வரவேற்போம் ஆடி மாதத்தை !!
1. தமிழ்மாதங்களில் அதிக நாட்களைக் கொண்டது அதாவது 32 நாட்களை கொண்டது ஆடி மாதம்தான். இதுவே ஆடியின் முதல் சிறப்பு.
2. கல்விக்கடவுளான ஹயக்ரீவர் அவதரித்தது ஆடிமாத பௌர்ணமி தினத்தில்தான்.
3. திக் தேவதைகளை வழிபடக்கூடிய விரதமான திக்தேவதா விரதமானது, ஆடிமாதம் சுக்லதசமியில்தான் வருகிறது.
4. ஆண்டாள் அவதரித்தது ஆடிமாதம் பூரநட்சத்திர தினத்தில்தான். அரக்கரைஅழித்து, மக்களைக் காப்பதற்காக, அம்பாளும் இந்நாளிலேயே அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. எனவே, ஆடிப்பூரம் விழாவானது, அம்மன்கோவில்களில், சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
5. கஜேந்திரன் என்ற யானையை, முதலையிடமிருந்து திருமால் காத்தது ஆடிமாதத்தில்தான். அதனால்தான், ஆடிமாதத்தில், வைணவ ஆலயங்களுள், இந்த கஜேந்திர மோட்ச வைபவமானது நடத்தப்படுகிறது.
6.சங்கரன்கோவிலில், ஆடிமாதத்தில்தான், பனிரெண்டு நாட்கள் நடைபெறும் “ஆடித்தபசு திருவிழா” கொண்டாடப்படுகிறது.
7.ஆடிமாதம் விவசாய விதைப்பிற்கு உகந்த மாதமாகும். “ஆடிப்பட்டம் தேடிவிதை” என்ற பழமொழியே இதனால்தான் உருவானது.
8. குச்சனூரில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள சனீஸ்வரனை, ஆடிமாத சனிக்கிழமைகளில் வழிபடுவது மிகச் சிறந்த பலன்களைத் தருவதாகக் கருதப்படுகிறது.
9. உமை, சிவனைப் பிரிந்திருந்த காலத்தில், ஆடி என்ற தேவமங்கை, உமைவடிவில் சிவனிடம் வந்தாள். சிவன் உண்மையறிந்து, அவளைச் சூலாயுதத்தால் தண்டிக்க முயல, சூலாயுத தீப்பொறிபட்டு, ஆடி பக்குவமடைந்தாள். சிவனின் பார்வை தன்மீது படுவதற்காகவே, தான் இவ்வாறு நடந்ததாகக் கூறி மன்னிப்பு கேட்டாள். சிவன், ஆடியை மன்னித்தாலும், சிறிய தண்டணையாக, பூவுலகில் அவள் கசப்புச்சுவையுள்ள மரமாக அவதரிக்க வேண்டுமென்றும், அம்மரத்தில் உமைக்குரிய ஆற்றலும் பொலியுமென்பதால் புனிதமரமாக விளங்குமென்றும், அவள்பெயரில் தமிழ் மாதங்களில் ஒன்று பெயர்பெறுமென்றும், அம்மாதமே, அடுத்தடுத்த மாதங்களில் வரும் அனைத்து விசேஷங்களின் தொடக்கமாக அமையுமென்றும், கூறி அருளினார். ஆடி, வேப்பமரமாக அவதரித்தாள். ஆடிமாதமும் இவ்வாறு உருவானது என்கிறது புராணம்.(புராணம் பெயர் தெரியவில்லை; இணையதளத்தில் படித்தது).
10. மங்கள கௌரிவிரதம், ஆடிமாத செவ்வாய்க்கிழமைகளில் கடைபிடிக்கப்படுகிறது.
11.ஆடி மாத கடைசிவெள்ளி, மஹாலட்சுமிக்கு உரியது. அன்று மஹாலட்சுமி விரதமிருந்து, பூஜிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
12. ஆடி கிருத்திகை, முருகனுக்கு உகந்த விசேஷ வழிபாட்டு தினங்களுள் ஒன்றாக உள்ளது.
13. ஆடி மாத வாஸ்துநாளில், வீடு/கட்டிடம் கட்ட பூஜையிட்டு, கட்டுமான வேலையைத் தொடங்கினால், பெரும்பாலும் எந்த தடங்கலுமின்றி விரைவில் நிறைவடையும் என்பது ஐதிகம்.
14.ஆடிமாத வளர்பிறை திதிகளில் நாகபஞ்சமி, கருடபஞ்சமி வைபவங்கள் நடைபெறுகின்றன. ராகு−கேது தோஷம், சர்ப்பதோஷம், உள்ளவர்கள், குழந்தைப்பேறு இல்லாதவர்கள், கோவில்களில் நாக பிரதிஷ்டை செய்து வழிபட்டால் தோஷம் நீங்கி, பலனடைவார்கள் என்பது ஐதீகம்.
15. ஆடி அமாவாசை அன்று, முன்னோர்களுக்கு, பித்ரு தர்ப்பணம் செய்தால், ஆண்டுமுழுவதும் பித்ருதர்ப்பணம் செய்ததற்குரிய பலனுண்டாகும் என்பது ஐதீகம்.
16. வீட்டில் வளங்கள் பெருகவேண்டி செய்யப்படுகிற துளசிபூஜையானது, ஆடிமாதம் வளர்பிறையில் துவாதசி திதியில் ஆரம்பித்து, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதியில் நிறைவடைகிறது.
