காகத்திற்கு தினமும் உணவளிப்பதால் உண்டாகும் பலன்கள் ஏராளம்!
மனிதனின் பாவ புண்ணியத்தை பார்த்து பலன் தரும் சனி பகவானின் வாகனமான காகத்திற்கு உணவளிப்பதால் ஏராளமான பலன்கள் கிடைக்கும்.
விபத்துகள் குறையும்:
தினமும் காகத்திற்கு உணவளித்தால் உங்களுக்கு திடீரென ஏற்படும் அசம்பாவிதம், விபத்துக்கள், உடல் நலக்குறைவு போன்றவை உங்களை நெருங்கவே செய்யாது. காகம் வீட்டின் முன்பு நின்று கரைத்தால் நல்ல செய்தி வரும் அல்லது விருந்தினர்கள் வருவார்கள், என இது போன்ற பல நம்பிக்கைகள் காகத்தைப் பற்றி நாம் கேட்டதுண்டு.
அப்படிப்பட்ட காகத்திற்கு இயற்கையான மரணம் இல்லை என்று சொல்கின்றார்களே அது உண்மையா?
உண்மையில் கூண்டில் அகப்படாத காகம் தவிற மற்ற காகங்கள் இயற்கையாக மரணம் அடைவதை யாரும் பார்த்திருக்க முடியாது. பல ஆண்டுகளாக வாழ்ந்த காகம் தனது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என விரும்பினால், ஒரு அடர்ந்த காட்டுப் பகுதிக்கு சென்று அங்கே கூண்டு அமைத்து அதில் ஜீவசமாதி அடையும் என்று முன்னோர்கள் கூறுகின்றனர்.
காகத்திற்கு உணவளிப்பது எவ்வளவு புண்ணியம் தரும் என்பது உங்களுக்கு தெரியுமா?
அவ்வளவு சீக்கிரம் உங்கள் உணவை காகம் எடுத்துக் கொள்வது கிடையாது . உண்மையில் உங்கள் பூர்வ புண்ணிய கணக்கை பார்த்து உங்கள் பாவங்களை கணக்கில் கொண்டுதான் நீங்கள் வைத்த உணவை காகம் உண்ணும். அதேபோல ஒருவர் இறந்த பிறகு காகத்திற்கு படையல் வைப்பார்கள் , காகம் உடனே அந்த உணவை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் இறந்தவரின் பாவங்களை கணக்கில் கொண்டு காகம் தாமதமாக்குகிறது என்ற அர்த்தம்.
தினமும் காகத்திற்கு உணவு வைத்து வந்தால் உங்கள் வாழ்வில் பல முன்னேற்றங்களை அடைவீர்கள் . பலர் வீடுகளில் நூற்றுக்கணக்கான காகங்கள் வந்து உணவு உண்டு செல்வதை நாம் பார்த்திருப்போம். நீங்கள் வைத்த உணவை உண்ணலாமா? வேண்டாமா? என்பதை கர்மா அடிப்படையில் காகமே முடிவு செய்யும்.
அதேபோல, தினமும் நேரம் தவறாமல் உங்கள் வீட்டை தேடி வந்து உணவு உண்ணும் காகங்கள் திடீரென வரவில்லை என்றால் உங்களுக்கு ஏதோ சங்கடம் ஏற்பட போகிறது என்று அர்த்தம். தினமும் காகத்திற்கு உணவளிக்க முடியாதவர்கள், சனிக்கிழமை மட்டும் தயிர் சாதம் அல்லது வெறும் சாதத்தில் எள்ளு கலந்து, உணவு வைக்கும் இடத்தை சுத்தம் செய்து காகத்திற்கு படைக்கலாம்.
