ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று மூன்று முறை சொல்வது ஏன்?

55

ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று மூன்று முறை சொல்வது ஏன்?

சந்து + அம் = சாந்தம் – என்கிற சொல் மனங்குளிர்தலையும், அமைதியையும் குறித்ததாக அமைந்தது. சாந்தி என்பதற்கு அமைதி என்று பொருள். மந்திரங்கள் சொல்லி முடிக்கும் போது ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: என்று முடிப்பார்கள். அதுபோல யோகாசனம் போன்ற ஆசனங்கள் செய்து முடிக்கும்போது, ஓம் சாந்தி என்று உடலை தளர வைப்பதும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் சொல்லப்படுகிறது. ஒரு மனிதன் அவன் வாழ்க்கையில் மூன்று விதமான துன்பங்களில் இருந்து நீங்க வேண்டும். இதைப் பற்றி சாங்கிய யோக சூத்திரம் என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.

மூவகை துன்பங்கள் என்னென்ன?

1. அதிதைவீகம்
2. அதிபௌதீகம்
3. அதியாத்மிகம்

அதிதைவீகம் என்பது நம்மால் கட்டுப்படுத்த முடியாத, நம் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றால் வரும் துன்பமாகும். நம் சக்திக்கு மீறிய ஒன்றுதான் இயற்கை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்றவை இயற்கையிடமிருந்து வரும் துன்பங்கள் ஆகும். இதனை தடுத்து நிறுத்தும் சக்தி மனிதர்களுக்கு கிடையாது.

அதிபௌதீகம்:

அதிபௌதீகம் என்பது உலகத்திலுள்ள ஜடப் பொருட்கள், உயிரினங்கள் போன்றவற்றிலிருந்து வரும் துன்பங்கள் ஆகும். இவற்றுள் மனிதன், மிருகம், தாவரம், உயிரற்றப் பொருள் ஆகியவை அடங்கும். மின்சாரம் தாக்குதல், அடிதடி சண்டை, ஆயுதம் கொண்டு தாக்குதல், மலேரியா, விஷக் கடி, சாலை விபத்து போன்றவை ஆகும்.

அதியாத்மிகம்:

அதியாத்மிகம் என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் துன்பமாகும். இதுவே மிகவும் ஆபத்தானது. இதற்கு முழு பொறுப்பு நாம் தான். நம்மை நாமே துன்புறுத்திக் கொள்வதை இரண்டு வகையாகப் பகுக்கலாம்.
உடலால் புகைப்பிடித்தல், மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவு உண்ணுதல் ஆகியவை.

மனதால் தேவையற்ற எண்ணங்களைக் கொண்டிருத்தல், முறையற்ற விஷயங்களை நினைத்துக் கொண்டிருத்தல், கோபம், வெறுப்பு, பொறாமை போன்ற தீயகுணங்களைக் கொண்டிருத்தல் ஆகியவை ஆகும்.

தீர்வுகள்:

பதஞ்சலி யோக சூத்திரத்தில் துன்பங்களைப் பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் தெளிவாக விளக்குகின்றார். துன்பங்கள் என்பவை கிலேஷங்கள் என்று சொல்லப்படுகின்றன. நம்முடைய சுய இயல்பைப் பற்றி நாம் அறியாமல், அறியாமையில் திளைத்திருப்பதால் தான் புத்திமலுங்கி நம்மை நாமே துன்பப்படுத்திக் கொள்கிறோம் என பதஞ்சலி கூறுகின்றார்.

எனினும் எதிர்காலத்தின் துன்பங்களைத் தடுக்கும் அளவுக்கு நமக்கு ஆற்றல் உள்ளது என்பதை “ஹேயம் துக்ஹம் அனாகதம்” (2:16)-இல் குறிப்பிடுகின்றார். இந்த மூன்று நிலையிலுமான துன்பங்கள் நீங்கி எங்கும் அமைதி நிலவிடவே, ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி என மூன்று முறை செப்பிக்கப்படுகின்றது. அமைதியான இடத்தில், தூய்மையான பக்தி கொண்ட உள்ளத்தோடு அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு ஓம் சாந்தி என செப்பித்து வந்தால் ஒரு மனிதன் இந்த மூன்று வகையான துன்பங்களில் இருந்தும் நீங்கிடலாம்.

ஓம்சாந்தி…. ஓம்சாந்தி… ஓம்சாந்தி
சல் – என்ற அடிச்சொல் நீரையும், வெண்மையையும் , குளுமையையும் குறித்து நின்றன.
சலசல – என்ற இரட்டைக் கிளவி இதிலிருந்து பிறந்ததே! சலசலவென ஓடும் நீர் சலம் என்ற பெயரைப் பெற்றது.
சலசல – விலிருந்து கிளைத்து அதே பொருளில் பயனளிக்கும் மற்றொரு இரட்டைக் கிளவி ‘சிலுசிலு’ ஆகும்.
சல் -> சந்து
சில் -> சிந்து .
குளுமையைக் குறித்த சொற்களே நீட்சியடைந்து பின்னர் அமைதி குறித்த சொற்களையும் படைத்தது.
சந்து + அனம் = சந்தனம் என குளுமைப் பண்பும் நறுமணமும் மிக்க மரத்தைக் குறித்த பெயராகியது.
சந்தன் = குளுமையான பண்பு கொண்ட நிலவின் பெயரானது. அமைதியின் வடிவாகவும் கவிஞர்கள் நிலவை உருவகம் செய்வதை நோக்குக. சந்தன் என்ற தமிழ்ச்சொல்லே வடமொழியில் . சந்தன் > சந்த்ரன் > சந்திரன் எனத்திரிந்தது.
சந்து + அம் = சாந்தம்….என்கிற சொல் மனங்குளிர்தலையும் , அமைதியையும் குறித்ததாக அமைந்தது.
சாந்தம் – என்பதிலிருந்து உருவானதே சாந்தி – என்ற பெண் பால் பெயர்.
சாந்தன் – ஆண்பால் பெயர்.
சாந்தி – என்ற தமிழ்ச்சொல்லே…வடமொழியில் ‘ஷாந்தி’ என்ற திரிக்கப்பட்ட பெயரானது.