Wednesday, October 18, 2023
HomeArthamulla Aanmeegamஇறைவனிடம் நாம் செய்யும் பக்தியில் ஏன் முழுமையான பலன் கிடைப்பதில்லை?

இறைவனிடம் நாம் செய்யும் பக்தியில் ஏன் முழுமையான பலன் கிடைப்பதில்லை?

திடமான நம்பிக்கை, வைராக்கியம் இல்லாது போவதால் தான் பக்தி பலிப்பதில்லை !
நினைப்பது நடக்காதபோதும், துன்பங்கள் வரும்போதும் இறைவன்மேல் கோபம் கொள்ளும் மனநிலைதான் பலருக்கும் உள்ளது.
கடவுளுக்கு கண்ணே இல்லை என்று பலரும் வெறுத்துப் பேசுவதைக் கேட்டிருக்கிறோம்.
ஒரு பெண்மணி சுவாமி படங்களைக் கழற்றி வீட்டுக்கு வெளியே வைத்து விட்டார். சிலர் துயரங்களைக் கண்டு மனம் வெறுத்து, `இனி நான் பூஜையே செய்யமாட்டேன். கோவிலுக்கும் செல்லமாட்டேன்’ என்கிறார்கள். இதுவா உண்மையான பக்தி ..?
கடலில் கட்டிப்போட்டபோதும் சிவனை நம்பிக்கையுடன் வேண்டி கரையேறிய திருநாவுக்கரசு சுவாமிகள்போல் திடமான நம்பிக்கை யையும் வைராக்கியத்தையும் – சிறிதளவாவது – நாம் முயன்று பெற வேண்டும்.
இறைவனை நாம் வேண்டினாலும் வேண்டாவிட்டாலும் கடவுளுக்கு ஒன்றும் நஷ்டமில்லை அவருக்கு நம்மிடம் ஆக வேண்டிய காரியம் எதுவுமில்லை !
“தந்ததுஎன் தன்னைக் கொண்டது உன் தன்னை
சங்கரா யார்கொலோ சதுரர்
அந்தம் ஒன்றில்லா
ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றது என் பால்”
என்ற வரிகள், இறைவனுக்கு நம்மால் எந்தப் பயனும் இல்லை என்பதை விளக்கும். அவனைப் பெற்று பயனடைய வேண்டியது நாமே..!
முதல்வி தன்னை உன்னாது ஒழியினும்
உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே` ..
என்று அபிராமி பட்டர் `மின்னாயிரம்’ என்று துவங்கும்
அபிராமி அந்தாதி பாடலில் கூறுவது எவ்வளவு உண்மை..!
தகுதியில்லாத – உபயோகமில்லாத என்னைக்
கொடுத்து உன்னைப் பெற்றேன்` ..
என்கிறார் மாணிக்கவாசகர்
பொருள் அறிந்து இறைப் பாடல்களைப் படிக்கவேண்டும். அந்த லயிப்பு உணர்விலே இடம் பெற்றால் தான் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க முடியும்.
கோவில்களுக்குப் போகும்போதும் முறையாக வழிபாடு செய்யும் முறையைத் தெரிந்து வழிபடவேண்டும்.
கங்கை ஆடில்என் ? காவிரி ஆடில்என் ?
கொங்கு தண்குமரி துறை ஆடில்என் ?
ஓங்குமா கடல் ஓதநீர் ஆடில்என் ?
எங்கும் ஈசன் என்னாதவர்க்கு இல்லையே.
கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை
ஆடினாலும் அறனுக்கு அன்பு இல்லையேல்
ஓடும் நீரினை ஓட்டைக் குடத்து அட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோடு ஒக்குமே.’
என்கிறது தேவாரம்.எவ்வளவு தீர்த்த யாத்திரைகள் செய்தாலும் ஈசன்மேல் உண்மையாக அன்பு இல்லாதவரது பக்தி, ஓட்டைக் குடத்தினில் நீர் அடைத்ததைப் போலவே என்று திருநாவுக்கரசர் கூறுவதை சற்று நினைத்துப் பார்க்கவேண்டும்.
தீர்த்த யாத்திரை மற்றும் கோவில்களுக்குச் செல்வதை உல்லாசப் பயணம்போல் வைத்துக்கொள்ளாமல், ஒவ்வொரு நிமிடமும் பக்தியை வளர்த்துக்கொள்ள அதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மது அருந்தாமல் மாமிசம் சாப்பிடாமல் புகை பிடிக்காமல் விரத மிருந்து கோவிலுக்குச் செல்பவர்கள் இருப்பது வழக்கம். இதன் நோக்கம் என்னவென்றால்,என்றுமே தீய பழக்கங்களிலிருந்து விலகி யிருக்க வேண்டும் என்பதுதான்.ஆனால் இன்றைய நிலை என்ன? சென்று திரும்பியவுடனே மறுபடியும் அந்த பழக்கங்களில் ஈடுபடுகின்றனர் இப்படிச் செய்வதால் இறை அருள் பூரணமாகக் கிடைப் பதில்லை !
எனவே பூரணமாகப் பலனைப் பெறும் அளவில் நாம் நடந்துகொள்ள வேண்டும். கோவில்களுக்குச் செல்வது, பூஜைகள் செய்வது மற்றும் எல்லா வழிமுறைகளின் நோக்கம் இதயத்தின் உள்ளிருக்கும் ஜோதியை நாம் உணரவேண்டும் என்பதுதான்.
நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்’
அவர் அல்லவா?
எனக்கு பக்தியைக் கொடு … கடவுளே எனக்கு உன் நினைவைக் கொடு … எனக்கு வைராக்கியம் வேண்டும் … என்று தொடர்ந்து வேண்ட வேண்டும். அவனருளால்தான் அவன் தாளை நினைக்க முடியும் என்கிறது சிவபுராணம்..!
பக்தி பலிக்க திடமான நம்பிக்கை, வைராக்கியம் முக்கியம் முக்கியம் !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × two =

Most Popular