தும்மினால் ஆயுசு நூறு என்று கூறுவது ஏன்?
தும்மல் என்பது இயற்கையான ஒன்று. ஒருவருக்கு தும்மல் வருகின்றது எனில் அதை அவர்களால் அடக்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தும்மல் வரும். ஏன், எதற்கு தும்மல் வருகிறது? எப்போது தும்மல் வருகிறது என்று யாராலயும் சொல்ல முடியாது. அப்படி தும்மும் பொழுது ஆயுசு நூறு என கூறுவார்கள். அப்படி ஏன் கூறுகிறார்கள்? அவ்வாறு கூறுவதால் என்ன பயன்? என்பதை பற்றி என்றாவது நினைத்திருக்கிறீர்களா?
தும்மினால் ஆயுசு நூறு என்று கூறுவது ஏன்?
ஒருவர் தும்மும் பொழுது அவரை சுற்றி இருப்பவர்கள் ஆயுசு நூறு என்று கூறுவார்கள். அதாவது அதனுடைய உண்மையான பொருள் என்னவென்றே தெரியாமல் கூறுவார்கள். அந்த வார்த்தைகளிலும் அறிவியல் ஒளிந்திருக்கிறது.
ஜலதோஷம் பிடித்தாலோ அல்லது தொற்று நோய் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது தூசிகளை நாம் சுவாசித்தாலோ தான் தும்மல் ஏற்படும். இவ்வாறு தும்மல் ஏற்படுவது, உடலுக்கு கெடுதல் ஏற்படப்போகின்றது என்பதை உங்களுக்கு எச்சரிப்பதற்காக தான். இவற்றிலிருந்து காத்து கொண்டால் ஆயுசு நூறு என்பதே இதன் பொருள் ஆகும். ஆகையால் தான் பெரியோர்கள் தும்மும்போது ஆயுசு நூறு என்று சொல்லியிருக்கிறார்கள்.
தும்மலை எப்படி தடுக்கலாம்?
- கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் கொண்டு நுனி மூக்கை லேசாக ஆட்டினால் தும்மல் வராது.
- வாயை சிறு துணி கொண்டு மூடிவிட்டு, மூக்கின் வழியாக வேகமாக காற்றை வெளியே விடுங்கள்.
- சிறு துணி அல்லது டிஷ்யூ பேப்பரால் வாயை மூடியபடி தும்மினால் தும்மலின் அளவு குறையும்.
- எக்காரணத்தை கொண்டும் உள்ளங்கையை குவித்து மூக்குக்கும், வாய்க்கும் இடையில் வைத்து தும்மாதீர்கள். அவ்வாறு தும்மினால் கிருமிகளானது உங்களின் உள்ளங்கையிலேயே தங்கிவிடும்.
- வீட்டிலிருக்கும் பொழுது தும்மினால், வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பை போட்டு மூக்கை கழுவுங்கள்.
- வீட்டில் செல்ல பிராணிகள் இருந்தால் அதை தூரமாக இருக்க வையுங்கள். உங்களுக்கு ஏற்படும் தும்மலுக்கு செல்ல பிராணிகள் கூட காரணமாக இருக்கலாம்.
- ஆவி பிடிப்பது சிலருக்கு தும்மலை தடுக்கும். அவ்வாறு இருப்பவர்கள் வேப்பிலையுடன், மஞ்சள் பொடி சேர்த்து ஆவி பிடிப்பது நல்லது.
- தூசு அலர்ஜி உள்ளவர்கள், தூசு அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். மேலும் வீட்டில் தூசு சேராமலும் பார்த்து கொள்ளுங்கள்.
- ஏ.சி காற்று நேராக முகத்தில் படும்படி அமராதீர்கள். அவ்வாறு அமரும்போது அதிகப்படியான தும்மல் ஏற்படும்.
- ஊதுபத்தி புகை, பட்டாசு புகை மற்றும் வாகன புகை என எந்தவொரு புகையையும் சுவாசிக்காமல் இருந்தாலே தும்மல் வராமல் காக்க முடியும்.