சீரடி பாபாவிற்கு அன்னதானம் செய்வதற்கான விதிமுறைகள்!
சாய்பாபா தாம் வாழ்ந்த காலத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். நான் இவ்வுடலை விட்ட பிறகும் எனது சக்தியால் பக்தர்களை காப்பேன் என அருளியுள்ளார். அவர் தூணிலும் இருப்பார் , துரும்பிலும் இருப்பார்.எல்லா ஜீவராசிகளிலும் நிறைந்து இருக்கிறார் என்பதை அவர் ஷீரடியில் பல்லி ஒன்றை வைத்து நிகழ்த்திய அற்புதமே சாட்சி. இறைவனின் படைப்புகளில் ஆறறிவு படைத்த மனிதனே மேலானவனாகக் கருதப்படுகிறான்.
சந்தோஷமோ, சங்கடமோ எதையும் முழுமையாக அனுபவிக்கவே துடிப்பான். ஆனால் ஐந்தறிவு கொண்ட ஜீவன்கள் இறைவன் கொடுத்த வாழ்க்கையை சுதந்திரமாக சந்தோஷமாக வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன. அவைகளுக்கு மனிதர்களைக் காட்டிலும் எதிர்காலத்தை உணர்ந்துக் கொள்ளும் ஆற்றல் அதிகம்.
ஒருமுறை பாபா மசூதியில் அமர்ந்திருந்தபோது மசூதிச் சுவரில் ஒரு பல்லி டிக்டிக் என்று சப்தமிட்டது. அவருடைய பக்தருக்கு அது கெட்ட சகுனமா நல்ல சகுனமா? என்ற சந்தேகம் எழுந்தது.
அதை பாபாவிடம் கேட்க , அவரோ இந்தப் பல்லியைப் பார்க்க இதன் சகோதரி அவுரங்காபாத்திலிருந்து வந்து கொண்டிருப்பதை இது உணர்ந்தே மகிழ்ச்சியுடன் குரல் கொடுக்கிறது! என்றார் . அங்கிருந்த பக்தர்களுக்கு நம்பவும் முடியவில்லை ,நம்பாமல் இருக்கவும் முடியவில்லை .ஆனால் அங்கிருந்த எல்லோரும் அந்த சகோதரிப் பல்லியைப் பார்ப்பதற்காக, ஆவலோடு காத்திருந்தனர். இப்படி அந்த பக்தர் நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான், ஜல் ஜல் என்ற சப்தத்துடன் ஒரு குதிரை சீரடி மசூதியின் வாசலில் வந்து நின்றது. பாபாவை தரிசிக்கும் ஆவலோடு அவுரங்காபாத்தில் இருந்து அவருடைய பக்தர் குதிரை மேலிருந்து தாவிக் கீழே இறங்கினார். பாபாவை தரிசித்த பின், அதே குதிரையில் தனது பயணத்தைத் தொடர விரும்பினார் அவர்.
ஆனால் குதிரை நகர மறுத்தது.குதிரையின் பசியை போக்க நினைத்த பாபா பக்தர் கொள்ளு வாங்கி வர தன் தோளில் இருந்த ஒரு காலிப் பையை தூசியைப் போக்குவதற்காகக் கீழே உதறினார். சடாரென்று பையிலிருந்து ஒரு பல்லி கீழே விழுந்தது. தன்னிடம் கேள்வி கேட்ட பக்தரைப் பார்த்தார் பாபா. சரசரவென வேகமாக ஊர்ந்து சென்ற அந்தப் பல்லி, சுவரில் ஏறியது. சுவரில் ஏற்கெனவே அதன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த பல்லியின் அருகே போய் நின்றது.
அடுத்த கணம் இரண்டு பல்லிகளும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. பல்லிகள் ஒன்றையொன்று சுற்றிச் சுற்றி வந்தன. மகிழ்ச்சியோடு முத்தம் கொடுத்துக் கொண்டன. பாபாவின் சந்நிதானத்தில் அவை மிகுந்த மன நிறைவை அடைந்தன.
இந்த அபூர்வமான காட்சியைப் பார்த்த பக்தர் பிரமிப்பில் உறைந்தார்.
பாபாவின் வாக்கு பலித்து விட்டது. பாபாவைப் பொறுத்தவரை விலங்குகள், பறவைகள், மனிதர்கள், தாவரங்கள் எல்லாமே அவருக்கு ஒன்றுதான். எல்லாமே அவரது படைப்புத்தான் என்பதால், எல்லாவற்றின் மீதும் பாபாவுக்கு நிரந்தரமான தாய்ப்பாசம் உண்டு.
அனைத்து உயிர்களிடத்தும் பாபாவிற்கு உள்ள தாயன்பை எண்ணி பரவசமடைந்தனர் அங்கிருந்த அவருடைய பக்தர்கள். நினைத்து நெக்குருகினார். அவருடைய பெயரை நாமும் மனமுருகி பிரார்த்தனை செய்திட நம் கவலைகள், துன்பங்கள் எல்லாம் பறந்தோடி விடும். சாயி நாமம் சொல்லுவோம். வாழ்வில் மேன்மை அடைவோம்.
