புதினா சாதம், புதினா தோசை செய்வது எப்படி?

14

புதினா சாதம், புதினா தோசை செய்வது எப்படி?

சமையல் கமகம என்று இருப்பதற்கு கொத்துமல்லி, கறிவேப்பிலை என்று எப்போதும் வீடுகளில் வைத்திருப்போம். இதில், சட்னி மற்றும் வெஜ் பிரியாணி என்று செய்யும் போது புதினா பயன்படுத்துவோம். அப்படியும் இல்லையென்றால், புதினாவை சட்னி செய்வதற்கு பயன்படுத்துவோம். உணவு செரிமானம் ஆவதற்கு புதினா முக்கிய பங்காற்றுகிறது. இதை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாகும். இரும்புச்சத்தும் விட்டமின் சி, டி, சுண்ணாம்பு சத்தும் புதினாவில் நிறைந்துள்ளன.

புதினா சாதம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  1. அரிசி – 2 கப்
  2. தக்காளி – 2 (நறுக்கியது)
  3. பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)
  4. எலுமிச்சை சாறு – தேவையான அளவு
  5. கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
  6. உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு:

  1. புதினா அரைக்கட்டு கொத்தமல்லி – அரை கட்டு
  2. பூண்டு – 10 அல்லது 12 பல்
  3. பட்டை – 1
  4. லவங்கம் – 1
  5. பச்சை மிளகாய் – 4

இவற்றை தண்ணீர் சேர்க்காமல் அரைக்க  வேண்டும்

தாளிப்பதற்கு:

  1. ஆயில்
  2. பட்டை லவங்கம் – 2
  3. முந்திரி – 4
  4. கருவேப்பிலை – தேவையான அளவு
  5. சீரகம் – 1/2 ஸ்பூன்
  6. பிரிஞ்சி இலை – 1

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் ஆயில் சேர்த்து தாளிப்பதற்கு தேவையான பொருட்களை அதில் போட்டு தாளித்து வெங்காயத்தை அதில் சேர்க்க வேண்டும். தக்காளி சேர்த்து நன்கு வதக்கி இதில் அரைத்த பொருட்களை சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் கிளற வேண்டும். அதன் பிறகு அதனுடன் அரிசியை சேர்க்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரையில் காத்திருந்து இறக்கி விட வேண்டும். அதனுடன் தேவையான அளவு எலுமிச்சை சாறு பிழிந்து கிளற வேண்டும்.

மறக்க கூடாத ஒன்று: பாஸ்மதி அரிசிக்கு ஒரு கப்பிற்கு 2, பச்சை அரிசிக்கு ஒரு கப்பிற்கு 3 கப், புழுங்கல் அரிசிக்கு ஒரு கப் 3 கப் என்று தண்ணீர் சேர்க்க வேண்டும்.

புதினா தோசை ஊற்றுவது எப்படி?

தேவையான பொருட்கள்:

  1. பச்சரிசி – 1/2 கப்
  2. வரகு அரிசி, துவரம் பருப்பு – இரண்டும் ஒரு கைப்பிடி
  3. புதினா – ஒரு கட்டு
  4. மிளகு – ஒரு டீஸ்பூன்
  5. சீரகம் – 1/2 டீஸ்பூன்
  6. உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசி வரகு அரிசி துவரம் பருப்பு உளுந்து இவற்றை ஒன்றாக மூன்று அல்லது நான்கு மணிநேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் மிளகு, சீரகம், புதினா சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். உப்பு சேர்த்து மாவை புளிக்க வைக்க 5 மணி நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். பின்பு தோசை ஊற்றினால் நன்றாக இருக்கும். இதற்கு தொட்டுக்க தக்காளி சட்னி, வெங்காய சட்னி, தேங்காய் சட்னி நல்ல ஒரு காம்பினேஷனாக இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். தக்காளி சட்னி இல்லையென்றால் தக்காளி தொக்கும் வைத்து சாப்பிடலாம்.