புதிய வீட்டில் குடியேற ஏன் கணபதி ஹோமம் செய்யவேண்டும்?
புதிய வீடு கட்டுவதற்கு முன்பாக அந்த இடம் காலியாக இருந்திருக்கும். அப்படியில்லை என்றால் பழைய பாழடைந்த வீடாக இருந்திருக்கும். அப்படி காலியாக இருக்கும் இடங்களில் துர்தேவதைகள் வாசம் செய்வாள். அதுமட்டுமின்றி வீடு கட்டும் பணி செய்து கொண்டிருக்கும் போது வேலை பார்ப்பவர்களுக்கு ரத்தக் காயம் ஏற்படக் கூடும். இவ்வளவு ஏன், வீடு வாஸ்து சாஸ்திரப்படி கட்டுகிறோமா என்பது குறித்து நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
துர்தேவதைகள், ரத்தக் காயம், வாஸ்து சாஸ்திரம் என்று பல குறைகளை கடந்து நாம் கட்டும் வீடானது எப்போதும் லட்சுமி கடாட்சத்துடன் அமைய வேண்டும். இதற்காக புதிய வீடு கட்டும் ஒவ்வொருவரும் கணபதி ஹோமம் செய்கிறார்கள். சிலர் கணபதி ஹோமம் செய்வதில்லை.
கணபதி ஹோமம் மட்டுமல்லாது, நவகிரஹ ஹோமம், வாஸ்து ஹோமம், மகாலட்சுமி ஹோமம் ஆகியவற்றையும் சேர்த்துச் செய்வார்கள். எந்தவித குறையுமின்றி அந்த வீட்டில் செல்வம் தழைக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற ஹோமங்களை புதிய வீட்டில் குடியேறுவதற்கு முன்பு செய்கிறார்கள்.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் எதற்கெடுத்தாலும் வீட்டில் பூஜை செய்ய வேண்டும் என்று சிலர் கூறி நம்மிடமிருந்து பணம் பெறுகிறார்கள். உண்மையில், வீட்டில் லட்சுமி கடாட்சம் பெறுக என்ன செய்ய வேண்டும், நாம் கட்டும் வீட்டில் செல்வ செழிப்பு உண்டாக வேண்டும் என்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் புரிந்து கொண்டு அதற்குரிய சாஸ்திர சம்பிரதாயத்தை செய்ய வேண்டும்.
பழைய வீட்டை புதுப்பித்து புது வீடு கட்டுவதாக இருந்தாலும் சரி, பூர்வீக இடத்தில் வீடு கட்டுவதாக இருந்தாலும் சரி, முதலில் வாஸ்து பரிகாரத்தை செய்து அதன் பிறகு வீடு கட்ட ஆரம்பிக்க வேண்டும். மேலும், வீடு கட்டிக் கொண்டிருக்கும் போது கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்கவும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எல்லா சுப நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படுவது கணபதி ஹோமம்.
இந்த ஹோமம் செய்தாலே மற்ற ஹோமத்தை செய்த பலன் அடைகிறோம். மஹா கணபதி ஹோம மந்திரங்களை உருவாக்கியவர் கனகரிஷி. ஹோமமாகச் செய்தவர் காஷ்யப் மகரிஷி. இவர், அருகம் புல்லின் மகத்துவத்தை உலகம் அறியச் செய்தவர்.
