பங்குனி மாத விழாக்கள், விசேஷங்கள்!
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. பங்குனி மாதத்தை வசந்த காலம் என்று அழைப்பார்கள். பங்குனி மாதத்தில்தான் பெண்கள் கடைபிடிக்கும் காரடையான் நோன்பு, கடவுள்களின் திருமணங்கள் நடைபெற்ற பங்குனி உத்திரம் என்று பல்வேறு நிகழ்வுகள் நிகழ்கின்றன. அந்த வகையில் இந்த மாதம் எந்தெந்த நாட்களில் என்னென்ன விஷேச நாட்கள் என்று பார்க்கலாம் வாங்க…..
15.03.2023 – பங்குனி 01 – காரடையான் நோன்பு:
கார் காலத்தில் விளைந்த நெல்லைக் கொண்டு அடை செய்து கௌரி ஆகிய காமாட்சி அம்மனை சாவித்திரி வழிபட்டதால் இது காரடையான் நோன்பு என்று அழைக்கப்படுகிறது. இவ்விரத முறையானது மாசி மாதக் கடைசி நாள் தொடங்கப்பட்டு பங்குனி முதல் நாள் நிறைவு பெறுகிறது. திருமணமான பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதால் தங்கள் கணவனின் ஆயுள் நீடிப்பதோடு, ஆரோக்கியமான வாழ்வினை அம்மன் அவருக்கு வழங்குகிறாள்.
01.04.2023 – பங்குனி 18 – ஆமலகீ ஏகாதசி:
ஏகாதசி, பெருமாளை வணங்குவதற்கு உகந்த நாளாகும். பங்குனி வளர்பிறை ஏகாதசிக்கு ‘ஆமலகீ ஏகாதசி” என்று பெயர். இன்றைய தினத்தில் விரதமிருந்து, நெல்லி மரத்தடியில் பரசுராமர் படத்தை வைத்து பூஜை செய்தால் புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். பசு தானம் செய்த புண்ணியமும் கிடைக்கும்.
5.04.2023 – பங்குனி 22 – பங்குனி உத்திரம்:
12வது மாதமான பங்குனி பௌர்ணமியுடன் 12வது நட்சத்திரமான உத்திரம் இணையும் புண்ணிய நாளே பங்குனி உத்திரம். பங்குனி உத்திரத்தில்தான் சிவன் – பார்வதி, முருகன் – தெய்வானை, ராமன் – சீதை உள்ளிட்ட தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றன என்று புராணங்கள் கூறுகின்றன. பங்குனி உத்திரம், சிவ மற்றும் முருகப்பெருமானை வழிபட உகந்த நாள். திருமணத் தடைகள் அனைத்தும் விலகும்.
5.04.2023 – பங்குனி 22 – பங்குனி பௌர்ணமி:
பௌர்ணமியன்று செய்யப்படும் அம்பிகை வழிபாட்டுக்கு பலன்கள் அதிகம். பௌர்ணமி இரவு நேரத்தில் சிவ வழிபாடு செய்த பிறகு கிரிவலம் மேற்கொண்டால் நன்மைகள் உண்டாகும். உடலும், மனமும் ஆரோக்கியமாகவும். கூடுதலாக வட இந்தியர்கள் கொண்டாடும் ஹோலிப்பண்டிகையும் இந்நாளில் வருகிறது.
18.03.2023 – பங்குனி 4 – விஜயா ஏகாதசி:
ஏகாதசி பெருமாளுக்குரிய நாள். பங்குனி மாதத்தில் தேய்பிறை ஏகாதசிக்கு ‘விஜயா ஏகாதசி” என்று பெயர். விஜயா ஏகாதசி தினத்தில் ஏழு தானியங்களை ஒன்றன் மேல் மற்றொன்றைப் பரப்பி மகாவிஷ்ணுவை வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
21.03.2023 – பங்குனி 7 – சர்வ அமாவாசை:
இறந்த முன்னோர்களை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் ‘அமாவாசை”. இன்று புனித நீர் நிலைகளில் நீராடி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். பாவங்கள் அனைத்தும் விலகி சகல நன்மைகளும் வந்து சேரும்.
22.03.2023 – பங்குனி 8 – யுகாதி பண்டிகை (தெலுங்கு வருடப்பிறப்பு):
தெலுங்கு பேசும் மக்களின் புத்தாண்டு தினம் ‘யுகாதி பண்டிகை”. நான்கு நவராத்திரிகளுள் ஒன்றான வசந்த நவராத்திரியும் யுகாதி அன்றுதான் தொடங்குகிறது. இந்த வசந்த நவராத்திரி காலத்தில் அம்மனை வழிபட்டால் அம்மனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.
30.03.2023 – பங்குனி 16 – ஸ்ரீ ராம நவமி:
புராண நம்பிக்கையின் படி, மகா விஷ்ணு ராம அவதாரம் எடுத்த நாள் ராம நவமியாகக் கொண்டாடப்படுகிறது.மனிதனாகவே வாழ்ந்து தர்மம், நீதி, நேர்மைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ ராமர். ஒரு மனிதன் எவை எல்லாம் செய்ய வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதாக எடுக்கப்பட்ட அவதாரமே ராம அவதாரம்.
