வராஹி மந்திரங்கள் பகுதி 2!
1. ஆத்மபூஜை (மஹாமாரி பஜனம்)
சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வாராஹிஎன் நெஞ்சகத்தே
2. தேவிதாபனம் (பில்லி மாரணம்)
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே.
3. மந்திரபூஜை (முனிமாரணம்)
மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள்என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹிஎன் மெய்த் தெய்வமே.
4. வாராஹி அமர்தல் (மூர்த்தி தியானம்)
ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண்எதிரே
வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே
5. வரம் பொழிதல் (எதிரி மாரணம்)
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம்தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!
6. வாழ்த்துதல் (உலக மாரணம்)
வருந்துணை என்று வாராஹிஎன்றன்னையை வாழ்த்திநிதம்
பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால்உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே.
7. நன்னீர் வழங்கல் (ஏவல் பந்தனம்)
வேறாக்கும் நெஞ்சும் வினையும்வெவ்வேறு வெகுண்டுடலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே.
8. புனித நீர் அருந்துதல் (துஷ்ட பந்தனம்)
பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
ஓடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள்எங்கள் அம்பிகையே.
9. மலர் வழிபாடு (கர்ம வாஸன நாசனம்)
தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம்அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே.
