அணிகலன்களின் தத்துவங்கள் பகுதி -2!
வளைகாப்புத் தத்துவம்:
வளை என்றால் வட்டத்தையும் பாசம், பக்தி, சங்கு,அன்பு சக்கரம், சங்கம் போன்றவற்றையும் குறிக்கும், திருமணம் நடந்ததும், மணமக்களுக்கு கையில் காப்பு கட்டுவார்கள் பெண்ணுக்கு தற்காப்பு வேண்டும், அவளைக் காப்பேன் என்ற உத்தரவாதத்திற்காகவே கணவன் கையில் காப்பு கட்டப்படுகிறது. காப்பேன் என்ற உறுதியுடன் காப்புக் கட்டப்பெற்ற கணவன் அன்புடன் வாழ்க்கை நடத்தினார் என்பதற்கு அடையாளமாக அம்மங்கை தாய்மை அடைந்து விட்டால் ஒரு குறித்த காலத்தில் சுமங்கலிப் பெண்கள் பலரும் கூடி வளையல்களை அணிவிப்பார்கள்.
இந்த செயலில் ஒரு மிகப் பெரிய தத்துவக் கருத்தே அடங்கி இருக்கிறது. ” பெண்ணே கணவனிடம் காட்டிய பாசத்தினால் உன்னை சுற்றி ஒரு வட்டம் நீயே இட்டுக் கொண்டாய், அதுவே தாய்மை ஆகும், வளைந்த நிலையில் உள்ள சங்கு சக்கர வடிவம் கொண்ட இந்த வளையல்களை தீர்க்க சுமங்கலியாக நாங்கள் உனக்கு வளையல் அணிவித்தல் என்ற காப்புச் செய்கிறோம்…
அந்த வளைகாப்புக்கு காரணமான ஸ்ரீமன் நாராயணனே உனக்கு பாதுகாப்பு என்று சுமங்கலிகள் வாழ்த்துவதைப் போலும் – பிறக்கப் போகும் குழந்தை ஆதியந்தம் இல்லா வளையல் வட்டம் போல் உனக்கு ஆதியந்தமில்லா பெரும் வழியைக் காட்டட்டும், என்று வளைகாப்புத் தத்துவம் சொல்கிறது.
உன் கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று திருவாசகத்தில் கூறியுள்ளதை போல பெண்ணே உன் கையில் அடைக்கலமான வளையல் உனக்கு எதை நினைவூட்டுகிறது தெரியுமா? உன்னை நம்பிப் பிறக்கப் போகம் குழந்தையைக் காப்பாற்றுவாய் அது போல் வட்டமான இந்த புவியை இறைவன் காப்பாறகிறான், என்கிறது…
வளைகாப்பு வளையல்
உலகம் பூஜ்ய வடிவம் அதைப் படைத்த இறைவனும் பூஜ்ய வடிவம், பூஜ்யம் என்பது ஆதியந்தமற்றது. வளையல் பூஜ்யத்தின் வடிவம் அதுபோல தாய்மையானது இன்பமும் பற்றும் இல்லாத பரிபூரண அன்பு நிலையான பூஜ்ய ரூபமாகும்,..
வளை – காப்பு – அன்பினால் கிடைத்த மேலான ஐஸ்வர்யம் – அன்புக்கு ஐந்து ஞானேந்திரியங்கள் வலது கை விரல்களிலும் அடங்கிவிடும் என்பது கருத்து…
ஒட்டியாணம்:
குழந்தையாகப் பிறந்தது முதல் அரைஞான் அணிவிப்பது ஆதி கால முதல் தொடரும் பழக்கம், தங்கத்தினால் வெள்ளியால் கருப்பு கயிற்றினால் இது அணியப்படுகிறது. யோகத்தில் இறங்கினால் தான் ஞானம் கிட்டும், ஞானம் கிடைத்தால்தான் பிறவித் தொடரிலிருந்து விடுதலை அடைய முடியும், யோகத்தின் முதல் படி அளவாக நடப்பது ஆகும்.
