தீர்க்க சுமங்கலி பவா என்று ஏன் ஆசிர்வாதம் செய்கிறார்கள் தெரியுமா?
தீர்க்க சுமங்கலி பவா என்றால் மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.
திருமணத்தில் ஒன்று…
60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று…
70 வயது பீமரத சாந்தியில் ஒன்று…
80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று..
96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று… – ஆகியவை ஆகும்.
ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. பூர்வ புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டும் தான் இந்த பாக்கியம் அமையும்.
பூமியானது 360 பாகைகளாகவும், அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 360 பாகைகளையும் கடந்து சென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு, சூரியனுக்கு ஒரு ஆண்டு, செவ்வாய்க்கு ஒரு ஆண்டு, சந்திர பகவானுக்கு ஒரு மாதம், புதன் பகவானுக்கு ஒரு ஆண்டு, சனி பகவானுக்கு 30 ஆண்டு, ராகு மற்றும் கேது பகவானுக்கு ஒன்றைரை ஆண்டுகள் ஆகின்றன. இதை வைத்து தான் தசா புத்தி கணக்கிடப்படுகிறது. ஒருவர் பிறக்கும் போது எந்த தசா நடந்தது, இப்போது என்ன தசா நடக்கிறது என்று கணக்கிடப்பட்டு பலன்கள் சொல்லப்படுகிறது.
இந்த கிரகங்களின் சுழற்சி அடிப்படையில் ஒருவர் பிறந்து, 60 ஆண்டுகள் நிறைவடைந்த நாளிற்கு அடுத்த நாள் வரும் அவரது பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும், ஆண்டு, மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும். அந்த நாளில் தான் ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் நிகழ வேண்டும்.
பூஜையின் போது 84 கலசங்களில் நீர் நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் செய்யப்படும். அப்படி உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் மூலமாக கலசத்தில் உள்ள நீரானது தெய்வ சக்தி பெற்று புனிதமடையும். அதன் பின்னர் அந்த நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் செய்யப்படும்.
அப்படி அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும் 84 கலசங்கள் எதை குறிக்கின்றன தெரியுமா?
தமிழ் வருடம் மொத்தம் 60. இந்த 60 ஆண்டுகளுக்கான தேவதைகளையும், தேவதைகளின் அதிபதிகளாகிய அக்னி, சூரியன், சந்திரன், வாயு, வருணன், அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை, அமிர்த கடேஸ்வரர், நவநாயகர்கள் என்று மொத்தமாக குறிப்பதற்காகத்தான் இந்த 84 கலசங்கள்.
பிரபவ ஆண்டு முதல் அட்சய ஆண்டு வரை:
பிரபவ ஆண்டு முதல் விஷு வருடம் வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவான், சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவான், ஹே விளம்பி வருடம் முதல் விரோதி கிருது வருடம் வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவான், பரிதாபி வருடம் முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவான் அதிபதிகள். தம்பதியினர் தனது 60 வயதில் இருந்துதான் தனது என்ற பற்று, தனது மகன், தனது மகள், தனது சொந்தம் என்ற பற்றை மறந்து, உற்றார் உறவினர்கள் அனைவரும் தன் மக்களே என்று ஒரு குலம் என்கிற எண்ண்ம 70 வயதில் பூர்த்தியாக வேண்டும்.
பீமரத சாந்தி:
தான், தனது என்ற எண்ணம் மறந்து அனைவரும் தன் மக்களே என்ற நிலை பெற்றவர்கள் தான் 70 வயதான போது பீமரத சாந்தி கொண்டாட முடியும். இந்த நிலையில் காமத்தை முற்றிலும் துறந்திருக்க வேண்டும். இந்த வயதில் தான் எல்லா உயிர்களிடத்திலும் இறைவனை காண முடியும். சாதி, மதம், இனம், பேதம் என்று எதுவுமில்லாமல் அனைத்திலும் இறைவனைக் காணும் நிலையை 80ஆவது வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் செய்து கொள்ள வேண்டும். இதற்கு ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன் என்ற பெயர் கூட உண்டு.
