ஏன் வலது காலை வைத்து வீட்டில் நுழைய வேண்டும் தெரியுமா?
மனித உடலில் வலது பக்கத்தில் அமைந்துள்ள கண், காது, மூக்கு, புஜம், கை, துடை, கால் ஆகிய உறுப்புகள், இடது பக்கத்தில் அமைந்துள்ள உறுப்புகளைக் காட்டிலும் சற்று பலம், வலிமை மற்றும் புண்ணியம் அதிகம் பெற்று இருக்கிறது எனக் கூறுகிறது வேதம். மேலும் இதை இன்றைய விஞ்ஞானமும் உறுதிப்படுத்துகிறது.
அதாவது, மனிதனின் உடலைச் சுற்றிலும் இரு வேறு காந்த வளையங்கள் சுற்றுகின்றன. அவற்றில் முதலாவது, கால் பகுதியிலிருந்து தலைப்பகுதிக்கும், தலைப் பகுதியிலிருந்து கால் பகுதிக்கும் வலமாகச் சுற்றுகிறது. இரண்டாவது காந்த வளையம் உடலின் இடது பாகத்திலிருந்து உடலில் முன்பகுதி வழியாக, வலது பக்கத்துக்கும், வலப்பகுதியிலிருந்து பின்பகுதி வழியாக இடது பக்கத்துக்கும் வலமாகச் சுற்றுகிறது.
அதிக திரன் கொண்ட வலப்பக்கம்:
ஆகவே, காந்த வளையத்தின் திசைக்கேற்றவாறு உடல் அசையும்போது காந்த வளையத்தின் சுருள்கள் இறுகுகின்றன. எதிராக அசையும்போது சுருள் தொய்ந்துபோய் உடல் இயந்திரத்தின் செயல்திறனை தளர்வடையச் செய்கிறது. ஆகவே, உடலின் இடப்பகுதியைக் காட்டிலும் வலப்பகுதிக்கு செயல் திறன் அதிகம் என்கிறது நவீன மின் இயல். இதை ஒட்டியே நமது மகரிஷிகளும் எந்த நல்லச் செயலைச் செய்யும்போதும், வலது பகுதியிலுள்ள வலக்கை போன்றவற்றால் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.
வலது காலை வைத்து வீட்டில் நுழைய வேண்டும்:
புதிதாக ஒரு வீடு கட்டி, அந்த வீட்டுக்கு கிரகப்பிரவேசம் (புதுமனைப் புகுவிழா) நடத்தும்போது, அந்த வீட்டுத் தலைவியான குடும்பப் பெண் வீட்டுக்குள் (வாசல் நிலையைத் தாண்டி அமைந்துள்ள பகுதியில்) நுழையும்போது, தனது வலது காலை வைத்து நுழைய வேண்டும். இப்படிச் செய்வதாலேயே அந்த வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பது ஐதீகம்.
இவ்வாறே, திருமணம் முடிந்து முதல் முதலாக புகுந்த (கணவன்) வீட்டுக்குள் நுழையும் மணப்பெண்ணும், அந்த வீட்டில் நுழையும்போது முதலில் தனது வலது காலை அந்த வீட்டுக்குள் வைத்து நுழைய வேண்டும். இதனால் அந்த வீட்டில் அந்தப் பெண்ணின் வாழ்க்கையும், அந்தப் பெண்ணைச் சார்ந்தவர்களின் வாழ்க்கையும் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக அமையும் என்பது ஐதீகம் ஆகும்.
