கருட பஞ்சமி வழிபாட்டு பலன்கள்!
பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம். ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியன்று அனுஷ்டிக்கப்படுகின்றது இந்த கருட பஞ்சமி விரதம். கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், பெருமாள் வழிபாடும் சகல பாவ, தோஷங்களை போக்கி சுப யோகத்தை அமைத்து கொடுக்கும் திருமாலின் நித்ய சூரிகளின் தலையாய கருடாழ்வார் எனும் பெரிய திருவடி அவதரித்த திருநாளை கருட பஞ்சமி என வழிபடுகிறோம். கருடனைப் போல பலசாலியும், புத்திமானாகவும், வீரனாகவும், விவேகியாகவும் குழந்தைகள் உருவாக தாய்மார்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர்.
கருடனின் சிறப்பு:
பெருமாளுக்கு எத்தனையோ வாகனங்கள் இருந்தாலும் கருடன் மீது வரும் சேவை மிகவும் விசேஷம். ‘ஆழ்வார்‘ என்ற சிறப்பு பெயர் கருடனுக்கு உண்டு. பெருமாளின் தலைக்கு மேலே கருடன் கொடியாகவும், பெருமாளின் காலிற்கு கீழே வாகனமாகவும் காட்சி தருகிறார். விஹாகேஸ்வரன் வைநதேயின், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடி என பல பெயர்கள் கருடனுக்கு உண்டு. கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், கும்பாபிஷேகம் போன்ற கால நேரங்களில் வானில் கருடன் தெரிவதும், வட்டமடிப்பதும் மங்களகரமான ஒன்றாகும்.
மேலே பறக்கும் கருடனின் நிழல் பயிர் பச்சைகளின் மேல் படுவது நல்லது என்று விவசாயிகள் நம்புகிறார்கள். கருட மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. எதிரிகளை வெல்வதற்கும், விஷங்களை முறிக்கவும், மந்திர, தந்திரங்களுக்கும், தீய சக்திகளை ஒடுக்கவும் கருட மந்திரம் நல்ல பலன் தரும். கார்க்கோடகன் என்னும் நாகத்தை அடக்கி பிடித்து, நாகங்களை ஆபரணமாக தரித்துள்ளதால் ராகு-கேது தோஷமுள்ளவர்கள் கருட தரிசனம் செய்வது நலம் தரும்.
கருடனை வணங்கினால் உண்டாகும் பலன்கள்:
கருடனை வணங்கினால் விஷ்ணு பகவானை வணங்கிய பலன் கிடைக்கும். கருடனின் நல்ல, அழகான இறக்கைகள் யக்ஞங்கள் என்றும், காயத்ரி மகாமந்திரமே அவனுடைய கண்கள் என்றும், தோத்திர மந்திரங்கள் அவனுடைய தலை என்றும், சாம வேதமே அவனுடைய உடல் என்றும் வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது.
மாங்கல்ய பலம் கூடும் கருட பஞ்சமி விரதம்:
ஏழரை சனி, கண்ட சனி போன்ற கோச்சார சனி நடப்பவர்கள் கருட பஞ்சமியன்று வணங்கி வழிபட தோஷங்கள் நீங்கும். கருட பஞ்சமியன்று காரைக்காலில் ஏழு கோயில்களை சேர்ந்த பெருமாள்கள் காரைக்கால் அம்மையார் குளக்கரையில் எழுந்தருளி அருள்புரிகிறார்கள். பெண்கள் கருட பஞ்சமி விரதம் இருந்தால் மாங்கல்ய பலம் கூடும். கன்னி பெண்களுக்கு திருமண தடைகள் நீங்கும். குடும்பத்தில் சுபவிசேஷங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். மனகுழப்பம், மனசஞ்சலம், தரித்திரம் நீங்கும்.
கருடனை வணங்கும் தினங்களில் பலன்கள்:
1. கருடனை ஞாயிற்றுக் கிழமைகளில் தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும்.
2. திங்கட்கிழமை தரிசிக்க சுகங்கள் கிடைக்கும். துன்பங்களும் துயரங்களும் விலகும்.
3. செவ்வாய் கிழமையில் தரிசிக்க துணிவையும், மகிழ்ச்சியையும் அளிக்கும்.
4. புதன் கிழமைகளில் கருடனைத் தரிசித்தால் வஞ்சனை கொண்டவர் விலகுவர், விரோதிகள் அழிவர், வெற்றி உண்டாகும்.
5. வியாழக்கிழமைகளில் தரிசிக்க நீண்ட ஆயுளும், செல்வங்களும் வாய்க்கும்.
6. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கருடனை தரிசனம் செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
