாம் சொல்லி முறையிடுங்கள். கஷ்டங்கள் அனைத்தையும் சொல்லி மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

இதுவரை உள்ள தடைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்குவாள். எதிர்ப்புகளை தலைதெறிக்க ஓடச் செய்வாள் வராஹிதேவி.

வராகி மாலை:

வம் வராஹ்யை நமஹ

இந்த வராகி மாலையில் இருக்கும் 32 பாடல்களை தினந்தோறும் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு ஒருமுறையும், இரவு ஒருமுறையும் மனதிற்குள் பாடினாலே அன்னை வராகி (அரசாலை)யின் அருள் நமக்கு பூரணமாக கிட்டிவிடும்;

அசைவம், மது இவைகளை நிரந்தரமாக கைவிட்டப்பின்னரே இந்த பாடல் பாடத் துவங்க வேண்டும்; முதலில் ஒம் (உங்கள் குலதெய்வம்) நமஹ என்று ஒருமுறையும் பிறகு ஒம் கணபதி நமஹ என்று ஒருமுறையும்
பிறகு ஒம் (உங்கள் இஷ்ட தெய்வம்) நமஹ என்று ஒருமுறையும் சொல்ல வேண்டும். பிறகு பாடத் வேண்டும்;

1.வசீகரணம் (தியானம்)

இருகுழை கோமளம் தாள் புட்பராகம் இரண்டு கண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்த வல்லி
மரகதம் நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே

2.காட்சி (யந்த்ர ஆவாகனம்)

தோராத வட்டம் முக்கோணம் சட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டிதுநடுவே
ஆராதனைசெய்து அருச்சித்துப் பூசித்தடி பணிந்தால்
வாராதிராள் அல்லளே வாலை ஞான வராகியுமே

3.பகைத் தடுப்பு (பிரதாபம்)

மெய்சிறந்தாற்பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைச்சிரத் தேந்திப்புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்க்கடித்துப்
பச்சிரத்தம் குடிப்பாளே வராகி பகைஞரையே

4.மயக்கு (தண்டினி தியானம்)

படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத்தடி கொண்டு பேய்கள் அவர் குருதி
குடிக்கும் குடர் கொண்டு தோள் மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வராகி பதினா லுலகம் நடுங்கிடவே

5.வெற்றி ஈர்ப்பு (சத்ரு சங்காரம்)

நடுங்காவகை அன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும் காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்டு
ஆடும் பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகமிடும்
தொடுமங்கார் மனோண்மணி வராகி நீலி தொழில் இதுவே

6.உச்சாடனம் (ரோக அரம்)

வேய்க்குலம் அன்னதிண் தோளாள் வராகிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கெளவக் கொடுப்பாள் வராகி என் நாரணியே

7.எதிர்ப்புக்கட்டு (சத்ரு அரம்)

நாசப்படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்
வீசப்படுவர் வினையும் படுவர் இம் மேதினியோர்
ஏசப்படுவர் இழுக்கும் படுவர்என் ஏழைநெஞ்சே
வாசப்புதுமலர்த் தேனாள் வராகியை வாழ்த்திலரே

8.பெருவஸ்யம் (திரிகால ஞானம்)

வாலை புவனை திரிபுரை மூன்றும்இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆக எக் காலத்துமே
ஆலயம் எய்தி வராகி தன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே

9.பகை முடிப்பு (வித்வேசனம்)

வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க் காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வராகி என் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே

10.வாக்கு வெற்றி (சத்ரு மாரணம்)

பாப்பட்ட செந்தமிழ்ப் பாவணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னையே புகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்டதோ? பட்டதோ நிந்தை யாளர் தெரு எங்குமே

11.தேவி வருகை (பூத பந்தனம்)

எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம் பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழித்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப்போக விட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வராகி சிவசக்தியே

12.ஆத்ம பூஜை (மகாமாரி பசனம்)

சக்தி கவுரி மகமாயி ஆயி என் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவி நின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வராகி என் நெஞ்சகத்தே

13.தேவி தாபனம் (பில்லி மாரணம்)

நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்ற நிர்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வராகி குலதெய்வமே
🌼
14.மந்திரபூஜை (முனி மாரணம்)

மது மாமிசம் தனைத் தின்பாள் இவள் என்று மாமறை யோர்
அதுவே உதாசீனம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர்வாளில் வெட்டி எறிவாள் வராகிஎன் மெய்த்தெய்வமே

15.வராகி அமர்தல் (மூர்த்தி தியானம்)

ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வராகி மலர்க்கொடியே

16.வரம் பொழிதல் (எதிரி மாரணம்)

தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம் தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றிகுறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!

17. வாழ்த்துதல் (உலக மாரணம்)

வருந்துணை என்று வாராஹிஎன்றன்னையை வாழ்த்திநிதம்
பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால்உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே.

18. நன்னீர் வழங்கல் (ஏவல் பந்தனம்)

வேறாக்கும் நெஞ்சும் வினையும்வெவ்வேறு வெகுண்டுடலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே.

19. புனித நீர் அருந்துதல் (துஷ்ட பந்தனம்)

பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
ஓடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள்எங்கள் அம்பிகையே.

20. மலர் வழிபாடு (கர்ம வாஸன நாசனம்)

தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம்அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே.

21. தேவி சன்னிதானம் (கர்ம மூலபந்தனம்)

ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக் கிரைஇடுவாள்கொன்றை வேணிஅரன்
சீரார் மகுடத் தடிஇணை சேர்க்கும் திரிபுரையாள்
வாராஹி வந்து குடிஇருந்தாள்என்னை வாழ்விக்கவே.

22. தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்)

தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள்சுக்காக உலர்த்துவளே

23. புகழ்சொற்பாமாலை (மௌனானந்த யோகம்)

ஊரா கிலும்உடன் நாடா கிலும்அவர்க் குற்றவரோடு
யாரா கிலும்நமக் காற்றுவரோ? அடல்ஆழி உண்டு
காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉண்டே.

24. படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்)

உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே.

25. பதமலர் வாழ்த்து (பிரதிபந்த நாசன யோகம்)

தஞ்சம் உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே.

26. படைநேமி வாழ்த்து (சிந்தனானந்த யோகம்)

அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர்
நிலைபெற்ற நேமிப் படையாள் தனைநினை யாதவரே.

27. அடியார் வாழ்த்து (அர்ச்சனானந்த யோகம்)

சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம்துதித்தே
அந்தி பகல்உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹிநற் பொற்கொடியே.

28. திருப்படை வந்தனம் (அம்ருதானந்த யோகம்)

பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை
நெருப்புக் குவால்எனக் கொல்வாய் வாராஹிஎன் நிர்க்குணியே.

29. பதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்)

தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்
மாறிட் டவர்தமை வாள்ஆயுதம் கொண்டு வாட்டிஇரு
கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே.

30. சித்தி வந்தனம் (ஆனந்த யோகம்)

நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன்அடி யார்க்கு முன்னே
சரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையைவெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும்தெய்வமே.

31. நவகோண வந்தனம் (நித்யானந்த யோகம்)

வீற்றிருப்பாள்நவ கோணத்திலேநம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளேஎன்னை ஆளும் குலதெய்வமே.

32. நிறைமங்கலம் (சிவஞான யோகம்)

சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம்ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே.