பாரம்பரியமான பாகற்காய் பிட்லை செய்யலாம் வாங்க
தேவையான பொருட்கள்:
பெரிய பாகற்காய் – 2
வெள்ளை நிற கொண்டைகடலை – கால் கப் (வேக வைத்தக் கொள்ள வேண்டும்)
தயிர் – 3 மேசைக்கரண்டி
துவரம் பருப்பு – 2 கப்
தேங்காய் துருவல் – 1 கப்
மிளகாய் வற்றல் – 8
தனியா – 2 மேசைக்கரண்டி
கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
புளி – எலுமிச்சை அளவு (ஊற வைத்து கரைத்துக் கொள்ள வேண்டும்)
வெல்லம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
பெருங்காயத் தூள் – கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை விளக்கம்:
முதலில் பாகற்காயை விதை நீக்கி சிறு வளையங்களாக நறுக்கி கொள்ள வேண்டும். பிறகு, தயிர் பிசைந்து ஊற வைக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து நன்கு அலசி வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஊற வைத்த புளியைக் கரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் சிறிது ஊற்றி தனியா, கடலைப் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை வறுத்துக் கொள்ள வேண்டும். தேங்காய்த் துருவலை தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு, இவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். கரைத்த புளித் தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதி வந்ததும் வேகவைத்த பாகற்காய், அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதன் பின்னர் துவரம் பருப்பை குக்கரில் வேக வைக்க வேண்டும்.
துவரம் பருப்பை நன்கு மசித்து கொதிக்கும் புளித் தண்ணீரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் வேகவைத்த கொண்டை கடலையும் சேர்த்து கொதித்ததும் இறக்கி, வெல்லத்தூள் சேர்த்துக் கலக்க வேண்டும். அதன் பின்னர் வாணலியில் சிறிது தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், மிளகாய் வற்றல் தாளித்து கொட்ட வேண்டும். பாரம்பரிய உணவான பாகற்காய் பிட்லை சுவைக்க தயார். இந்த பாகற்காய் பிட்லை யை சூடான சாதத்துடன் பரிமாற வேண்டும்.
