பிரதோஷ பூஜையும் நந்தி தேவரும்!

22

பிரதோஷ பூஜையும் நந்தி தேவரும்!

பிரதோஷம் அன்று ஒரு கைப்பிடி காப்பரிசி அதாவது, (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம். பள்ளிகொண்ட சிவனை, சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோஷத்தன்று வழிபடல் நல்லது.

பிரதோஷ நாளான திரயோதசியன்று சூரிய அஸ்தமன நேரத்தில், அதாவது மாலை நாலரை முதல் ஆறரை மணிக்குள் வழிபாடு செய்வதே முறை. இதற்கு மாறாக இரவு 8 மணி வரை இந்தவழிபாட்டைச் செய்வது தவறு. பிரதோஷ நேரத்துக்குள் அபிஷேக ஆராதனைகள், ஸ்வாமி புறப்பாடு ஆகியவற்றைச் செய்தால்தான் பிரதோஷ பூஜையின் முழுமையான பலன்களைப் பெற முடியும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிந்து விடுகிறது. அதன் பின்னர் செய்வது ‘அந்திபூஜை’யாக இருக்கும். அது பிரதோஷ பூஜையாகாது.

பிரதோஷ நேரத்தில் மூலவரின் சக்தி, உற்சவ மூர்த்திக்கு வந்து விடுவதால், அப்போது மூலமூர்த்திக்கு எந்த வித வழிபாடும் செய்யக் கூடாது என்ற கருத்து, சரியல்ல. பிரதோஷ காலத்தில் மூலமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து செய்யலாம்.

சில இடங்களில் பிரதோஷ நேரத்தில் மூலவருக்கு முன்னாலுள்ள நந்தீஸ்வரருக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். பிரதோஷத்தின்போது பிரபஞ்சத்திலுள்ள அனைத்து நந்திகளின் திருக் கொம்புகளிடையேயும் சிவபெருமான் நடனமாடுவதால், ஆலயத்தின் அனைத்து நந்தி மூர்த்திகளுக்குமே வழிபாடு செய்வதுதான் முறை.

பிரதோஷ பூஜையின் போது அபிஷேகத்திற்காக நாம் தரும் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு பலன் உண்டு.
பால் – நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்.
தயிர் – பல வளங்களும் உண்டாகும்.
தேன் – இனிய சாரீரம் கிட்டும்.
பழங்கள் – விளைச்சல் பெருகும்.
பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும்.
நெய் – முக்தி பேறு கிட்டும்.
இளநீர் – நல்ல மக்கட்பேறு கிட்டும்.
சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும்.
எண்ணெய் – சுகவாழ்வு.
சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம்.
மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்.