உணவில் உறக்கத்தில் உறவில் நடப்பதில் பேசுவதில் இப்படி எல்லா செயல்களிலும் அளவாக இருக்க வேண்டும் என்று ஸ்ரீமத் பகவத் கீதை அருளுகிறது. அறை என்றால் பாதி இடை, வயிறு என்று பொருள் தராசு முள்ளைப் போன்றது அரைஞாண் , சரீரம் பெருக்காது, மெலிந்து இருக்க வேண்டும் என்பதை அரைஞான் நினைவு படுத்தும் அளவுகோல் ஆகிறது. யோகப்பயிற்சி செய், சரீரத்தை பாதுகாத்திடு, மீண்டும் மனிதப் பிறவி கிடைப்பது அரிது என்கிறது இந்த அரைஞாண்…
கொலுசு:
இன்று கொலுசு என்று அழைக்கப்படும் பாத அணியை கிண்கிணி என்று அன்று அழைத்தார்கள், பெரியாழ்வாரின் திருமொழி அருணகிரி நாதரின் கந்தரலங்காரம் போன்ற பல திருநூல்களில் கொலுசை புகழ்ந்து பாடியுள்ளதைக் காணலாம், ” கீதம் தெய்வீக வடிவம்” நடை கூட தெய்வீகமாக இருக்க வேண்டும் அப்போதுதான் திருமகள் அவர்களிடம் குடியிருப்பாள், நிதானமாக நடந்தால் கொலுசிலிருந்து தெய்வீக ஓசை வரும், அந்த ஓசையை கேட்டதும், கணபதி, கந்தன், கண்ணன், ராமன், ஐயப்பன் போன்றவர்கள் குழந்தையாக இருந்து நடந்தால் வரும் கொலசின் ஓசையை போலவே உள்ளதே என்று சிந்தனை தெய்வீகமாக மாறிவிட வேண்டும், அப்போது நம் மனக் கண்ணில் அந்த தெய்வீக வடிவங்கள் தெரிய வேண்டும், என்பதே கொலுசு கூறும் கோபுரத்தத்துவம்…
மெட்டி:
திருமங்கை என்ற மன்னனை ஆழ்வாராக மாற்றிய பெருமை மெட்டியையே சாரும், பெண்ணுக்கு பெருமையும், மங்கலமும் தரக்கூடிய அணிகலன்களுள் முக்கியமானது இந்த சின்ன மெட்டி. திருமணம் ஆனதும் கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் பெண்கள் மெட்டி அணிவர், அந்த விரலில் மட்டும் மெட்டி அணிய வேண்டும், என்று பெரியோர்கள் சொல்லி வைத்ததற்கு காரணம் உண்டு.
கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் தான் கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றன. இம்மெட்டி நடக்கும் போது அழுத்தப்படுவதால் கருப்பை வளர்ச்சிக்கு இந்த அழுத்தம் பெரிதும் உதவுகின்றது, அதனால்தான் திருமணத்தில் பெண்கள் காலில் மெட்டியை அணிகின்றனர். காலில் கீழ்ப்பகுதியில் இதயம் முதல் மூளை நரம்புகள் வரை எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் மிக நுண்ணிய நரம்பு ஸ்தானம் உள்ளன…
மெட்டி தேய்ந்த பிறகு தூக்கி எறியக் கூடாது. அதை அப்படியே கடையில் கொடுத்து உருக்கி வரும் புது வெள்ளியால் தான் மறுபடியும் மெட்டி செய்ய வேண்டும்…
எந்த காரணம் கொண்டும் மெட்டியை காலிலிருந்து நீக்கலாகாது என்பர் பெரியோர்கள். அக்காலத்தில் மணமகனுக்கும் மெட்டி உண்டு என்று திருமங்கை ஆழ்வாரின் வரலாற்றிலிருந்து தெரிய வருகிறது…
