பெயர்: கண்ணப்ப நாயனார்
குலம்: வேடர் – கங்கை குலம்
பூசை நாள்: தை மிருகசீருஷம்
அவதாரத் தலம்: உடுப்பூர்
முக்தித் தலம்: திருக்காளத்தி
கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன் – திருத்தொண்டர் தொகை
வரலாற்று சுருக்கம்
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான கண்ணப்பரர், #திண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் வேடர் குலத்தில் பிறந்தவர். நாணன், காடன் என்ற நண்பர்களோடு பன்றியை வேட்டையாட சென்ற போது, காளத்தி மலையில் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார்.
அந்நாள் முதல் அன்போடு கலந்த தூய பக்தி செலுத்தி, வாயில் நீர்சுமந்து வந்து அபிஷேகம் செய்தும், தலையில் சொருகி வந்த மலர், இலைகளால் அர்சனை செய்தும், பக்குவப்பட்ட பன்றி இறைச்சியை படைத்தும் வந்தார்.
லிங்கத்தில் ரத்தம் வருதல்
இதைக்கண்டு ஆகமவிதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவ கோசரியார் எனும் பிராமணர் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டார். கண்ணப்பரின் அன்பினை சிவகோசரியாருக்கு உணர்த்த திண்ணார் வரும் வேளையில் சிவலிங்கத்தி்ன் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் சிவபெருமான்.
அதைக் வருவதைக் கண்ட திண்ணனார், அடங்காத குருதியினை நிறுத்த, தன் கண்களில் ஒன்றினை அம்பினால் அகழ்ந்து லிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். லிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்று, இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது.
கண் கொடுத்த கண்ணப்பர்
திண்ணனார் சற்றும் யோசிக்காமல் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெடுக்க திட்டமிட்டு, லிங்கத்தின் இடக்கண் இருக்கும் இடத்தினை தன்காலொன்றால் அடையாளம் செய்தார். பின் இடக்கண்ணை அகழ்ந்தெடுக்க எத்தனித்தபொழுது சிவபெருமான் நில்லு கண்ணப்ப என மும்முறை கூறி தடுத்தருளினார்.
“இன்று முதல் கண்ணப்பன் என்று அழைக்கப்படுவாய், யாவரும் வேண்டும் முக்தியை உனக்கு அளிக்கிறேன்” என்று கூறி எம்பெருமான் முக்தி அளித்தார். இன்றைக்கும் காளஹஸ்தி சிவன் திருக்கோயிலில் கண்ணப்பருக்கு என தனிச் சன்னதி விளங்கி வருவது அவர் பக்திக்கு சான்றாகி நிற்கிறது எனலாம்.
முற்பிறப்பு
முற்பிறப்பில் அருச்சுனனாகப் பிறந்தார் என்று கூறுகிறது. பாசுபதம் வேண்டித் தவம் செய்த அருச்சுனன் வேடன் உருவில் வந்த சிவபெருமானுடன் அவர் சிவன் என்று அறியாமல் போர் செய்கிறான். பின்னர் அவனுக்குப் பாசுபதக் கணை தந்து, “நீ என்னை வேடன் என இகழ்ந்ததால் வேடனாகப் பிறப்பாய். இன்று பன்றி காரணமாக நம்மிடையே போர் நடந்தது. அன்றும் நீ பன்றி காரணமாகக் காளத்தி மலையில் என்னிடம் சேர்வாய்.” என்று சிவபிரான் அருள் செய்தார் என இப்புராணம் கூறுகிறது.
கண்ணப்பன் ஒப்பதோர்
அன்பின்மை கண்ட பின்
– மாணிக்கவாசகர்
வாய் கலசமாக வழிபாடு செய்யும் வேடன், மலராகு நயனம்
காய் கணையினால் கிடந்து ஈசன் அடிகூடு காளத்தி மலையே
– சம்பந்தர் பெருமான்
நாளாறில் கண்ணிடந்து அப்பவல்லேன் அல்லேன் நான்
இனிச் சென்று ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பனுக்கே !
– பட்டினத்தார்
மார்க்காவத்தித பாதுகா பசுதேரங் கூஸ்ப கூர்சாயதே
கண்டு ஷாம்பு நிசேஷனப் புரரிபோர் திவ்யாபிஷே காயதே
கிஞ்சித் பக்ஷித மாம்ஸ சேஷ கபளம் நவ்யோப பஹாராயதே
பக்தி, கிம்நகரோத்ய ஹோவசைசரோ பக்தாவதம் ஸாயதே
– ஆதி சங்கரர்
