வயிற்று வலிக்கான மருத்துவம் என்ன?
நம் உடலில் பெரும் பகுதி எது என்றால் அது வயிறு தான். நாம் சாப்பிடும் உணவு, குடிக்கும் தண்ணீர் இவற்றையெல்லாம் செரிமானம் செய்யக்கூடிய இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், பித்தப்பை, கணையம் போன்ற ஜீரண மண்டல உறுப்புகள் அடங்கியுள்ளது.
வயிற்று பகுதியில் பல்வேறு காரணங்களால் பாதிப்பு ஏற்பட்டு வலி ஏற்படுகிறது. வயிற்று வலி வருவதற்கு வயது வித்தியாசம் எல்லாம் கிடையாது. அப்படி வயிறு வலிக்க என்ன காரணம் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வயிற்றில் குடல்புண், கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவது, செரிமான குறைபாடு, நச்சுணவு, இரைப்பைப் புண், இரைப்பை அழற்சி, குடல் புழுத் தொல்லை, குடல் அழற்சி, குடல் வால் அழற்சி, குடல் அடைப்பு, மாதவிடாய், மலச்சிக்கல், சிறுநீரக அழற்சி, சிறுநீரகக் கற்கள், பித்தப்பை அழற்சி, பித்தப்பைக் கற்கள் போன்ற பல்வேறு காரணங்களால் வயிற்றுவலி ஏற்படலம்.
வயிற்றில் உள்ள பல உறுப்புகளில் எது பாதித்தாலும் வலி வரலாம். குறிப்பாக நெஞ்சு எரிச்சல் தொடர்பான பிரச்னை, பித்தப்பை கற்கள், பித்தக் குழாய் கற்கள், சிறுகுடல் சுருக்கம், பெருங்குடல் அழற்சி மற்றும் வயிற்றில் ஏற்படும் புற்று நோயோடு, முன் சிறு குடலில் ஏற்படும் புண்ணும் (அல்சர்) வயிற்று வலிக்கு ஒரு காரணமாகும். உணவுக்குழாய் மற்றும் இரைப்பை இணையும் இடத்தில் உள்ள வால்வில் ஏற்படும் பிரச்னையால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது.
சில சமயங்களில் வயிற்று வலியோடு நெஞ்சு எரிச்சலும் இருக்கும். அத்துடன் மன உளைச்சல் மற்றும் அதிகமான காரம் சாப்பிடுவதால் வயிற்று வலி ஏற்படும். உணவு சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்பட்டால், அதற்கு முக்கியமான காரணம் பித்தப்பை கற்களாகும். அதேபோல் அடி வயிற்றில் வலி ஏற்பட்டால் குடல் பிரச்னை குறிப்பாக சுருக்கம் மற்றும் புற்றுக்கட்டியாக இருக்கக்கூடும். பசி இல்லாத தன்மை மற்றும் மாதக்கணக்கில் நீடிக்கும் வயிற்று வலிக்கு காரணம் புற்று நோயாக இருக்கக்கூடும். இதனால் மலத்தில் ரத்தம் மற்றும் வயிற்றுப் பெருக்கம் போன்ற பல பிரச்னைகள் ஏற்படலாம்.
அல்சர் உள்ள நோயாளிக்கு அதிகமாக பசி எடுக்கும். இவர்களுக்கு உணவு சாப்பிட்ட பிறகு வயிற்று வலி குறையும். அதிகமான கவலை, மன உளைச்சல், உணர்ச்சி வேகமான செயல்பாடுகள் போன்ற காரணங்களால் வயிற்றில் அமிலங்கள் சுரக்கின்றன. இந்த அமிலங்களின் தாக்கத்தால்தான் பெரும்பாலும் வயிற்றில் புண் உண்டாகிறது. இதனால் பசி குறைதல், வயிற்றில் வலி, செரிமானம் குறைதல் போன்றவை ஏற்படுகிறது.
வலதுபுறத்தில் வலி ஏற்பட்டால், சிறுநீரகத்தில் கல், அப்பென்டிக்ஸ் அல்லது அல்சர் போன்றவை இருக்கலாம். அதுவே இடதுபுறத்தில் வலி ஏற்பட்டால், குடலில் புண் (அதிக வலி இருந்தால் குடல் புற்றுநோய்), குழாய்களில் ஏதேனும் சதை வளர்ச்சி, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் என்பதற்கான அறிகுறி ஆகும். மலச்சிக்கலும் வயிற்றுவலியை உண்டாக்கும்.
அதிலும் எப்போது குடலின் இயக்கம் சரியாக இயங்காமல், மிகவும் வலுவற்று இருக்கிறதோ, அப்போது அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படும். ஏனெனில், அந்த நேரத்தில் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறாமல், சரியான அழுத்தமின்றி உடலிலேயே தங்கிவிடுகின்றன. உடலில் வாயு அதிகமாக உள்ளதோ, அப்போது வயிற்றில் ஒருவித வீக்கம் ஏற்படுவது போல் இருப்பதோடு, வயிற்றில் எரிச்சலை உண்டாக்குவது போல் இருக்கும்.
இதற்கு உண்மையான காரணம், வயிற்றில் புண் இருக்கிறது என்பதாகும். அதனால்தான் வயிற்றில் வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படுகிறது. காரமான உணவு, செரிமானமின்மை மற்றும் வாயுத்தொல்லை போன்றவை வயிற்றில் புண்களை ஏற்படுத்தி, வலியை உண்டாக்குகின்றன.
வயிற்று வலியை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை விட, சிறு சிறு இடைவெளிகளில் உணவுகளை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி ஏற்படாது. உண்ணும் உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும். இதனால் விரைவில் உணவு செரிமானம் அடைவதோடு, உடல் எடையும் குறையும். வேகமாக சாப்பிட்டால் உடலில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, வலி ஏற்படும்.
உணவை சரியான அளவில் சாப்பிட்டு, அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு கண்ணாடி பாட்டிலில் வெந்நீரை நிரப்பிக்கொண்டு, அதை ஒரு துணியால் சுற்றிக்கொண்டு, வயிற்றில் ஒத்தடம் தரலாம்.