Monday, October 23, 2023
HomeArthamulla Aanmeegamபூச்சொரிதல் ஸ்பெஷல் !

பூச்சொரிதல் ஸ்பெஷல் !

காஞ்சி மடத்தருகில், காமாட்சி என்று ஒரு பூக்காரி இருந்தாள். அவள் பெரியவாளை “அப்பா” என்றுதான் அழைப்பாள். தினமும் ஒரு கூடை பூவினால் பெரியவாளை அர்ச்சிப்பாள்.

பெரியவா “ஏன் இப்படி பூவை வீணாக்கறே? இதை வித்தா உனக்கு காசு கிடைக்குமே!” என்பார். “.

காசு பெரிசா சாமி! உன் தலையில் அர்ச்சித்தால் அதற்கு மேலேயே எல்லாம் கிடைக்கும்” என்பாள். பூக்காரி.

மடத்தில் ஒரு நியதி உண்டு. பெரியவா படுத்துக்கப் போய்விட்டால் யாரும் எழுப்பக் கூடாது. ஆனால், இந்தக் காமாட்சி மட்டும் விதிவிலக்கு. எத்தனை நேரமானாலும் வரலாம். ஏனெனில்,
பெரியவாளே அவளிடம், ” நீ உன் வியாபாரத்தை முடித்துக் கொண்ட பிறகுதான் என்னிடம் வரணும். பாதியில் விட்டு வரக் கூடாது!” என்று கட்டளை இட்டிருந்தார்.அவளது பிழைப்பை தனக்காக விடுவதற்கு அந்தக் கருணாமூர்த்தி சம்மதிப்பாரா?

ஒரு நாள் பெரியவா, நாகராஜன் என்பவரை 9 மணி நியூஸ் கேட்டுச் சொல்லச் சொல்லி, கேட்டுக்கொண்டிருந்தார். வேதாந்த தத்துவங்கள் ஒரு புறம் இருந்தாலும், உலக நடப்பையும் தெரிந்து கொள்ளாமல் விடமாட்டார். அந்தச் செய்திகளை அலசி ஆராய்ந்த பிறகு படுக்கப் போக நாழி ஆகிவிடும். அன்று,

புதுக்கோட்டையிலிருந்து “ஜானா” என்ற ஒரு பெண் பெரியவாளுக்கு வெல்வெட்டில் பாதுகை செய்து கொண்டு வந்திருந்தாள். அதைக் காலை முதல் பெரியவா கழற்றவேயில்லை. படுக்கைக்குப் போகு முன் கொட்டகை சென்று, தேகசுத்தி பண்ணிக் கொண்டு வரச் சென்றார். அப்போது நியூஸ் படிக்கும் நாகராஜன், “இன்று பெரியவா பாதுகையைக் கழட்டினதும் நான்தான் எடுத்துக்கொள்வேன், என்னிடம் பெரியவா பாதுகையே இல்லை!” என்று கழட்டுவதற்குக் காத்திருந்தார். பெரியவா பாதுகையைக் கழட்டாமலேயே உட்கார்ந்திருந்தார். பூக்காரி வந்து நமஸ்காரம் செய்தாள். பாதுகையைக் கழற்றி பூக்காரியிடம்,

“இது உனக்குத்தான், எடுத்துக்கோ!” என்றார்.

“நாமொன்று நினைத்தால் தெய்வமொன்று நினைக்கிறது!” என்று நாகராஜன் குறையோடு திரும்பினார். அப்படிப்பட்ட அன்புக்கு அந்த ஏழைப்பூக்காரி பாத்திரமாயிருந்தார். எத்தனையோ பேர் அவளிடம் லட்ச ரூபாய் தரோம், இந்தப் பாதுகையைக் கொடு என்றனர். அவள் அசையவேயில்லை. பெரியவா அவளுக்கு இந்த உலக வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளெல்லாம் கிடைக்கச் செய்தார்.அவள் வீட்டுத் திருமணங்களுக்கு வண்டி,வண்டியாக கல்யாண சாமான்கள் அனுப்பினார்.

பெரியவா ஸித்தியான பிறகும், சமாதிக்கு இரவில் பூக்களால் அர்ச்சிப்பதை காமாட்சி விடவில்லை. ஆனால், பெரியவா இருக்கும்போது பூக்கூடையை வெறுமனே திருப்பாமல் ஏதாவது பழம் முதலியன போட்டுத்தான் அனுப்புவார்.அவர் மறைவுக்குப் பின் வெறுங்கூடையைப் பார்க்கவே வருத்தமாக இருந்தது. “அப்பா, நீ இருந்தா இப்படி என்னை வெறுங்கூடையுடன் அனுப்புவாயா!” என்று புலம்பினாள். கூடையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திவளுக்கு தூக்கிவாரிப்போடும்படி அதிஷ்டானத்திலிருந்து ஒரு சம்பரத்தைப் பூ யாரோ வீசி எறிந்தது போல் வந்து அவள் கூடையில் விழுந்தது.

இது போல் பல நிகழ்ச்சிகள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பிரத்தியட்சமாக அவர் அருளைத் தந்து கொண்டுதான் வருகிறார்.

நம்பினோர் கெடுவதில்லை…..இது நான்கு மறை தீர்ப்பு.

ஹர ஹர சங்கர.!
ஜய ஜய சங்கர.!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + sixteen =

Most Popular